அமர்களமாய் நாளை துவங்குகிறது 2020 ஆட்டோ எக்ஸ்போ... புறக்கணிக்கும் நிறுவனங்கள் எவை..?
கடந்த 1 வருடத்திற்கும் மேலாக இந்திய ஆட்டோமொபைல் சந்தையில் நிலவி வரும் மந்த நிலையை போக்கும் விதமாக டெல்லியில் நாளை 2020 ஆட்டோ எக்ஸ்போ கண்காட்சி துவங்கவுள்ளது.
ஆட்டோ எக்ஸ்போ, இரண்டு வருடங்களுக்கு ஒரு முறை நடைபெறும் மோட்டார் கண்காட்சியாகும். முதன்முதலாக 1985ல் இந்த நிகழ்ச்சி நடத்துவது குறித்து விவாதிக்கப்பட்டு 1986ல் இருந்து ஒவ்வொரு இரண்டு வருடங்களுக்கு ஒரு முறை ஆட்டோ எக்ஸ்போ அரங்கேற்றப்பட்டு வருகிறது.

1986ல் அப்போதைய இந்திய பிரதமர் ராஜீவ் காந்தியால் துவக்கி வைக்கப்பட்ட இந்த முதலாவது ஆட்டோ எக்ஸ்போ, இந்திய சாலைகளுக்கு ஏற்ப நவீன தொழிற்நுட்பங்களுடன் கார்களை தயாரிக்கும் அளவிற்கு திறமை நமது நாட்டு ஆட்டோமொபைல் நிறுவனங்களிடம் உள்ளதா என்பதை வாடிக்கையாளர்கள் தீர்மானிக்கும் விதமாக அமைந்தது.

இந்த முதல் ஆட்டோ எக்ஸ்போ கண்காட்சி 9 நாட்கள் நடைபெற்றது. ஆசியாவிலேயே மிக பெரியது மற்றும் உலகிலேயே இரண்டாவது பெரிய மோட்டார் கண்காட்சியாக விளங்கும் ஆட்டோ எக்ஸ்போ ஆரம்பம் முதலே இந்தியாவில் தான் நடைபெற்று வருகிறது.

தொடங்கப்பட்டது முதல் 2012ஆம் ஆண்டு வரை புதுடெல்லியில் உள்ள ப்ரகதி மைதானத்தில் நடைபெற்றுவந்த ஆட்டோ எக்ஸ்போ, அதன்பின் நொய்டாவிற்கும் டெல்லிக்கும் இடையே என்சிஆர் பகுதியில் உள்ள இந்தியா எக்ஸ்போ மார்ட்-ல் நடத்தப்பட்டு வருகிறது.

சர்வதேச மோட்டார் வாகன தயாரிப்பு நிறுவனங்களின் கூட்டமைப்பின் அங்கீகாரத்துடன் நடைபெற்றுவரும் இந்த நிகழ்ச்சியை ஆட்டோமோட்டிவ் உபகரண தயாரிப்பாளர்கள் சங்கம் (ACMA), இந்திய தொழில்துறை கூட்டமைப்பு (CII) மற்றும் இந்தியன் ஆட்டோமொபைல் தயாரிப்பாளர்கள் சமூகம் (SIAM) போன்ற அமைப்புகள் இணைந்து நடத்தி வருகின்றன.

நாளை துவங்கவுள்ளது 15வது ஆட்டோ எக்ஸ்போ நிகழ்ச்சியாகும். நாளை (பிப்ரவரி 5) மற்றும் நாளை மறுநாள் (பிப்ரவரி 6) சர்வதேச மற்றும் உள்நாட்டு ஆட்டோமொபைல் ஊடகவியலாளர்களுக்கானது. இதனால் இந்தியா முழுவதும் உள்ள ஆட்டோமொபைல் ஆர்வலர்கள் நாளை டெல்லியில் கூடவுள்ளனர்.

அதன்பின் பிப்ரவரி 7ஆம் தேதியிலிருந்து பொதுமக்கள் அனுமதிக்கப்படுவார்கள். தொடர்ந்து 5 நாட்கள் நடைபெறவுள்ள 2020 ஆட்டோ எக்ஸ்போ வருகிற 12ஆம் தேதி நிறைவடையவுள்ளது. ஊடகவியலாளர்களுக்கான இரு நாட்கள் உள்பட மொத்தம் 7 நாட்களிலும் காலை 11 மணியில் இருந்து மாலை 6 மணி வரை ஆட்டோ எக்ஸ்போ நடைபெறும்.

