டாடாவின் புதிய ஹைபிரிட் பஸ் விரைவில் சோதனை ஓட்டம்

டாடாவின் எரிவாயு(சிஎன்ஜி)- பேட்டரியில் இயங்கும் ஹைபிரிட் பஸ்கள் மும்பை மற்றும் டெல்லி போக்குவரத்து கழகங்களில் ஏற்கனவே பயன்படுத்தப்பட்டு வருகின்றன.
இந்த நிலையில், டீசல் மற்றும் பேட்டரியில் இயங்கும் புதிய ஹைபிரிட் தொழில்நுட்பம் கொண்ட பஸ்களை டாடா மோட்டார்ஸ் தயாரித்து வருகிறது. இந்த ஆண்டு இறுதியில் இந்த பஸ்களை மும்பை போக்குவரத்து கழகத்திடம் ஒப்படைத்து சோதனை ஓட்டம் நடத்த டாடா திட்டமிட்டுள்ளது.
இதுகுறித்து டாடா மோட்டார்ஸ் வர்த்தக வாகனப் பிரிவு தலைவர் ரவி பிஷரோடி கூறுகையில், " இந்த பஸ்கள் மிகுந்த எரிபொருள் சிக்கனத்தையும், குறைந்த புகையை வெளியிடும் வகையிலும் இருக்கும். புதிய தொழில்நுட்பம் கொண்ட இந்த பஸ்கள் மார்க்கெட்டில் அதிக வரவேற்பை பெறும் என்று நம்புகிறோம்," என்றார்.
சிஎன்ஜி ஹைபிரிட் பஸ்களைவிட டீசல் ஹைபிரிட் பஸ்கள் விலை குறைவாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதனால், மார்க்கெட்டில் இந்த புதிய ஹைபிரிட் பஸ்களுக்கு அதிக கிராக்கி இருக்கும் எனறு கருதப்படுகிறது.
ஆனால், "இந்த பஸ் தயாரிப்புக்கு வெளிநாட்டிலிருந்து உதிரிபாகங்களை இறக்குமதி செய்து தயாரிக்கப்படுவதால், விலை கூடுதலாக இருக்கலாம் என்றும், உள்நாட்டிலேயே அதிக அளவில் உற்பத்தி செய்யும்போது விலை கணிசமாக குறையும்," என்றும் டாடா மோட்டார்ஸ் நிறுவனத்தின் மற்றொரு அதிகாரி கூறினார்.


Click it and Unblock the Notifications








