ராஜஸ்தான் புதிய ஆலையில் கார் உற்பத்தி துவங்க ஹோண்டா திட்டம்

ஜப்பானை சேர்ந்த ஹோண்டா கார் நிறுவனம், இந்தியாவில் சியல் நிறுவனத்துடன் இணைந்து கார் உற்பத்தியில் ஈடுபட்டு வருகிறது.
கடந்த 1997ம் ஆண்டு டெல்லி அருகேயுள்ள கிரேட்டர் நொய்டாவில் மட்டுமே ஹோண்டாவுக்கு கார் தொழிற்சாலை உள்ளது. இந்த தொழிற்சாலையில் ஆண்டுக்கு 1.2 லட்சம் கார்களை உற்பத்தி செய்ய முடியும். இந்த நிலையில், ராஜஸ்தானிலுள்ள தபுகெராவில் கடந்த 2008ம் ஆண்டு ரூ.1,000 கோடி முதலீட்டில் புதிய ஆலையை கட்டியது.
ஆண்டுக்கு 60,000 கார்களை உற்பத்தி செய்யும் திறன் கொண்ட இந்த ஆலையில் இதுவரை கார் உற்பத்தி துவங்கப்படவில்லை. ஆனால், அங்கு உதிரிபாகங்கள் தயாரிப்பை ஹோண்டா மேற்கொண்டு வருகிறது. மேலும், வெளிநாடுகளில் உள்ள ஆலைகளுக்கும் இங்கிருந்து முக்கிய பாகங்களை ஏற்றுமதி செய்கிறது.
இந்த நிலையில், விரைவில் அறிமுகம் செய்யப்பட இருக்கும் பிரையோ கார் மூலம் இந்திய சந்தையில் முக்கிய இடத்தை பிடிக்க ஹோண்டா திட்டமிட்டுள்ளது. மேலும், எதிர்கால தேவை கருத்தில்க்கொண்டு உற்பத்தி திறனை அதிகரிக்கவும் ஹோண்டா முடிவு செய்துள்ளது.
எனவே, தபுகெரா ஆலையை விரிவாக்கம் செய்து அதில் கார் உற்பத்தி பிரிவையும் துவங்க ஹோண்டா திட்டமிட்டுள்ளது. அடுத்த 2 அல்லது 3 ஆண்டுகளுக்குள் இந்த ஆலையில் கார் உற்பத்தியை துவங்கவும் முடிவு செய்துள்ளது.


Click it and Unblock the Notifications








