ஹைட்ரஜனில் இயங்கும் ஆட்டோ ரிக்ஷாவை அறிமுகப்படுத்திய மஹிந்திரா
ஹைட்ரஜனில் இயங்கும் உலகின் முதல் ஆட்டோ ரிக்ஷாக்களை டெல்லி ஆட்டோ கண்காட்சியில் மஹிந்திரா அறிமுகப்படுத்தியுள்ளது. மேலும், சோதனை முறையில் இந்த ஆட்டோ ரிக்ஷாக்கள் தற்போது டெல்லி ஆட்டோ கண்காட்சி நடைபெறும் பிரகதி மைதானத்தில் சோதனை முறையில் இயக்கி பரிசோதிக்கப்பட்டு வருகிறது.

சுற்றுச்சூழலுக்கு தீங்கு விளைவிக்காத மாற்று எரிபொருள் தொழில்நுட்பத்தை உருவாக்குவதில் அனைத்து வாகன தயாரிப்பாளர்களும் மும்முரமாக ஈடுபட்டுள்ளனர். எலக்ட்ரிக் கார் தொழில்நுட்பத்தை உருவாக்குவதில் அனைத்து தீவிரமாக ஈடுபட்டுள்ளன.
அதேவேளே, ஹைட்ரஜனில் இயங்கும் வாகனங்களும் சுற்றுச்சூழல் மாசுபடுவதை வெகுவாக தடுக்கும். ஆனால், ஹைட்ரஜன் எரிபொருளை சேமித்து வைப்பதில் நடைமுறையில் பல்வேறு பாதுகாப்பு அச்சுறுத்தல்கள் இருப்பதாலும், எளிதில் தீப்பிடிக்கும் ஆபத்து இருப்பதாலும் ஹைட்ரஜன் எரிபொருள் தொழில்நுட்பத்தை மேம்படுத்துவதில் ஏனைய நிறுவனங்கள் நாட்டம் செலுத்தவில்லை.
இருப்பினும், பல நிறுவனங்கள் ஹைட்ரஜன் எரிபொருள் தொழில்நுட்பத்தை மேம்படுத்துவதற்கு முயற்சிகள் மேற்கொள்ள தவறவில்லை. அந்த வகையில், ஹைட்ரஜனை எரிபொருளாக கொண்டு இயங்கும் புதிய பயணிகள் ஆட்டோ ரிக்ஷாவை மஹிந்திரா நிறுவனம் டெல்லி ஆட்டோ கண்காட்சியில் அறிமுகம் செய்துள்ளது.
ஹைஆல்பா என்று பெயரிடப்பட்டுள்ள இந்த ஆட்டோ ரிக்ஷாவை தேசிய தொழில்துறை மேம்பாட்டு கழகம்(யுஎன்ஐடிஓ) மற்றும் சர்வதேச ஹைட்ரஜன் எரிசக்தி தொழில்நுட்ப மையத்தின்(ஐசிஎச்இடி) ஒத்துழைப்பில் மஹிந்திராவும் டெல்லி ஐஐடியும் இணைந்து உருவாக்கியுள்ளன. இத்திட்டத்திற்கு மத்திய புதுப்பிக்கத்தக்க எரிசக்தி அமைச்சகமும் உதவி செய்துள்ளது.
இதுகுறித்து மஹிந்திரா ஆட்டோமோட்டிவ் பிரிவு தலைவர் பவன் கோயங்கோ கூறியதாவது:
"ஹைட்ரஜனில் இயங்கும் 15 ஆட்டோ ரிக்ஷாக்களை சோதனை முறையில் பிரகதி மைதானத்தில் இயக்கி வருகிறோம். டெல்லி ஆட்டோ கண்காட்சி ஏற்பாட்டாளர்களின் பயன்பாட்டுக்காக இந்த ஆட்டோ ரிக்ஷாக்கள் பயன்படுத்தப்பட்டு வருகின்றன.
இந்த ஆட்டோ ரிக்ஷாக்களுக்கு எரிபொருள் நிரப்புவதற்காக அமெரிக்காவை சேர்ந்த நிறுவனத்தின் உதவியுடன் பிரகதி மைதானத்தில் ஹைட்ரஜன் எரிபொருள் நிலையத்தையும் அமைத்திருக்கிறோம். வர்த்தக ரீதியில் விற்பனைக்கு கொண்டு வரும் நிலையை இந்த ஆட்டோ ரிக்ஷாக்கள் எட்டவில்லை," என்றார்.
எல்பிஜி ஆட்டோக்களின் விலையை விட இந்த ஆட்டோ ரிக்ஷாக்கள் தயாரிக்க ரூ.20,000 முதல் ரூ.25,000 கூடுதல் செலவாகும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. அதேவேளை, ஒரு கிலோ ஹைட்ரஜன் எரிபொருளின் விலை ரூ.250 என்ற அளவில் இருக்கிறது. ஆனால், அதிக எரிபொருள் நிலையங்கள் அமையும்போது இந்த விலை குறையும். அப்போதுதான், ஹைட்ரஜன் எரிபொருள் வாகனங்கள் வர்த்தக ரீதியில் வெற்றி பெற முடியும்.


Click it and Unblock the Notifications








