டாடா - ஃபியட் இடையே சுமூக உறவு இல்லை - ரத்தன் டாடா

ஜேடி பவர் என்ற மார்க்கெட்டிங் ஆய்வு நிறுவனத்திற்கு டாடா குழுமத்தின் தலைவர் ரத்தன் டாடா சிறப்பு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:
" இந்தியாவில் ஃபியட் நிறுவனம் தனித்து சந்தையில் கால் பதிக்க விரும்புவதாக தெரிகிறது. கடந்த சில மாதங்களாக அந்த நிறுவனத்தின் அதிகாரிகளுக்கும், டாடா மோட்டார்ஸ் அதிகாரிகளுக்கும் இடையில் சுமூக உறவும், தொடர்பும் இல்லை.
ஃபியட் தலைமை செயல் அதிகாரியுடன் எனக்கு தனிப்பட்ட முறையில் சுமூக உறவு இருந்தாலும், வர்த்தக அளவில் அது திருப்தியாக இல்லை. டாடா - ஃபியட் உறவு குறித்து பரிசீலிக்க வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது. அதேவேளை, இந்த ஒப்பந்தம் நல்ல வர்த்தக கொள்கைகளை கொண்டது என்பதை மறுக்க முடியாது," என்றார்.
கடந்த 2007ம் ஆண்டு டாடா மோட்டார்ஸ்- ஃபியட் நிறுவனங்களிடையே கூட்டு குழும ஒப்பந்தம் கையெழுத்தானது. இதன்படி, டாடா மோட்டார்ஸ் ஷோரூம்களிலேயே ஃபியட் கார்களை விற்பனை செய்யவும், டாடா தொழிற்சாலையில் ஃபியட் கார்களை தயாரிக்கவும் வழிவகுக்கப்பட்டது.
இந்த நிலையில், ஃபியட் நிறுவனத்தின் கார் விற்பனை குறிப்பிடத்தக்க வளர்ச்சியை எட்டாததால், தனி ஷோரூம்களை அமைத்து விற்பனையை அதிகரிக்க ஃபியட் நிறுவனம் முடிவு செய்துள்ளதாக தெரிகிறது. இதற்காக, டாடாவுடனான உறவை முறித்துக்கொள்ள இருப்பதாகவும் கூறப்படுகிறது.


Click it and Unblock the Notifications








