புதிய அப்ரிலியா எஸ்ஆர்125 டெஸ்ட் டிரைவ் ரிப்போர்ட்!
புதிய அப்ரிலியா எஸ்ஆர்125 ஸ்கூட்டரின் டெஸ்ட் டிரைவ் ரிப்போர்ட்டை இங்கே படிக்கலாம்.
சூப்பர் பைக் தயாரிப்பில் பிரபலமான இத்தாலியை சேர்ந்த அப்ரிலியா நிறுவனம், கடந்த 2016ம் ஆண்டு ஆட்டோ எக்ஸ்போவில் எஸ்ஆர்150 என்ற புதிய ஸ்கூட்டர் மாடலை இந்தியாவில் அறிமுகம் செய்தது. தனது ஸ்டைலான தோற்றத்தாலும், செயல்திறனாலும் வாடிக்கையாளர்களை கவர்ந்தது.

தொடர்ந்து, கடந்த ஆண்டு எஸ்ஆர்150 ஸ்போர்ட் என்ற சக்திவாய்ந்த ஸ்கூட்டர் மாடலையும் களமிறக்கியது. இந்த நிலையில், கடந்த மாதம் நடந்த ஆட்டோ எக்ஸ்போவில் எஸ்ஆர்150 ஸ்கூட்டரை விட விலை குறைவான மாடலை அப்ரிலியா நிறுவனம் அறிமுகம் செய்தது.

அப்ரிலியா எஸ்ஆர்125 ஸ்கூட்டர் பெரும் ஆவலைத் தூண்டிய நிலையில், இந்த ஸ்கூட்டரை அண்மையில் டிரைவ்ஸ்பார்க் டீம் டெஸ்ட் டிரைவ் செய்தது. அதில், கிடைத்த அனுபவங்களை இந்த செய்தியில் பகிர்ந்து கொள்கிறோம்.

அப்ரிலியா எஸ்ஆர்125 ஸ்கூட்டரை பார்த்த மாத்திரத்தில், எஸ்ஆர்150 ஸ்கூட்டர் போன்றே தோற்றமளிக்கிறது. இரு ஸ்கூட்டருக்கும் டிசைனில் எந்த வித்தியாசமும் இல்லை. 125 என்ற பேட்ஜ் கொடுக்கப்பட்டிருப்பதை வைத்தே வித்தியாசத்தை உணர முடிந்தது.

இந்த ஸ்கூட்டரின் ஸ்டைல், முக்கிய உதிரிபாகங்கள் அனைத்திலுமே எந்த மாற்றங்களும் இல்லை. ஆனால், இந்த எஸ்ஆர்125 ஸ்கூட்டர் நீலம் மற்றும் சில்வர் என இரண்டு புதிய வண்ணங்களில் வந்திருப்பதுதான் முக்கிய வேறுபாடாக இருக்கிறது.

புதிய அப்ரிலியா எஸ்ஆர்125 ஸ்கூட்டரில் கடினமான சஸ்பென்ஷன் கொடுக்கப்பட்டிருப்பதால், கையாளுமை சிறப்பாக இருக்கிறது. அதேவேளையில், மோசமான சாலைகளில் பயணிக்கும்போது அதிர்வுகள் அதிகம் தெரிகிறது. முதுகுவலி வருவதற்கும் வாய்ப்புகள் அதிகம்.

புதிய அப்ரிலியா எஸ்ஆர்125 ஸ்கூட்டரில் 14 அங்குல அலாய் வீல்கள் மற்றும் வீ பிராண்டு டயர்கள் பொருத்தப்பட்டு இருக்கின்றன. பிற ஸ்கூட்டர்கள் 10 அங்குலம் மற்றும் 12 அங்குல அலாய் வீல்களில்தான் கிடைக்கும் நிலையில், இந்த ஸ்கூட்டருக்கு எடுப்பான தோற்றத்தை வழங்குவது பெரிய அளவிலான சக்கரங்களே.

