சென்னையில் ரூ.1.75 கோடி மதிப்பு சொகுசு கார் பறிமுதல்

வெளிநாடுகளில் திருடப்பட்ட விலைமதிப்புமிக்க சொகுசு கார்களை டெல்லியை சேர்ந்த கும்பல் ஒன்று இந்தியாவில் இறக்குமதி செய்து விற்பனை செய்த சம்பவம் சமீபத்தில் அம்பலமானது.
நாடுமுழுவதும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்திய இந்த சம்பவம் தொடர்பாக, வருவாய் புலனாய்வு பிரிவு அதிகாரிகள் நடத்தி வரும் விசாரணையில் பல திடுக்கிடும் சம்பவங்கள் வெளிவந்த வண்ணம் உள்ளன.
திருட்டு கார்கள் மட்டுமின்றி வரி ஏய்ப்பு செய்து சொகுசு கார்களை வெளிநாடுகளில் இருந்து இறக்குமதி செய்து வந்த தகவலும் விசாரணையில் தெரியவந்தது. இதில், வெளிநாட்டு தூதர்களுக்கும் தொடர்பு இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது.
இந்த நிலையில், வரி ஏய்ப்பு செய்து இறக்குமதி செ.ய்யப்பட்ட காரை வருவாய்ப் புலனாய்வுத் துறை அதிகாரிகள் சென்னையில் பறிமுதல் செய்துள்ளனர். இந்த கார் இத்தாலியில் தயாரிக்கப்பட்டது.
கடந்த 2008ம் ஆண்டு மும்பை துறைமுகம் வழியாக இறக்குமதி செ.ய்யப்பட்டுள்ளது.. அகமதாபாத்தை சேர்ந்த தொழிலதிபர் பெயரில் இந்த கார் முதலில் வாங்கப்பட்டுள்ளது.. தற்போது சென்னை மேற்கு மாம்பலத்தை சேர்ந்த தொழிலதிபரிடம் இருந்து கார் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.
சென்னையை சேர்ந்த ஏஜென்ஸி பெயரில் முதலில் வாங்கி பதிவு செய்யப்பட்டு பின்னர் அந்த தொழிலதிபரிடம் விற்பனை செய்யப்பட்டுள்ளது. ஆனால், அந்த கார் அரசியல் பெரும்புள்ளி ஒருவரின் மருமகனுக்கு வெளிநாட்டு வாழ் இந்தியர் ஒருவர் பரிசாக வழங்கியுள்ளதாக கூறப்படுகிறது.
ஆனால், இதுகுறித்த விபரங்களை வருவாய் புலனாய்வு துறை அதிகாரிகள் தெரிவிக்க மறுத்துவிட்டனர்.
பறிமுதல் செய்யப்பட்ட கார் தற்போது டி.நகரில் உள்ள வருவாய் புலனாய்வு பிரிவு அலுவலகத்தில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.
அந்த காரை பத்திரிக்கை போட்டோகிராபர்கள் புகைப்படமெடுக்க முயன்றனர்.
ஆனால், அவர்களை வருவாய் புலனாய்வு பிரிவு அதிகாரிகள் தடுத்துவிட்டனர். மேலும், அந்த காரை துணியால் போட்டு மூடிவிட்டனர்.
ரூ.60 லட்சம் கட்டினால், அந்த கார் விடுவிக்கப்படலாம் என தகவல்கள் கூறுகின்றன.


Click it and Unblock the Notifications








