110 சிசி எஞ்சினுடன் புதிய டியோ ஸ்கூட்டர்: ஹோண்டா அறிமுகம்
கூடுதல் சிசி திறன் கொண்ட எஞ்சின் மற்றும் கூடுதல் அம்சங்களுடன் புதிய டியோ ஆட்டோமேட்டிக் ஸ்கூட்டரை ஹோண்டா மோட்டார்சைக்கிள் நிறுவனம் அறிமுகம் செய்துள்ளது.

கடந்த 2002ம் ஆண்டு டியோ ஸ்கூட்டரை ஹோண்டா இந்திய மார்க்கெட்டில் அறிமுகம் செய்தது. குறிப்பாக, மாநகரங்களில் டியோ ஸ்கூட்டருக்கு அமோக வரவேற்பை பெற்றுள்ளது.
குறைந்த விலை, ஸ்டைலான வடிவமைப்பு கொண்ட டியோ ஸ்கூட்டர் இளைஞர்கள் மத்தியில் பிரபலமான ஸ்கூட்டர் மாடலாக திகழ்கிறது.
இந்த நிலையில், மேம்படுத்தப்பட்ட அம்சங்களுடன் புதிய டியோ ஸ்கூட்டரை டெல்லி ஆட்டோ கண்காட்சியில் ஹோண்டா மோட்டார்சைக்கிள் நிறுவனம் அறிமுகம் செய்துள்ளது.
102 சிசி எஞ்சினுடன் விற்பனை செய்யப்பட்டு வந்த டியோ ஸ்கூட்டரில் தற்போது புதிய 110 சிசி எஞ்சின் பொருத்தப்பட்டிருக்கிறது. இதன்மூலம், 10 சதவீதம் கூடுதல் பிக்கப்பை தரும் என்பதால் ரைடிங்கில் புதிய த்ரில்லிங் அனுபவத்தை பெற முடியும்.
தவிர, இந்த எஞ்சின் முந்தைய மாடலைவிட 15 சதவீதம் கூடுதல் மைலேஜை தரும் என்றும் ஹோண்டா தெரிவித்துள்ளது.
தவிர, கால்களை தாராளமாக வைத்து செல்வதற்கு வசதியாக புதிய டியோவின் லெக் ரூம் வடிவமைக்கப்பட்டு உள்ளது. மேலும், பாதுகாப்பான பயணத்தை வழங்கும் வகையில், கோம்பி பிரேக்குகள் பொருத்தப்பட்டிருக்கின்றன.
புதிய டியோ ஸ்கூட்டரில் ட்யூப்லெஸ் டயர்கள் பொருத்தப்பட்டிருப்பதால் ரைடிங்கில் கூடுதல் பாதுகாப்பை வழங்கும் என்பது குறிப்பிடத்தக்கது. மேலும், பராமரிப்பு தேவையற்ற பேட்டரியும் பொருத்தப்பட்டிருப்பதால் கொடுக்கும் பணத்துக்கு தரமான தயாரிப்பாக ஹோண்டா டியோ ஸ்கூட்டர் வருகிறது.


Click it and Unblock the Notifications








