லண்டன் ஒலிம்பிக்: 4,000 கார்களை சப்ளை செய்யும் பிஎம்டபிள்யூ

நான்காண்டுகளுக்கு ஒருமுறை நடைபெறும் ஒலிம்பிக் போட்டிகள் வரும் ஜூலை மாதம் லண்டனில் நடைபெற உள்ளது. இந்த போட்டிகளுக்கான ஏற்பாடுகள் விறுவிறுப்பாக நடந்து வருகிறது.
இந்த நிலையில், லண்டன் ஒலிம்பிக் போட்டிகளுக்கு கார் பார்ட்னர் அந்தஸ்தை பிஎம்டபிள்யூ பெற்றுள்ளது. மேலும், லண்டன் போட்டிகளுக்காக 4,000 சொகுசு கார்களை சப்ளை செய்வதற்கான ஆர்டரையும் பிஎம்டபிள்யூ பெற்றுள்ளது.
தனது 3 சீரிஸ் மற்றும் 5 சீரிஸ் செடான் கார்களை லண்டன் போட்டிகளுக்காக ஜெர்மனியிலுள்ள தனது ஆலையிலிருந்து பிரிட்டனுக்கு பிஎம்டபிள்யூ ஏற்றுமதி செய்யவுள்ளது.
ஒலிம்பிக் போட்டிகளை காண வரும் விஐபி விருந்தினர்களை அழைத்து செல்வதற்கான பணிகளில் இந்த கார்கள் பயன்படு்த்தப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், ஒலிம்பிக் போட்டிகள் முடிந்தவுடன் இந்த கார்களை செகன்ட் ஹேண்ட் மார்க்கெட்டில் விற்பனை செய்யவும் பிஎம்டபிள்யூ திட்டமிட்டுள்ளது.
இதனிடையே, ஒலிம்பிக் போட்டிகளை சுற்றுச்சூழலுக்கு மாசு ஏற்படுத்தாத வகையில் நடத்தப்படும் என்று லண்டன் ஒலிம்பிக் ஏற்பாட்டாளர்கள் ஏற்கனவே தெரிவித்துள்ளனர்.
இந்த நிலையில், ஒரே நேரத்தில் 4,000 கார்களை இறக்குமதி செய்வதற்கு அந்த நாட்டின் சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் மற்றும் எம்பிக்கள் சிலர் கடும் அதிருப்தி தெரிவித்துள்ளனர்.
லண்டனில் நல்ல போக்குவரத்து வசதிகள் இருக்கின்றன. ஆனால், சில விஐபிக்களுக்கு பாதுகாப்பு காரணங்களுக்காக கார்களில் அழைத்து செல்லலாம். அதற்காக, 4,000 கார்களை வரவழைப்பது சுற்றுச்சூழலுக்கு பெரும் தீங்கை ஏற்படுத்தும் என்று அவர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.
இறக்குமதி செய்யப்பட உள்ள 4,000 கார்களில் 200 கார்கள் மட்டுமே எலக்ட்ரிக் கார்கள். மற்ற கார்கள் அனைத்தும் பெட்ரோல் அல்லது டீசல் மாடல்கள் என்பது குறிப்பிடத்தக்கது.


Click it and Unblock the Notifications








