2018 டெல்லி ஆட்டோ எக்ஸ்போ நடைபெறும் தேதிகள் அறிவிப்பு- விபரம்!
அடுத்த ஆண்டு டெல்லியில் நடைபெற இருக்கும் சர்வதேச வாகன கண்காட்சிக்கான தேதிகள் அறிவிக்கப்பட்டுள்ளன. அதன் விபரங்களை இந்த செய்தியில் காணலாம்.
டெல்லியில் உள்ள பிரகதி மைதானத்தில்தான் சர்வதேச வாகன கண்காட்சி நடத்தப்பட்டு வந்தது. இட நெருக்கடி காரணமாக, கடந்த 2014ம் ஆண்டு முதல் டெல்லி அருகே நொய்டாவில் உள்ள இந்தியா எக்ஸ்போ மார்ட்டில் வாகன கண்காட்சி மாற்றப்பட்டது.

அதேநேரத்தில், வாகன உதிரிபாகங்களுக்கான கண்காட்சி தொடர்ந்து டெல்லி பிரகதி மைதானத்தில்தான் நடத்தப்படுகிறது. இந்த நிலையில், 2016ம் ஆண்டு வாகன கண்காட்சி வெற்றிகரமாக நடந்து முடிந்த நிலையில், 2018ம் ஆண்டுக்கான டெல்லி ஆட்டோ எக்ஸ்போவிற்கான ஏற்பாடுகள் துவங்க உள்ளன.

இதற்காக, வாகன கண்காட்சி நடைபெறும் தேதிகள் அறிவிக்கப்பட்டுள்ளன. 2018ம் ஆண்டு பிப்ரவரி 9ந் தேதி முதல் 14ம் தேதி வரை டெல்லி அருகே நொய்டாவில் உள்ள இந்தியா எக்ஸ்போ மார்ட்டில் வாகன கண்காட்சி நடைபெற இருக்கிறது.

ஏற்கனவே வாகன கண்காட்சி நடைபெற்று வந்த டெல்லி பிரகதி மைதானத்தில் பிப்ரவரி 8 முதல் 11 வரை வாகன உதிரிபாகங்களுக்கான கண்காட்சியும் நடைபெற இருக்கிறது. ஆண்டுக்கு ஆண்டு பார்வையாளர்களின் எண்ணிக்கை கணிசமாக உயர்ந்து வருகிறது.

இதனால், இந்த முறையும் விரிவான ஏற்பாடுகளை செய்ய வாகன கண்காட்சி ஏற்பாட்டாளர்கள் திட்டமிட்டு உள்ளனர். நாள் ஒன்றுக்கு ஒரு லட்சத்திற்கும் அதிகமான பார்வையாளர்கள் வந்து செல்வதற்கான வசதியுடன் வாகன கண்காட்சி அரங்கை அமைப்பதற்கு திட்டமிட்டுள்ளனர்.

டிக்கெட் கட்டணங்கள் குறித்த விபரங்கள் அறிவிக்கப்படவில்லை. விரைவில் இதற்கான அறிவிப்பு வெளியிடப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

உலக அளவில் மிக வேகமாக வளர்ந்து வரும் இந்திய கார், பைக் மார்க்கெட்டில் வர்த்தகத்தில் ஈடுபட பல வெளிநாட்டு நிறுவனங்கள் ஆர்வம் காட்டி வருகின்றன. எனவே, கடந்த முறையை விட 2018ம் ஆண்டு டெல்லி ஆட்டோ எக்ஸ்போவில் அதிக எண்ணிக்கையிலான புதிய கார், பைக் மாடல்கள் பார்வைக்கு வரும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.


Click it and Unblock the Notifications








