மின் தட்டுப்பாட்டால் இந்தியாவில் எலக்ட்ரிக் காரை அறிமுகப்படுத்தவில்லை- ஜிஎம்

சுற்றுச்சூழல் மாசுபடுவதை குறைக்க எலக்ட்ரிக் காரை அறிமுகப்படுத்துவதற்கு பல முன்னணி கார் நிறுவனங்கள் நடவடிக்கைகளை தீவிரப்படுத்தியுள்ளன. அடுத்த இரண்டு ஆண்டுகளுக்குள் சுற்றுச்சூழலுக்கு துளியும் மாசு ஏற்படுத்தாத வகையிலான ஏராளமான எலக்ட்ரிக் கார்கள் சந்தையில் அறிமுகமாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இந்த நிலையில், இந்தியாவில் எலக்ட்ரிக் கார்களை அறிமுகப்படுத்துவதற்கான தகுந்த கட்டமைப்பு வசதிகள் இல்லை என ஜெனரல் மோட்டார்ஸ் குறைகூறியுள்ளது.
கோயம்புத்தூரில் நடந்த செய்தியாளர் சந்திப்பில் ஜெனரல் மோட்டார்ஸ் துணைத்தலைவர் பாலேந்திரன் கலந்துகொண்டார். அப்போது அவர் கூறியதாவது:
" எலக்ட்ரிக் கார்களை தயாரிப்பதற்கான தொழில்நுட்பம் எங்களிடம் உள்ளது. சமீபத்தில் டெல்லியில் நாங்கள் அறிமுகம் செய்த பீட் எலக்ட்ரிக் கார் மூலம் இதை நீங்கள் அறிந்து கொண்டிருப்பீர்கள்.
இருந்தாலும், இந்தியாவில் எலக்ட்ரிக் கார்களுக்கான தக்க கட்டமைப்பு வசதிகள் இல்லை. குறிப்பாக, எலக்ட்ரிக் கார்களை சார்ஜ் செய்வதற்கு மின்சாரம் கிடைப்பதில் சிக்கல் இருக்கிறது. சாதாரணமாக வீட்டு உபயோகத்திற்கே மின்சாரம் இல்லாதபோது, எலக்ட்ரிக் கார்களுக்கு கூடுதலாக தேவைப்படும் மின்சாரம் எங்கிருந்து கிடைக்கும். எனவே, தற்போது எலக்ட்ரிக் கார்கள் மார்க்கெட்டில் எடுபடாது.
எங்களிடம் எலக்ட்ரிக் கார்களுக்கான தொழில்நுட்ப வசதி இருந்தபோதிலும், இந்தியாவில் கட்டமைப்பு வசதிகள் இல்லாத காரணத்தினால் உடனடியாக எலக்ட்ரிக் கார்களை அறிமுகம் செய்யும் திட்டம் இல்லை. கட்டமைப்பு மற்றும் மின்சாரம் தாராளமாக கிடைத்தால் மட்டுமே எலக்ட்ரிக் கார்களை அறிமுகம் செய்வது சாத்தியமாகும்," என்றார்.


Click it and Unblock the Notifications








