மஹிந்திராவின் புதிய குட்டி விமானம் வெற்றிகரமாக பறந்தது

நாட்டின் மிகப்பெரிய வாகன தயாரிப்பாளரான மஹிந்திரா நிறுவனம் விமான தயாரிப்பு துறையிலும் இறங்கியுள்ளது. தனது துணை நிறுவனமான மஹிந்திரா ஏரோஸ்பேஸ் மூலம் விமான தயாரிப்பு துறையில் ஈடுபட்டுள்ளது.
தனது கட்டுப்பாட்டில் இயங்கும் ஆஸ்திரேலியாவை சேர்ந்த கிப்ஸ்ஏரோ நிறுவனத்துடன் இணைந்து சிறிய ரக விமானங்களை மஹிந்திரா தயாரித்து சோதனை நடத்தி வருகிறது. அந்த வகையில், தற்போது தயாரிக்கப்பட்டள்ள புதிய குட்டி விமானம் சமீபத்தில் வெற்றிகரமாக சோதனை நடத்தப்பட்டுள்ளது.
ஜிஏ-10 என்று பெயரிடப்பட்டுள்ள இந்த புதிய குட்டி விமானத்தின் முதல் சோதனை ஓட்டம் ஆஸ்திரேலியாவின் கிழக்கு விக்டோரியா மாகாணத்தில் உள்ள லாட்ரோப் விமான தளத்தில் நடந்தது.
விமானி டோனி மோரிஸ் மற்றும் பொறியாளர் கெர்ஹார்டு ஜோர்டான் ஆகியோர் விமானத்தில் 20 நிமிடங்கள் பறந்து சோதனை நடத்தினர். மிகத் தாழ்வாக பறந்தும் சோதனை செய்தனர். ஆனால், எந்தவித தொழில்நுட்ப பிரச்னையும் இல்லாமல் விமானம் வெற்றிகரமாக பறந்து தனது முதல் பயணத்தை நிறைவு செய்தது.
இந்த விமானத்தில் ரோல்ஸ் ராய்ஸ் நிறுவனத்தின் 250 டர்போ புரொப்பல்லர் எஞ்சின் பொருத்தப்பட்டிருக்கிறது. ஒற்றை எஞ்சினில் இயங்கும் இந்த விமானம் பல்முனை பயன்பாட்டு வசதிகளை கொண்டதாக இருக்கும். பயணிகள் சேவை மற்றும் சரக்கு ஏற்றிச் செல்வதற்கு மட்டுமின்றி ராணுவ கண்காணிப்பு, ஆய்வுகளுக்கும் பயன்படுத்த முடியும்.
வரும் 2014ம் ஆண்டில் இந்தியாவில் இந்த விமானத்தை மஹிந்திரா விற்பனைக்கு கொண்டு வருகிறது. இந்த விமானத்தை வாங்குவதற்கு ஏதுவாக விரைவில் முன்பதிவையும் துவங்க மஹிந்திரா திட்டமிட்டிருக்கிறது. இந்த புதிய விமானம் வெற்றிகரமாக சோதனை செய்யப்பட்டுள்ளதன் மூலம் விமான தயாரிப்பு துறையில் மஹிந்திரா புதிய மைல்கல்லை எட்டியுள்ளது.


Click it and Unblock the Notifications








