புதிய ஹோண்டா பிஆர்வி 7 சீட்டர் எஸ்யூவி இந்தியாவில் அறிமுகம்!
ஹோண்டாவின் புதிய 7 சீட்டர் எஸ்யூவி டெல்லி ஆட்டோ எக்ஸ்போவில் அறிமுகம் செய்யப்பட்டது. காம்பேக்ட் எஸ்யூவி மார்க்கெட்டில் 7 சீட்டர் மாடலாக வருவதால் இந்த எஸ்யூவி மீது அதிக எதிர்பார்ப்பு நிலவுகிறது. முதல்முறையாக இந்தியா வந்திருக்கும் இந்த புதிய எஸ்யூவியின் பிரத்யேக படங்களையும், கூடுதல் தகவல்களையும் தொடர்ந்து காணலாம்.

ஹோண்டா பிஆர்வி எஸ்யூவி 3 வரிசை இருக்கை அமைப்பு கொண்டதாக வருகிறது. எனவே, 7 பேர் அமர்ந்து செல்லும் வசதி கொண்ட மாடலாக இருக்கும். தற்போது விற்பனையில் இருக்கும் மொபிலியோ எம்பிவி காரின் டிசைன் தாத்பரியங்கள் இந்த புதிய எஸ்யூவி மாடலிலும் பயன்படுத்தப்பட்டிருக்கிறது. எனவே, மொபிலியோ சாயலையும் காண முடிகிறது. அதேநேரத்தில், எஸ்யூவி கார்களுக்கே உரிய ஸ்கிட் பிளேட், பாடி கிளாடிங், ரூஃப் ரெயில் போன்றவையும் கொடுக்கப்பட்டு இருக்கிறது.
க்ரோம் பூச்சு பாகங்கள் சற்று தூக்கலாகவே பயன்படுத்தப்பட்டு, பிரிமியம் மாடலாக முன்னிலைப்படுத்த ஹோண்டா முயன்றிருக்கிறது. இன்டீரியரிலும் தரமும், அழகும் இழைந்தோடுகிறது. இந்த எஸ்யூவியில் மொபிலியோ எம்பிவி காரில் பயன்படுத்தப்பட்டிருக்கும் 117 பிஎச்பி பவரை அளிக்க வல்ல 1.5 லிட்டர் பெட்ரோல் எஞ்சின் மற்றும் 98 பிஎச்பி பவரை அளிக்க வல்ல 1.5 லிட்டர் டீசல் எஞ்சின் ஆகியவை பயன்படுத்தப்படும்.
இந்த எஸ்யூவி மேனுவல் கியர்பாக்ஸ் மட்டுமின்றி, ஆட்டோமேட்டிக் கியர்பாக்ஸ் மாடலிலும் வருகிறது. ஹோண்டா மொபிலியோ போன்றே சிறப்பான மைலேஜ் தரும் டீசல் எஸ்யூவி மாடலாக இருக்கும் என்பதும் இதற்கு கூடுதல் வலு சேர்க்கிறது. இந்த புதிய எஸ்யூவி ரெனோ டஸ்ட்டர், ஹூண்டாய் க்ரெட்டா மற்றும் மாருதி விட்டாரா பிரெஸ்ஸா ஆகிய மாடல்களுடன் போட்டி போடும்.


Click it and Unblock the Notifications



































