டீசல் கார்கள் மீது கூடுதல் வரி: கேள்விக்குறியாகும் 3,000 கோடி முதலீடு!

பெட்ரோல் விலை உயர்வு காரணமாக டீசல் கார்களின் விற்பனை சூடுபிடித்துள்ளது. இதனால், கார் நிறுவனங்கள் டீசல் கார்களை தயாரிப்பதற்கு முக்கியத்துவம் கொடுத்து வருகின்றன. ஹூண்டாய், ஜெனரல் மோட்டார்ஸ் உள்பட பல முன்னணி நிறுவனங்கள் டீசல் எஞ்சின் தயாரிப்புதற்காக புதிய ஆலைகளை கட்ட பெரும் முதலீடு செய்ய திட்டமிட்டுள்ளன.
இந்த நிலையி்ல், நாளை தாக்கல் செய்யப்பட உள்ள மத்திய பட்ஜெட்டில் டீசல் கார்கள் மீது கூடுதல் வரி விதிக்கும் அறிவிப்பு வெளியாகும் என்று தெரிகிறது. இதனால், கார் நிறுவனங்கள் தங்களது டீசல் எஞ்சின் ஆலை திட்டத்தை ஒத்திப்போட்டுள்ளன.
இதனால், ரூ.3,000 கோடி அளவுக்கு முதலீடு முடங்கிபோயுள்ளதாக ஆட்டோமொபைல் உற்பத்தியார் கூட்டமைப்பு சியாம் தெரிவி்த்துள்ளது. மத்திய பட்ஜெட்டில் டீசல் கார்கள் மீதான வரியை உயர்த்துவதற்கு பெரும்பாலான கார் நிறுவனங்கள் நேரடியாகவே எதிர்ப்பை தெரிவித்துள்ளன. ஆனால், மத்திய அரசு இதுவரை மவுனம் கலையாமல் இருப்பதால் புதிய முதலீடு தொங்கலில் நிற்கிறது.
டீசல் கார்கள் மீதான வரி பட்ஜெட்டில் உயர்த்தப்பட்டால், இந்த 3,000 கோடி முதலீடு கிடைக்குமா என்பது நிச்சயம் கேள்விக்குறியாகவே உள்ளது. இதனால், ஆட்டோமொபைல் துறையில் புதிய வேலைவாய்ப்புகள் பாதிக்கப்படும் என்று ஆட்டோமொபைல் துறையினர் கருத்து தெரிவிக்கின்றனர்.


Click it and Unblock the Notifications








