ரோட்டில் அனாதையாக்கப்படும் சொகுசு கார்கள்

பிரிட்டன் உள்ளிட்ட வெளிநாடுகளிலிருந்து போலி ஆவணங்கள் மூலம் வரி ஏய்ப்பு செய்து திருட்டு கார்களை இறக்குமதி செய்து விற்ற விவகாரம் விஸ்வரூபம் எடுத்துத்துள்ளது. இந்த நூதன மோசடியில் மூளையாக செயல்பட்டு தலைமறைவான சுமித் வாலியா என்பவனை சமீபத்தில் மத்திய வருவாய் புலனாய்வு துறை(டி.பி.ஐ.)அதிகாரிகள் கைது செய்தனர்.
அவனிடம் நடத்திய விசாரணையில் மேலும் பல திடுக்கிடும் தகவல்கள் வெளியாகி உள்ளன. அந்த கார்களை வரி ஏய்ப்பு செய்வதற்கு இந்தியாவுக்கான வியட்நாம் மற்றும் வடகொரிய தூதரகத்தை சேர்ந்த அதிகாரிகளும், பிரிட்டனை சேர்ந்த தொழிலதிபர் ஒருவர் உதவியாக இருந்ததாக தெரிவித்துள்ளான்.
பல கோடி ரூபாய் மோசடி நடந்துள்ள இந்த விவகாரம் தொடர்பாக டி.பி.ஐ. அதிகாரிகள் விசாரணையை தீவிரப்படுத்தியுள்ளனர். இதனால், குறைந்த விலைக்கு ஆசைப்பட்டு சுமி்த் வாலியாவிடம் சொகுசு கார்களை வாங்கிய தொழிலதிபர்கள், சினிமா பிரபலங்கள் தற்போது நடுக்கத்தில் உள்ளனர்.
சுமித் வாலியா எங்கே நமது பெயரையும் கூறியிருப்பானோ என்ற அச்சத்தில் உள்ள பிரபலங்கள் தற்போது தலைக்கு வந்தது தலைப்பாகையுடன் போகட்டும் என்று முடிவு செய்துள்ளனர். இதனால், உஷாரான சிலர் கோடிக்கணக்கான மதிப்புடைய கார்களை ரோட்டில் அனாதையாக நிறுத்திவிட்டு ஓடும் சம்பவங்கள் அரங்கேற துவங்கியுள்ளன.
டெல்லியில் உள்ள பரபரப்பு மிகுந்த சாலையின் ஓரத்தில் பல கோடி மதிப்புடைய அஸ்டன் மார்ட்டின் மற்றும் பென்ட்லீ கார்களை அதன் உரிமையாளர்கள் அனாதையாக நிறுத்திவிட்டு ஓடிவிட்டனர். இந்த கார்களை சமீபத்தில் டி.பி.ஐ. அதிகாரிகள் கண்டுபிடித்து பறிமுதல் செய்தனர்.
இந்த கார்கள் சுமித் வாலியாவிடமிருந்து வாங்கப்பட்டிருக்கலாம் என கருதப்படுகிறது. டி.பி.ஐ. அதிகாரிகள் விசாரணை தீவிரமடைந்துள்ளதால், இறக்குமதி வரி கட்டாமல் சொகுசு கார்களை வாங்கிய பல கோடீஸ்வரர்கள் தங்களது கார்களை இதேபோன்று அனாதையாக நிறுத்திவிட்டு தப்பிஓடும் சம்பவங்கள் வரிசையாக அரங்கேறும் என கூறப்படுகிறது.


Click it and Unblock the Notifications








