டெல்லி ஆட்டோ ஷோவில் ஒரு கோடிக்கு போலி நுழைவு டிக்கெட் விற்பனை
டெல்லி ஆட்டோ கண்காட்சியில் ஒரு கோடிக்கு போலி நுழைவு டிக்கெட்டுகள் விற்பனை செய்யப்பட்டுள்ளதாக பரபரப்பு தகவல் வெளியாகியுள்ளது. இதுதொடர்பாக, டெல்லி போலீசார் விசாரணையை துவங்கியுள்ளனர்.

பார்வையாளர் வருகை எண்ணிக்கை அடிப்படையில் உலகின் இரண்டாவது சர்வதேச ஆட்டோ கண்காட்சியாக டெல்லி ஆட்டோ கண்காட்சி கூறப்படுகிறது. கடந்த 5ந் தேதி துவங்கிய டெல்லி ஆட்டோ கண்காட்சி கடந்த 11ந் தேதி வரை நடந்தது.
கூட்ட நெரிசலை தவிர்ப்பதற்காக பார்வையாளர்கள் எண்ணிக்கை நாள் ஒன்றுக்கு ஒரு லட்சத்திலிருந்து 30,000 ஆக ஏற்பாட்டாளர்கள் குறைத்தனர். இருப்பினும், வழக்கம்போல் கூட்ட நெரிசலால் பல இடையூறுகள் ஏற்பட்டதாக ஆட்டோ கண்காட்சியில் பங்கேற்ற நிறுவனங்கள் தெரிவித்தன.
இந்த நிலையில், டெல்லி ஆட்டோ கண்காட்சியில் கூட்ட நெரிசல் ஏற்பட்டதற்கு போலி நுழைவு டிக்கெட்டுகளில் ஏராளமானோர் உள்ளே வந்ததும் ஒரு காரணம் என்று கருதப்படுகிறது. இதுதொடர்பாக, டெல்லி போலீசார் விசாரணையை துவங்கியுள்ளனர்.
இதுகுறித்து விசாரணை நடத்தி வரும் போலீஸ் அதிகாரி ஒருவர் கூறுகையில்," ஒரு கோடி மதிப்புக்கு போலி நுழைவு டிக்கெட்டுகள் விற்பனை செய்யப்பட்டுள்ளதாக கருதுகிறோம்.
போலி நுழைவு டிக்கெட் விற்பனை செய்வது தெரிந்தவுடன் கண்காட்சியின் கடைசி நாளன்று சம்பந்தப்பட்டவர்களை பிடிக்க முயற்சி செய்தோம். ஆனால், யாரும் சி்க்கவில்லை. இதுதொடர்பாக, தீவிர விசாரணை நடந்து வருகிறது. குற்றவாளிகள் விரைவில் பிடிபடுவார்கள்," என்று கூறினார்.


Click it and Unblock the Notifications








