கார் கண்ணாடி தயாரிப்புக்கு புதிய ஆலை:செயின்ட்கோபெய்ன் திட்டம்

கண்ணாடி தயாரிப்பில் பிரான்சை சேர்ந்த செயின்ட் கோபெய்ன் நிறுவனம் மிகப்பிரபலமாக திகழ்கிறது. இதன் தரம்வாய்ந்த கண்ணாடிகளுக்கு சந்தையில் அதிக ஒரு மவுசு உள்ளது. பிரம்மாண்ட கட்டடங்களுக்கான கண்ணாடிகள், கார் உள்ளிட்ட ஆட்டோமொபைல் துறைக்கு தேவைப்படும் கண்ணாடி தயாரிப்பில் இந்த நிறுவனம் சிறந்து விளங்குகிறது.
சென்னைக்கு அருகில் ஸ்ரீபெரும்புதூரில் பிரம்மாண்ட தொழிற்சாலை அமைத்து கண்ணாடி தயாரிப்பில் இந்த நிறுவனம் ஈடுபட்டு வருகிறது. தற்போது கார் கண்ணாடிகளுக்கு தேவை அதிகரித்து வருவதால் ரூ.500 கோடியில் புதிய தொழிற்சாலை அமைக்க அந்த நிறுவனம் முடிவு செய்துள்ளது.
தமிழகம் அல்லது ஆந்திராவில் புதிய தொழிற்சாலை அமைக்க முடிவு செய்துள்ள அந்த நிறுவனம் இதற்காக 60 ஏக்கர் இடத்தை தேர்வு செய்யும் பணியில் தீவிரமாக இறங்கியுள்ளது.
இதுகுறித்து செயின்ட் கோபெய்ன் நிறுவனத்தின் மேலாண் இயக்குனர் சந்தானம் கூறியதாவது:
"டாடா நானோ காருக்கு தற்போது சன்கூலிங் கிளாஸ் மற்றும் இதர கண்ணாடிகளை சப்ளை செய்து வருகிறோம். இதேபோன்று பல கார் நிறுவனங்கள் எங்களிடம் கண்ணாடியை பெற ஒப்பந்தம் செய்ய ஆர்வமுடன் உள்ளன. எனவே, தேவையை நிறைவு செய்யும் வகையில் புதிய ஆலை கட்ட முடிவு செய்துள்ளோம்.
இதுகுறித்து தமிழகம் மற்றும் ஆந்திர மாநில அரசுகளுடன் பேச்சு நடத்தி வருகிறோம். தடையில்லா மின்சாரம் உள்ளிட்ட பிற சலுகைகளையும், இடத்தையும் வழங்குமாறு சம்பந்தப்பட்ட அரசுகளிடம் கோரிக்கை வைத்துள்ளோம்.
புதிய ஆலை மூலம் 20 லட்சம் கார்களுக்கு தேவையான கண்ணாடிகளை சப்ளை செய்ய முடியும். இதுதவிர, ஆயிரக்கணக்கானோருக்கு வேலையும் கிடைக்கும்," என்றார்.


Click it and Unblock the Notifications








