குஜராத்தில் புதிய ஆலை அமைக்க முன்னுரிமை: மாருதி அதிகாரி பேட்டி

ஹரியானா மாநிலம், குர்கான் மற்றும் மானேசர் ஆகிய இடங்களில் தொழிற்சாலை அமைத்து மாருதி நிறுவனம் கார் உற்பத்தி செய்து வருகிறது. இருப்பினும், எதிர்கால தேவையை இந்த தொழி்ற்சாலைகள் மூலம் சமாளிக்க முடியாது என்று மாருதி கருதுகிறது.
இதையடுத்து, அதிகரித்து வரும் தேவைக்கு ஏற்ப கார் உற்பத்தி திறனை கணிசமாக உயர்த்த மாருதி முடிவு செய்துள்ளது. உள்நாட்டு தேவை மட்டுமின்றி ஏற்றுமதிக்கு செய்யும் வகையில் துறைமுகம் உள்ள பகுதிக்கு அருகே புதிய ஆலையை அமைக்க மாருதி திட்டமிட்டுள்ளது.
இந்த நிலையில், புதிய ஆலையை குஜராத்தில் அமைக்க மாருதி திட்டமி்ட்டுள்ளது. இதற்காக, மாருதி அதிகாரிகள் பலமுறை அங்கு சென்று இடம்தேர்வு செய்யும் பணிகளை நடத்தினர். இதுதொடர்பாக, குஜராத் முதல்வர் நரேந்திர மோடியுடனும், மாருதி தலைமை செயல் அதிகாரி சின்ஷோ நகனிஷி நேரில் சந்தித்து பேச்சு நடத்தியுள்ளார்.
இந்தநிலையில், சனந்த் நகரில் டாடா நானோ கார் தொழிற்சாலை அமைந்துள்ள பகுதிக்கு அருகிலேயே புதிய ஆலையை அமைக்க மாருதி முடிவு செய்துள்ளதாக தெரிவிக்கின்றன.
இதனிடையே, அகமதாபாத்தில் புதிய ஸ்விப்ட் காரை அறிமுகம் செய்யும் நிகழ்ச்சி நடந்தது. இதில், மாருதியின் மேற்கு மண்டல பொதுமேலாளர் எஸ்.என்.பர்மன் கலந்துகொண்டு காரை அறிமுகம் செய்தார்.
அப்போது அவர் கூறுகையில்," குஜராத்தில் புதிய ஆலையை கட்டுவதற்கு முன்னுரிமை கொடுப்போம். அதேவேளை, இதுகுறித்து இன்னும் இறுதி முடிவு எடுக்கப்படவில்லை. தமிழகம் மற்றும் ஹரியானாவிலும் புதிய ஆலையை அமைப்பதற்கான இடத்தை ஆய்வு செய்யும் பணிகளும் நடந்து வருகின்றன," என்று கூறினார்.


Click it and Unblock the Notifications








