கிரிஸ்லர் பிரிமியம் ஜீப்பை களமிறக்கும் ஃபியட்

இத்தாலியை சேர்ந்த ஃபியட் நிறுவனம் டாடா மோட்டார்ஸ் நிறுவனத்துடன் கூட்டு சேர்ந்து இந்தியாவில் கார் விற்பனை செய்து வருகிறது. டாடா மோட்டார்ஸ் ஷோரூம்களில் கார் விற்பனை செய்து வரும் ஃபியட் விற்பனை எதிர்பார்த்த இல்லாததால், விரைவில் தனியாக ஷோரூம்களை அமைத்து கார் விற்பனை செய்ய உள்ளது.
இந்த நிலையில், தனது போர்ட்போலியோவை அதிகரிக்கும் பணிகளை தற்போது ஃபியட் துவங்கியுள்ளது. இந்திய மார்க்கெட்டை முக்கியமானதாக கருதி பல முன்னணி வெளிநாட்டு நிறுவனங்கள் அதிக முதலீடுகளை செய்தும், பல புதிய மாடல்களையும் அறிமுகப்படுத்தி தங்களை பலப்படுத்தி வருகின்றன.
இதேபோன்று, தனது போர்ட்போலியோவை அதிகரிக்க ஃபியட்டும் முடிவு செய்துள்ளது. தனது கீழ் இயங்கும் புகழ்பெற்ற அமெரிக்க பிராண்டான கிறிஸ்லரின் தயாரிப்புகளையும், ஆல்பா ரோமியோ மற்றும் மஸராட்டி சூப்பர் கார்களையும் இந்தியாவில் அறிமுகப்படுத்த அந்த நிறுவனம் முடிவு செய்துள்ளது.
மேலும், இந்திய எஸ்யூவி மார்க்கெட்டில் முன்னெப்போதும் இல்லாத அளவுக்கு போட்டி அதிகரித்துள்ளது. எனவே, அந்த செக்மென்ட்டில் சரியான போட்டியை கொடுப்பதற்காக கிறிஸ்லரின் ஜீப் கிராண்டு செரோகி பிரிமியம் எஸ்யூவியை களமிறக்க ஃபியட் முடிவு செய்துள்ளது.
டொயோட்டோ ஃபார்ச்சூனர், ஃபோர்டு எண்டெவர், செவர்லே கேப்டிவா மற்றும் சாங்யாங் ரெக்ஸ்டன் பிரிமியம் ரக எஸ்யூவிக்களுக்கு இந்த பிரிமியம் ஜீப் நேரடி போட்டியாக இருக்கும். இதற்காக, கிறிஸ்லர் நிறுவனத்தின் உயர்மட்ட குழு ஒன்று சமீபத்தில் இந்தியா வந்து ஆய்வுகளை மேற்கொண்டுள்ளது.
மேலும், கிறிஸ்லர் கார்களை அமெரிக்காவில் இருந்து இறக்குமதி செய்து புனே அருகே உள்ள ரஞ்சன்கவுன் டாடா மோட்டார்ஸ் ஆலையில் அசெம்பிளிங் செய்ய திட்டமிடப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.


Click it and Unblock the Notifications








