மானேசர் ஆலையில் 16 தொழிலாளர்கள் இன்று சஸ்பென்ட்: மாருதி அதிரடி நடவடிக்கை

கார் உற்பத்தியின்போது குறிப்பிட்ட தரக்கட்டுப்பாட்டு நிலைகளை கடைபிடிக்காமல் அலட்சியம் காட்டுவதாக கூறி தொழிலாளர்கள் மீது மாருதி அதிரடி நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. மேலும், குறிப்பிட்ட உற்பத்தி இலக்கையும் அவர்கள் எட்டவில்லை என்று கூறி, அவர்களிடம் நன்னடத்தை பத்திரத்தில் கையெழுத்திடுமாறு மாருதி வற்புறுத்தி வருகிறது.
கையெழுத்து போட்டால்தான் ஆலைக்குள் அனுமதி என்று தொழிலாளர்களுக்கு கிடுக்கிப்பிடியையும் போட்டுள்ளது. இதனால், நிர்வாகத்துக்கும், தொழிலாளர்களுக்கும் இடையில் நேற்று முதல் பிரச்னை தீவிரமாகி வருகிறது. அடுத்த வேலைநிறுத்த போராட்டத்தை நடத்த தொழிலாளர்களும், அதை எதிர்கொள்ள மாருதியும் நிர்வாகமும் ஆயத்தமாகி வருகின்றனர்.
இந்த பிரச்னையால் மானேசரில் உள்ள மாருதி கார் தொழிற்சாலையில் இன்று இரண்டாவது நாளாக கார் உற்பத்தி பாதிக்கப்பட்டுள்ளது. ஒழுங்கு நடவடிக்கையின் பேரில் 10 நிரந்தர தொழிலாளர்களும், 5 பயிற்சி பணியாளர்களையும் மாருதி நிர்வாகம் நேற்று அதிரடியாக சஸ்பென்ட் செய்தது.
இந்த நிலையில், மேலும் 16 நிரந்தர தொழிலாளர்களை சஸ்பெண்ட் செய்துள்ள மாருதி 5 பயிற்சி பணியாளர்களையும் வேலையிலிருந்து நீக்கி தொழிலாளர்களை அலற வைத்துள்ளது. மேலும், தொழிலாளர்கள் வேலைநிறுத்தி்ல் ஈடுபட்டால்கூட அதை சமாளிக்கும் விதமாக புதிதாக தற்காலிக பணியாளர்களை நியமிக்கும் நடவடிக்கைகளையும் அந்த நிறுவனம் துவங்கியுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
இதுகுறி்த்து மாருதி ஆலை அதிகாரி ஒருவர் கூறுகையில்," மானேசர் ஆலை அதிநவீன தொழில்நுட்ப வசதிகளை கொண்டது. இது ஆட்டோமேஷன் தொழில்நுட்ப வசதியை கொண்டுள்ளதால், கார் உற்பத்திக்கு அதிக அளவில் மனித ஆற்றல் தேவைப்படாது. குறைந்த தொழிலாளர்களை கொண்டே கார் உற்பத்தி செய்யமுடியும்," என்று கூறினார்.


Click it and Unblock the Notifications








