சலுகைகள், விலை உயர்வு அச்சத்தால் கார், பைக் விற்பனை உயர்வு

கடந்த ஆண்டு ஜூலை மாதம் திடீரென கார் விற்பனை குறைந்தது. இதைத்தொடர்ந்து, கார் விற்பனை தொடர்ந்து 3 மாதங்கள் மந்தமாகவே இருந்தது. இந்த நிலையில், புதிய மாடல்கள் வரவால் கடந்த நவம்பரில் கார் விற்பனை மீண்டும் எழுச்சி பெற துவங்கியது.
அடுத்து டிசம்பரிலும் கார் விற்பனை நல்ல வளர்ச்சி கண்டுள்ளது. பொதுவாக, ஆண்டு இறுதி என்பதால் டிசம்பரில் கார் விற்பனை மந்தமாக இருக்கும். ஆனால், ஜனவரியில் கார் விலையை உயர்த்த இருப்பதாக பெரும்பாலான நிறுவனங்கள் தெரிவித்ததால், டிசம்பரிலேயே கார் வாங்க வாடிக்கையாளர்கள் முடிவு செய்ததும் விற்பனை ஏற்றம் பெற்றதற்கு முக்கிய காரணம்.
தவிர, அனைத்து கார் நிறுவனங்களும் கார்களுக்கு ஏராளமான சலுகைகளை வாரி வழங்கியதும் கார் விற்பனை உயர்வுக்கு முக்கிய காரணமாக அமைந்தது. இதுகுறித்து இந்திய ஆட்டோமொபைல் உற்பத்தியாளர் கூட்டமைப்பு(சியாம்) வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:
கடந்த டிசம்பர் மாதம் உள்நாட்டு கார் விற்பனை 8.5 சதவீதம் அளவுக்கு வளர்ச்சி கண்டுள்ளது. கடந்த 2010ம் ஆண்டு டிசம்பரில் 1,46,856 கார்கள் விற்பனையானது. ஆனால், கடந்த ஆண்டு டிசம்பரில் 1,59,325 கார்கள் மொத்தமாக விற்பனையாகி 8.5 சதவீத வளர்ச்சியை பதிவு செய்தது.
இதேபோன்று, உள்நாட்டு பைக் விற்பனையும் 8.52 சதவீத விற்பனை வளர்ச்சியை பதிவு செய்துள்ளது.
கடந்த 2010ம் ஆண்டு டிசம்பரில் 10,06,289 இருசக்கர வாகனங்கள் விற்பனையானது. இது கடந்த டிசம்பரில் 10,91,982 இருசக்கர வாகனங்கள் உள்நாட்டில் விற்பனையாகி 8.52 சதவீத விற்பனை வளர்ச்சியை பதிவு செய்துள்ளது," என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.


Click it and Unblock the Notifications








