டெல்லியில் கார்கள் டிஸ்ப்ளேவுடன் காபி கஃபேயை திறந்தது ஃபியட்

டாடா கூட்டணியிலிருந்து விலகி தனி ஷோரூம்கள் அமைத்து கார் விற்பனையை துவங்க ஃபியட் முடிவு செய்துள்ளது. இதற்காக, தனது பிராண்டை பிரபலப்படுத்தும் பணிகளை விறுவிறுப்பாக துவங்கியுள்ளது.
நாடு முழுவதும் தனி ஷோரூம்களை அமைத்து கார் விற்பனை செய்ய அந்த நிறுவனம் முடிவு செய்துள்ளது. இந்த நிலையில், டெல்லி டால்ஸ்டாய் மார்க் பகுதியில் தனது முதல் காபி கஃபேயை ஃபியட் திறந்துள்ளது.
இந்த காபி கஃபேயில் வண்ணமயமான பின்னணியில் கார்கள் காட்சிக்கு வைக்கப்பட்டுள்ளது. மேலும், இந்த கஃபேயில் விதவிதமான இந்திய, இத்தாலிய காபி வகைகள் கிடைக்கும். ரூ.79 முதல் ரூ.150 வரையிலான விலையில் காபி வகைகள் மற்றும் ஐஸ்கிரீம்கள் கிடைக்கும்.
காபியை ருசித்துக்கொண்டே அங்கு நிறுத்தப்பட்டிருக்கும் கார்களின் அழகை ரசிக்கலாம். தவிர, ஃபியட் பிராண்டில் ஆக்சஸெரீஸ்களும் அங்கு விற்பனைக்கு வைக்கப்பட்டுள்ளது.
ஃபியட் பிராண்டின் வரலாறு மற்றும் முக்கிய நிகழ்வுகளின் புகைப்படங்களும் அங்கு வைக்கப்பட்டுள்ளது. இந்த ஃபியட் கஃபே இந்திய வாடிக்கையாளர்களுக்கு ஒரு புதுமையான அனுபவமாக இருக்கும் என்று ஃபியட் தெரிவித்துள்ளது.
மேலும், பயிற்சி பெற்ற ஃபியட் பிரதிநிதிகள் மூலம் விளக்கங்களையும் பெறலாம். இந்த கஃபேயில் ஃபியட் கார்களை டெஸ்ட் டிரைவ் செய்து பார்க்கும் வாய்ப்பும் வழங்கப்படுகிறது.
அங்கு வைக்கப்பட்டிருக்கும் கம்ப்யூட்டர்கள் மூலம் ஃபியட் இணையதளத்தில் அந்த நிறுவனம் பற்றிய ஏ-இசட் தகவல்களை பெற முடியும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. டெல்லியை தொடர்ந்து புனேயில் தனது அடுத்த காபி கஃபேயை ஃபியட் திறக்க உள்ளது.


Click it and Unblock the Notifications








