ஸ்டிரைக்கில் ஈடுபட்ட தொழிலாளர்கள் 11 பேர் பணிநீக்கம்: மாருதி

ஹரியானா மாநிலம், மானேசரில் உள்ள மாருதி கார் தொழிற்சாலையை சேர்ந்த தொழிலாளர்கள் கடந்த சனிக்கிழமை முதல் திடீர் வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளனர்.
மூன்றாவது நாளாக இன்று வேலைநிறுத்த போராட்டம் தொடர்வதால், மாருதியின் கார் உற்பத்தி வெகுவாக பாதிக்கப்பட்டு்ள்ளது. நாள் ஒன்றுக்கு 1,200 கார்களை உற்பத்தி செய்யும் திறன்கொண்ட அந்த தொழிற்சாலையில் இதுவரை 1,500 கார்களுக்கு மேல் உற்பத்தி செய்யவேண்டியதில் இழப்பு ஏற்பட்டுள்ளது.
இந்த நிலையில், போராட்டத்தில் ஈடுபட்ட 11 தொழிலாளர்கள் பணிநீக்கம் செய்யப்பட்டுள்ளதாக மாருதி அறிவித்துள்ளது. ஆனால், பணிநீக்கம் செய்யப்பட்ட தொழிலாளர் விபரங்களை அந்த நிறுவனம் வெளியிடவில்லை.
தொழிலாளர்களின் வேலைநிறுத்தம் குறித்து மாருதி தலைவர் பர்கவா கூறியதாவது:
"எந்த முன்னறிவிப்பும் இல்லாமல் தொழிலாளர்கள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளது சட்டவிரோதமானது. மேலும், வேலைநிறுத்தத்தால் தொழிற்சாலையில் அசாதாரணமான சூழ்நிலையை உருவாக்கிய 11 தொழிலாளர்கள் பணிநீக்கம் செய்யப்பட்டுள்ளனர்.
புதிய தொழிற்சங்கத்துக்கு அங்கீகாரம் வழங்கும் கோரிக்கையை ஏற்கமுடியாது. எந்த பிரச்னையாக இருந்தாலும் எங்களிடம் எழுத்துப்பூர்வமாக தெரிவிக்கலாம். வேலைநிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டுள்ள தொழிலாளர்களுடன் தொடர்ந்து பேச்சுவார்த்தை நடத்தப்பட்டு வருகிறது," என்றார்.
இதுகுறித்து தொழிலாளர் ஒருவர் கூறுகையில்,"புதிய தொழிற்சங்க கோரிக்கையை நிர்வாகம் ஏற்கவேண்டும். மேலும், பணிநீக்கம் செய்யப்பட்ட தொழிலாளர்களை திரும்ப பணியில் சேர்க்கும் வரை வேலைநிறுத்தம் தொடரும்," என்றார்.


Click it and Unblock the Notifications








