பாதசாரிகளை அடையாளம் காட்டும் ஹெட்லைட்டை அறிமுகப்படுத்த பிஎம்டபிள்யூ தீவிரம்

சொகுசு கார் தயாரிப்பில் புகழ்பெற்ற பிஎம்டபிள்யூ வாடிக்கையாளர்களுக்கு அதிநவீன தொழில்நுட்ப வசதிகளை வழங்குவதிலும் முன்னிலை வகிக்கிறது. இதனால், உலக அளவில் பிஎம்டபிள்யூ கார்களுக்கு ரசிகர் பட்டாளம்
ஏராளம்.
தனது கார்களில் அவ்வப்போது புதிய புதிய தொழில்நுட்ப வசதிகளை அறிமுகப்படுத்தி வரும் பிஎம்டபிள்யூ அடுத்து ஹெட்லைட்டுக்கான இரண்டு புதிய தொழில்நுட்பங்களை உருவாக்கி உள்ளது.
டைனமிக் லைட் ஸ்பாட் மற்றும் கிளார் ப்ரீ ஹை பீம் அசிஸ்ட் என பெயரிடப்பட்டுள்ள இந்த இரண்டு தொழில்நுட்பங்களும் இரவில் காரில் பயணம் செய்யும்போது 100 சதவீதம் பாதுகாப்பான பயணத்தை வழங்கும் என பிஎம்டபிள்யூ தெரிவித்துள்ளது.
இரவில் செல்லும்போது டைனமிக் லைட் ஸ்பாட் தொழில்நுட்பம் சாலையின் குறுக்கே திடீரென வரும் பாதசாரிகள் மற்றும் விலங்குகள் மீது ஹெட்லைட் ஒளியை பீய்ச்சி அடித்து டிரைவரை எச்சரிக்கும். 100 மீட்டருக்கு முன்னால் கார் செல்லும்போதே இந்த தொழில்நுட்பம் டிரைவருக்கு எச்சரிக்கை கொடுத்துவிடும்.
இதேபோன்று, கிளார் ப்ரீ ஹை பீம் அசிஸ்ட் தொழில்நுட்பமும் இரவில் பாதுகாப்பான பயணத்தை உறுதி செய்யும் வகையிலேயே இருக்கிறது. பொதுவாக இரவில் பயணம் செய்யும்போது வாகனங்களின் ஹை பீம் ஒளி எதிரில் வரும் வாகன ஓட்டிகளுக்கு பெரும் பிரச்னையாக உள்ளது.
சில சமயம் எதிரில் வரும் வாகனங்களிலிருந்து வரும் அதிக ஒளிக்கற்றையால் டிரைவர்களுக்கு சாலை தெரியாமல் விபத்துக்களும் நடக்கின்றன. இந்த பிரச்னைக்கு வரப்பிரசாதமாக கிளார் ப்ரீ ஹைபீம் அசிஸ்ட் தொழில்நுட்பத்தை உருவாக்கியுள்ளது பிஎம்டபிள்யூ.
இந்த தொழில்நுட்பம் மூலம், எதிரில் வரும் வாகன ஓட்டிகளுக்கு பிஎம்டபிள்யூ கார்களிலிருந்து வரும் ஹெட்லைட் ஒளி கண்களை கூசச்செய்யாது. மேலும், எதிரில் வாகனங்கள் வரும்போது ஹெட்லைட்டில் ஹை பீம் ஒளியை தானியங்கி முறையில் ஒளிரச்செய்யும்.
இதனால், டிரைவர் சாலையை தெளிவாக பார்த்து ஓட்ட முடியும் என்பதோடு விபத்துக்களையும் தவிர்க்க முடியும் என்கிறது பிஎம்டபிள்யூ.


Click it and Unblock the Notifications