அப்ரிலியா எஸ்ஆர்150 ஸ்கூட்டரில் இருக்கும் அதே இன்ஸ்ட்ரூமென்ட் க்ளஸ்ட்டர்தான் பயன்படுத்தப்பட்டு இருக்கிறது.

சுவிட்ச் கியர் எனப்படும் கைப்பிடியில் கொடுக்கப்பட்டு இருக்கும் ஹெட்லைட், இண்டிகேட்டர் சுவிட்சுகள் தரம் சிறப்பாக இல்லை என்பது ஏமாற்றம்.

இந்தியாவில் விற்பனையில் இருக்கும் ஸ்கூட்டர்களில் பின்னால் அமர்பவருக்கு கைப்பிடி இல்லாமல் வந்திருக்கும் முதல் ஸ்கூட்டர் இதுவாகத்தான் இருக்கும். ஆம், இந்த ஸ்கூட்டரில் கிராப் ரெயில் எனப்படும் கைப்பிடி கொடுக்கப்படவில்லை. அதற்கு பதிலாக, இருக்கையின் நடுவில் சிறிய பெல்ட் கொடுக்கப்பட்டு இருக்கிறது.

வெஸ்பா 125எஸ் ஸ்கூட்டரில் பொருத்தப்பட்டு இருக்கும் அதே 125சிசி ஏர்கூல்டு எஞ்சின்தான் புதிய அப்ரிலியா எஸ்ஆர்125 ஸ்கூட்டரிலும் பொருத்தப்பட்டு இருக்கிறது. இந்த எஞ்சின் அதிகபட்சமாக 9.5 பிஎச்பி பவரையும், 10.6 என்எம் டார்க் திறனையும் வழங்கும்.

அப்ரிலியா எஸ்ஆர்125 ஸ்கூட்டரில் சிவிடி கியர்பாக்ஸ் பொருத்தப்பட்டு இருக்கிறது. இந்த ஸ்கூட்டர் செயல்திறன் மிகச் சிறப்பாக இருக்கிறது. இந்த ஸ்கூட்டர் 115 கிமீ வேகம் வரை எளிதாக எட்டுகிறது. பிக்கப் மிக துல்லியமாகவும், உற்சாகமூட்டுவதாகவும் இருக்கிறது. அதிவேகத்தில் எஞ்சின் அதிர்வுகள் அதிகமாக இருக்கிறது.

புதிய அப்ரிலியா எஸ்ஆர்125 ஸ்கூட்டரில் முன்சக்கரத்தில் டிஸ்க் பிரேக்கும், பின்சக்கரத்தில் டிரம் பிரேக்கும் பொருத்தப்பட்டு இருக்கிறது. இதே பிரேக் சிஸ்டம்தான் எஸ்ஆர்150 ஸ்கூட்டரிலும் உள்ளது. பிரேக் சிஸ்டம் செயல்பாடும் திருப்திகரமாக உள்ளது.

புதிய அப்ரிலியா எஸ்ஆர்125 ஸ்கூட்டர் ரூ.65,315 எக்ஸ்ஷோரூம் விலையில் இந்தியாவில் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்டு இருக்கிறது. 125 ரகத்தில் மிகவும் விலை உயர்ந்த மாடல் இதுதான். சுஸுகி அக்செஸ் 125, ஹோண்டா ஆக்டிவா 125, டிவிஎஸ் என்டார்க் 125 மற்றும் வெஸ்பா 125 ஸ்கூட்டர்களுடன் போட்டி போடுகிறது.

புதிய அப்ரிலியா எஸ்ஆர்125 ஸ்கூட்டருக்கும், அப்ரிலியா எஸ்ஆர்150 ஸ்கூட்டருக்கும் கலரையும், எஞ்சினையும் தவிர்த்து வேறு எந்த வித்தியாசங்களும் இல்லை. ரூ.5,000 மட்டுமே கூடுதலாக செலுத்தினால், எஸ்ஆர்150 ஸ்கூட்டரையே வாங்கிவிடுவது சிறந்த முடிவாக இருக்கும்.


Click it and Unblock the Notifications








