மைக்ராவைவிட குறைந்த விலையில் புதிய கார்: நிசான் அறிமுகப்படுத்துகிறது

இந்தியாவில் சிறிய கார்களுக்கு அதிக தேவை இருக்கிறது. இதனால், பல முன்னணி நிறுவனங்கள் புதிய ஹேட்ச்பேக் கார்களை அறிமுகப்படுத்துவதிலும், பழைய சிறிய கார்களை மேம்படுத்தி விற்பனைக்கு கொண்டு வருவதிலும் மும்முரம் காட்டி வருகின்றன.
இந்த நிலையில், ஜப்பானை சேர்ந்த நிசான் நிறுவனமும் அடுத்த ஆண்டு புதிய ஹேட்ச்பேக் காரை அறிமுகப்படுத்த திட்டமிட்டுள்ளது. தற்போது சென்னையில் தொழிற்சாலை அமைத்து கார் உற்பத்தி செய்து வரும் நிசான் நிறுவனம் மைக்ரா ஹேட்ச்பேக் காரையும், சன்னி செடான் காரையும் உற்பத்தி செய்து வருகிறது.
மைக்ரா பிரிமியம் ஹேட்ச்பேக் ரகத்தை சேர்ந்த கார் என்பதால், விலை சற்று அதிகமாக இருக்கிறது. இதனால், நிசான் எதிர்பார்க்கும் அளவுக்கு விற்பனை இலக்கை எட்டவில்லை. மேலும், மார்க்கெட்டை ரூ.4 லட்சம் விலை பட்டியலுக்குள் வரும் ஆல்ட்டோ, சான்ட்ரோ ஆகிய சிறிய கார்கள் பிடித்துக்கொண்டுள்ளன.
எனவே, இவைகளுக்கு போட்டி கொடுக்கும் வகையில் புதிய காரை நிசான் அறிமுகம் செய்ய திட்டமிட்டுள்ளது. இதுகுறித்து நிசான் இந்தியா தலைமை செயல் அதிகாரி கிமுநோபு தொகுயாமா கூறுகையில்,"மைக்ராவைவிட சிறிய காரை அறிமுகம் செய்வது குறித்து தீவிரமாக ஆராய்ந்து வருகிறோம்.
எனவே, அடுத்த ஆண்டு புதிய ஹேட்ச்பேக் காரை அறிமுகம் செய்ய திட்டமிட்டுள்ளோம். இந்தியாவில் சிறிய கார்களுக்கு அதிக தேவை இருப்பதை உணர்ந்துள்ளோம்," என்று கூறினார்
தற்போது நிசான் மைக்ரா சென்னையில் ரூ.4.68 லட்சம் எக்ஸ்ஷோரூம் விலையில் விற்பனை செய்யப்படுகிறது. எனவே, புதிய சிறிய காரை ரூ.4 லட்சத்திற்குள் அறிமுகம் செய்ய நிசான் திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது.
அடுத்த ஆண்டு ஜனவரி மாதம் டெல்லியில் நடைபெறும் ஆட்டோ எக்ஸ்போவில் புதிய காரை நிசான் அறிமுகப்படுத்த திட்டமிட்டுள்ளதாக நிசான் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.


Click it and Unblock the Notifications








