ரூ.37 கோடி முதலீட்டில் சென்னையில் புதிய ஆலை கட்டுகிறது போஸ்ச்

வாகனங்களுக்கான உதிரிபாகங்கள் தயாரிப்பதில் போஸ்ச் நிறுவனம் சர்வதேச அளவில் முன்னிலை வகிக்கிறது. இந்தியாவில் பல இடங்களில் போஸ்ச் நிறுவனத்தின் உதிரிபாக ஆலைகள் இயங்கி வருகின்றன.
இந்த நிலையில், போஸ்ச் நிறுவனத்தின் ஒரு அங்கமான போஸ்ச் எலக்ட்ரிகல் டிரைவ்ஸ் இந்தியா நிறுவனம் சென்னைக்கு அருகில் புதிய தொழிற்சாலை அமைக்கிறது. இதற்கான பூமிபூஜை சமீபத்தில் நடந்தது.
வாகனங்களின் முகப்பு கண்ணாடிகளை சுத்தம் செய்யும் வைப்பர், எஞ்சினை குளிர்விக்கும் ஃபேன்கள் மற்றும் கண்ணாடிகளை ஏற்றி இறக்கும் தானியங்கி கருவிகள் ஆகியவற்றை இந்த புதிய ஆலையில் தயாரிக்க உள்ளதாக போஸ்ச் தெரிவித்துள்ளது.
தற்போது சென்னைக்கு அருகில் வாடகை இடத்தில் போஸ்ச் எலக்ட்ரிகல் டிரைவ்ஸ் இந்தியா நிறுவனத்தின் தொழிற்சாலை இயங்கி வருகிறது. கடந்த 2008ம் ஆண்டு துவங்கப்பட்ட இந்த ஆலையில் மொத்தம் 200 தொழிலாளர்கள் பணிபுரிகின்றனர்.
இந்த நிலையில், சொந்த இடத்தில் தற்போது புதிய ஆலை கட்டும் பணிகளை இந்த நிறுவனம் துவங்கி உள்ளது. மேலும், இந்த புதிய ஆலை வரும் 2012ம் ஆண்டு இறுதிவாக்கில் செயல்பட துவங்கும் என்றும் தெரிவித்துள்ளது.
இந்த ஆலை திறக்கப்பட்டவுடன் அடுத்த மூன்று ஆண்டுகளில் புதிதாக 350 பேருக்கு வேலை கொடுக்கப்படும் என்றும் போஸ்ச் எலக்ட்ரிகல் டிரைவ்ஸ் இந்தியா நிறுவனம் கூறியுள்ளது.


Click it and Unblock the Notifications