இந்த ஒரு வார காலத்தை நன்றாக பயன்படுத்தி கொள்ள இந்திய சந்தையில் உள்ள அனைத்து ஆட்டோமொபைல் நிறுவனங்களும் இப்போதே வரிந்துக்கட்டி நிற்கின்றன. மார்க்கெட்டில் தற்சமயம் உள்ள தயாரிப்பு நிறுவனங்கள் மட்டுமின்றி, இந்த 2020 ஆட்டோ எக்ஸ்போ மூலம் சில வெளிநாட்டு ஆட்டோமொபைல் நிறுவனங்களும் இந்தியாவில் கால் பதிக்கவுள்ளன.

2020 ஆட்டோ எக்ஸ்போவில், மாருதி சுசுகி, ஹூண்டாய் மோட்டார், டாடா மோட்டார்ஸ், எம்ஜி மோட்டார், கியா மோட்டார்ஸ், ஃபோக்ஸ்வேகன், ஸ்கோடா, மஹிந்திரா, ரெனால்ட், மெர்சிடிஸ்-பென்ஸ், க்ரேட் வால் மோட்டார்ஸ் உள்ளிட்ட பிரபலமான கார் தயாரிப்பு நிறுவனங்கள் தங்களது புதிய மாடல்களை காட்சிப்படுத்தவுள்ளன.

மோட்டார்சைக்கிள் பிரிவை பொறுத்தவரை, வழக்கம்போல் ஹீரோ மோட்டோகார்ப் நிறுவனம் அதிகளவில் புதிய தயாரிப்பு பைக்குகள் மற்றும் ஸ்கூட்டர்களை களமிறக்கும் என அனைவரும் நினைத்திருந்தனர். ஆனால் இந்நிறுவனம் 2020 ஆட்டோ எக்ஸ்போவில் கலந்துக்கொள்ள போவதில்லை.

மற்றப்படி டிவிஎஸ், கவாஸாகி, சுசுகி, ஹோண்டா, பிஎம்டபிள்யூ போன்ற நிறுவனங்கள் தங்களது எதிர்கால இந்திய அறிமுக மோட்டார்சைக்கிள்களை பார்வைக்காக வைக்கவுள்ளன. ஹீரோ மோட்டோகார்ப் மட்டுமின்றி, ஹோண்டா கார்ஸ், அசோக் லேலாண்ட் மற்றும் பிஎம்டபிள்யூ நிறுவனங்களும் இந்த 2020 ஆட்டோ எக்ஸ்போவை புறக்கணித்துள்ளன.

எரிபொருள் என்ஜினை கொண்ட வாகனங்களுக்கு இணையாக எலக்ட்ரிக் வாகனங்களும் நாளை ஆரம்பமாகவுள்ள ஆட்டோ எக்ஸ்போவில் வாடிக்கையாளர்களின் கண்களுக்கு விருந்தாகவுள்ளன. மேலும், 2020 ஆட்டோ எக்ஸ்போவில் சில நிறுவனங்கள் கான்செப்ட் கார்களையும் அறிமுகப்படுத்தவுள்ளன.

கடைசியாக இரண்டு ஆண்டுகளுக்கு முன்னர் 2018ல் ப்ரகதி மைதானம் & இந்தியா எக்ஸ்போ மார்ட் என இரு இடங்களில் நடைபெற்ற ஆட்டோ எக்ஸ்போவில் ஃபோக்ஸ்வேகன், பஜாஜ், ராயல் எண்ட்பீல்டு, ஸ்கோடா, ஜீப் மற்றும் நிஸான் உள்ளிட்ட முன்னணி நிறுவனங்கள் பங்கேற்கவில்லை.

இதனால் கிட்டத்தட்ட 4 வருடங்களுக்கு பிறகு இவை ஆட்டோ எக்ஸ்போவில் கலந்துக்கொள்வதால் குறிப்பாக இவற்றின் புதிய அறிமுக மாடல்களில் நவீன தொழிற்நுட்பங்கள் மற்றும் அப்டேட்டான டிசைன்களை எதிர்பார்க்கலாம். 2020 ஆட்டோ எக்ஸ்போவில் காட்சிப்படுத்தப்படும் புதிய மாடல்களை பற்றி உடனுக்குடன் தெரிந்துக்கொள்ள ட்ரைவ்ஸ்பார்க் தமிழ் தளத்துடன் தொடர்ந்து இணைந்திருங்கள்.


Click it and Unblock the Notifications








