ஏகே-47 எந்திர துப்பாக்கிக்கும் பெப்பே சொல்லும் ஆடி கார் இந்தியாவில் அறிமுகம்!
டெல்லி ஆட்டோ எக்ஸ்போவில் பார்வையாளர்களை தங்கள் அரங்கின் பக்கம் வளைக்க பல்வேறு யுக்திகளை கார் தயாரிப்பு நிறுவனங்கள் கையாண்டிருந்த நிலையில், ஒரு கார் மட்டும் பொது பார்வையிலிருந்து விலகி ரகசியமாக அமைக்கப்பட்டிருந்த அறையில் வைக்கப்பட்டு சிறப்பு தரிசனம் தந்தது. அந்த கார் எது, அதற்கான காரணம் என்ன தெரியுமா?
வாருங்கள் அதற்கான விடையையும், அந்த காரின் ரகசிய பக்கத்தையும் எமது வாசகர்களுக்கும், டெல்லி ஆட்டோ எக்ஸ்போவில் இந்த காரை பார்க்க முடியாமல் திரும்பியவர்களுக்காகவும் அதன் ரகசிய அம்சங்கள் பற்றியத் தகவல்களை இங்கே போட்டு உடைக்கிறோம்.

கார் மாடல் விபரம்
ஆடி ஏ8எல் செக்யூரிட்டி என்ற குண்டு துளைக்காத வசதி கொண்ட மாடல்தான் அது. பொது பார்வையிலிருந்து விலகி, தகுதியுடைய வாடிக்கையாளர்களுக்கு மட்டும் தன் அங்கங்களையும், ரகசிய பாகங்களையும் காட்டிக் கொண்டிருந்த இந்த கார் பலருக்கும் தென்படாமல் ஏமாற்றம் தந்தது. தற்போது விஆர்9 என்ற பாதுகாப்பு தரத்திற்கு இணையாக மேம்படுத்தப்பட்டு இந்தியாவில் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.

வலுவான கட்டமைப்பு
இது ஆடி ஏ8எல் அடிப்படையிலான பாதுகாப்பு அம்சங்கள் சேர்க்கப்பட்ட கார். எனவே, நீங்கள் சாதாரணமாக சாலையில் பார்க்கும் ஆடி ஏ8எல் காருக்கும், இதற்கும் அதிக வித்தியாசங்கள் தெரியாது. ஆனால், சற்று துருவி பார்த்தோமானால், இந்த காரில் பயன்படுத்தப்பட்டிருக்கும் உலோக கலவைகள் மிகவும் பிரத்யேகமானது. அரமைடு ஃபேப்ரிக், அலுமினிய அலாய் மற்றும் ஹாட் ஃபார்ம்டு ஸ்டீல் ஆகிய உலோக கலவை பாகங்களுடன் மிக வலுவான கட்டமைப்பு கொடுக்கப்பட்டுள்ளது. இதற்கு நிகரான மாடல்களுடன் ஒப்பிடும்போது இலகு எடை கொண்டது. இந்த காரில் இருக்கும் ஜன்னல் கண்ணாடிகள், சாதாரண ஏ8 காரைவிட 6 மடங்கு கூடுதல் தடிமன் கொண்டது. கையெறி குண்டுகள், ஏகே-47 ரக எந்திர துப்பாக்கியின் தாக்குதல்களில் கூட சேதமடையாது.

தயாரிப்பு
மிகுந்த பாதுகாப்பு அம்சங்களுடன் கட்டமைக்கப்படும் இந்த ஆடி ஏ8எல் செக்யூரிட்டி கார் மிகுந்த சிரத்தையுடன் உருவாக்கப்படுகிறது. ஒரு கார் 450 மணி நேர மனித ஆற்றலில், கைதேர்ந்த பணியாளர்களை கொண்டு உருவாக்கப்படுகிறது.

எஞ்சின்
குண்டு துளைக்காத அம்சங்கள் கொண்ட இந்த காரின் எடையை இலகுவாக சுமந்து செல்வதற்கும், அவசர காலங்களில் ஆபத்தான இடங்களை விட்டு விரைவாக வெளியேற ஏதுவாக சக்திவாய்ந்த எஞ்சின் பயன்படுத்தப்பட்டு இருக்கிறது. இந்த காரில் 500பிஎஸ் பவரை அளிக்க வல்ல டபிள்யூ12 பெட்ரோல் எஞ்சின் மற்றும் 429 பிஎச்பி பவரை அளிக்க வல்ல 4.0 லிட்டர் வி8 எஞ்சின் என இருவிதமான எஞ்சின் ஆப்ஷன்களில் கிடைக்கிறது. ஆடி நிறுவனத்தின் பிரத்யேக க்வாட்ரோ ஆல் வீல் டிரைவ் சிஸ்டமும் உள்ளது. இது வழுக்குத் தரை மற்றும் சாலைகளிலிருந்து எளிதாக வெளியேற உதவும். மணிக்கு 210 கிமீ வேகம் வரை தொடக்கூடிய இந்த கார் 0- 100 கிமீ வேகத்தை 7.1 வினாடிகளில் தொட்டுவிடும்.

