பிரியோ பிளாட்பார்மில் புதிய செடான் கார்: ஹோண்டா திட்டம்?

ஜப்பானை சேர்ந்த ஹோண்டா நிறுவனம் ஜாஸ், சிட்டி, சிவிக், அக்கார்டு என பிரிமியம் கார்களை மட்டும் தற்போது விற்பனை செய்து வருகிறது. இதில், பிரியோ ஹேட்ச்பேக் மட்டும் விதிவிலக்கு.
மேலும், தற்போது ஹேட்ச்பேக் கார்களுக்கு அடுத்ததாக என்ட்ரி லெவல் செடான் கார்களின் விற்பனை நன்கு வளர்ந்து வருகிறது. இதைக்கருத்தில்க்கொண்டு, அந்த செக்மென்ட்டில் புதிய செடான் காரை களமிறக்க ஹோண்டா திட்டமிட்டிருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
இதனால், என்ட்ரி லெவல் செடான் கார் மார்க்கெட்டில் தனக்கு இருக்கும் வெற்றிடத்தை நிரப்ப முடியும் என்று அந்த நிறுவனம் நம்புகிறது.
புதிய செடான் கார் தற்போது விற்பனை செய்யப்பட்டு வரும் பிரியோ ஹேட்ச்பேக் கார் பிளாட்பார்மிலேயே வடிவமைக்க உள்ளதாகவும் தெரிகிறது.
புதிய செடான் காரை ரூ.5 லட்சம் விலையில் விற்பனைக்கு கொண்டு வரவும் ஹோண்டா முடிவு செய்துள்ளதாகவும் கூறப்படுகிறது. தற்போது என்ட்ரி லெவல் மார்க்கெட்டில் மாருதி ஸ்விப்ட் டிசையர் கொடி கட்டி பறக்கிறது.
இந்த நிலையில், குறைந்த விலையில் ஹோண்டா என்ட்ரி லெவல் செடான் காரை அறிமுகப்படுத்தினால், டிசையர் மார்க்கெட்டை உடைக்க முடியாவிட்டாலும் நிச்சயம் சிறிதளவு பாதிப்பை ஏற்படுத்தும் என்று கருதப்படுகிறது.
இதனிடையே, தாய்லாந்து வெள்ளத்தால் உதிரிபாகங்கள் தட்டுப்பாட்டால் தத்தளித்து வரும் ஹோண்டா நிறுவனம், இந்த ஆண்டு இந்திய மார்க்கெட்டில் புதிய கார் மாடல்கள் எதையும் அறிமுகப்படுத்தப் போவதில்லை என்று அறிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.


Click it and Unblock the Notifications








