குஜராத்தில் புதிய ஆலைக்கு ரூ.18,000 கோடி முதலீடு:மாருதி

குஜராத் மாநிலம், சனந்த் நகரில் டாடாவின் நானோ கார் தொழிற்சாலை அமைந்துள்ள பகுதிக்கு அருகிலேயே மாருதியின் புதிய தொழிற்சாலை அமைய உள்ளது.
500 ஏக்கர் பரப்பளவில் அமைக்கப்பட உள்ள இந்த புதிய தொழிற்சாலைக்கு அருகிலேயே உதிரிபாக தொழிற்சாலைகளும் இருக்குமாறு கட்டுமான பணிகளை துவங்க மாருதி திட்டமிட்டுள்ளது.
இந்த நிலையில் புதிய தொழிற்சாலை அமைப்பது குறித்து மாருதி நிறுவனத்தின் தலைவர் பர்கவா மற்றும் மேலாண் இயக்குனர் சின்சோ நகனிஷி ஆகியோர் குஜராத் முதல்வர் நரேந்திர மோடியை சமீபத்தில் நேரில் சந்தித்து பேசினர்.
இதன்பின் செய்தியாளர்களிடம் பேசிய பர்கவா கூறியதாவது:
"சனந்த் நகரில் புதிய தொழிற்சாலை அமைப்பது குறித்து முதல்வர் மோடியுடன் பேச்சு நடத்தினோம். அரசு சார்பில் அனைத்து ஒத்துழைப்பையும் நல்குவதாக அவர் தெரிவித்தார்.
ஆண்டுக்கு 20 லட்சம் உற்பத்தி திறன் கொண்ட வகையில் தொழிற்சாலை அமைக்க திட்டமிட்டுள்ளோம். இதன் முதல்கட்டமாக ரூ.6,000 கோடி முதலீட்டில் 10 லட்சம் கார்கள் உற்பத்தி திறன் கொண்ட தொழிற்சாலை அமைக்கப்படும்.
பின்னர் இரண்டாம் கட்டமாக ஆண்டுக்கு கூடுதலாக 10 லட்சம் கார்கள் உற்பத்தி செய்யும் வகையில் இந்த தொழிற்சாலை விரிவாக்கம் செய்யப்படும். உதிரிபாக தொழிற்சாலைகளும் இந்த தொழிற்சாலைக்கு அருகில் வர இருப்பதால் மொத்தமாக ரூ.18,000 கோடி வரை முதலீடு இருக்கும் என மதிப்பிட்டுள்ளோம்," என்றார்.


Click it and Unblock the Notifications