தப்புவதற்கான வழி
அவசர சமயங்களை எளிதாக கையாண்டு, பாதுகாப்பான வழியில் தப்பிப்பதற்கு ஏதுவாக இந்த காரில் நவீன மேப் வசதியும் உள்ளது. தவிர, இன்டர்காம் அல்லது தொலைபேசி வழியாக போலீசாரை தொடர்பு கொள்வதற்கும், காரில் பயணிப்பவர்கள் ஆபத்தில் இருப்பதை வெளியில் இருப்பவர்களுக்கு தெரிவிப்பதற்கும் மைக் மற்றும் ஸ்பீக்கரும் கொடுக்கப்பட்டு இருக்கிறது. மேலும், சாலையில் எதிரில் வருபவர்களுக்கு ஆபத்தை உணர்த்தி, காருக்கு வழி விடுவதை தெரிவிக்கும் விதத்தில் எச்சரிக்கை விளக்கும் கொடுக்கப்பட்டு இருக்கிறது.

கதவு திறக்கும் வழி
ஒருவேளை குண்டு வெடிப்பில் கார் சிக்கிய பின் கதவுகள் நசுங்கி, சேதமடைந்து விடும் சமயத்தில் திறக்க முடியாத நிலை ஏற்படும். அப்போது, ஒரு பட்டனை அழுத்தினால், காரின் கதவுகளில் வைக்கப்பட்டிருக்கும் வெடி பொருள் வெடித்து கதவுகளை திறந்துவிடும் வசதியும் உள்ளது. இதன்மூலம், காரில் பயணிப்பவர்கள் எளிதாக வெளியேற முடியும்.

டயர்கள்
இந்த காரில் 19 இன்ச் வீல்கள் கொடுக்கப்பட்டிருக்கின்றன. அதில் மிச்செலின் நிறுவனம் தயாரித்து வழங்கும் விசேஷ டயர்கள் பொருத்தப்பட்டு இருக்கின்றன. இந்த டயர்கள் குண்டு வெடிப்பில் கூட சேதமடையாது தன்மை பெற்றிப்பதுடன், காற்றழுத்தம் குறைந்தாலும், காரை குறிப்பிட்ட வேகத்தில் செலுத்த உதவும். அதற்காக பாலிமர் ரிம்கள் பொருத்தப்பட்டிருக்கின்றன. இதன்மூலமாக, டயர் பஞ்சரானாலும் காரை மணிக்கு 80 கிமீ வேகம் வரை காரை செலுத்த முடியும்.

தீத்தடுப்பு கருவிகள்
இந்த காரில் இரண்டு தீத்தடுப்பு சாதனங்கள் பொருத்தப்பட்டு இருக்கின்றன. குண்டு வெடிப்பில் கார் தீப்பற்றினால் கூட, இந்த தீத்தடுப்பு சாதனங்கள் தானியங்கி முறையில் இயங்கி, தீயை அணைக்கும். இவை சென்சார் உதவியுடன் இயங்கும். அதேபோன்று, ரசாயனத் தாக்குதல்களிலிருந்து பயணிகளை பாதுகாக்கும் வகையில், சுத்திகரிக்கப்பட்ட தூய காற்றை கேபினுக்குள் வழங்கும் சாதனமும் இருக்கிறது.

விலை
ஆடி ஏ8எல் செக்யூரிட்டி சொகுசு கார் ரூ.9.12 கோடி விலையில் இந்தியாவில் விற்பனைக்கு கிடைக்கிறது. இந்த காரை வாங்கும் உரிமையாளர்கள் நியமிக்கும் ஓட்டுனர்களுக்கு காரை எவ்வாறு இயக்குவது என்பது குறித்த பிரத்யேக பயிற்சியையும் ஆடி நிறுவனம் வழங்குகிறது.

விவிஐபி., கார்
அனுதினமும் பாதுகாப்பு அச்சுறுத்தல் மத்தியில் வாழும் முக்கிய பிரமுகர்களுக்கு இந்த கார் நிச்சயம் சிறந்த தேர்வாக இருக்கும்.


Click it and Unblock the Notifications








