ஆட்டோமொபைல் பயிற்சி நிறுவனத்தை துவங்கும் மாருதி: ஏராளமானோருக்கு வேலை வாய்ப்பு

நம் நாட்டின் நம்பர்-1 கார் உற்பத்தியாளராக மாருதி திகழ்கிறது. சிறந்த சர்வீஸ், தரமான தயாரிப்புகளால் வாடிக்கையாளர் மனதில் நீங்கா இடத்தை பிடித்திருக்கிறது. கார் உற்பத்தியில் மட்டும் கவனம் செலுத்தாமல் முறையான டிரைவிங் பயிற்சி மற்றும் பயிற்சி பெற்ற பணியாளர்களை உருவாக்குவதிலும் மாருதி தீவிர கவனம் செலுத்தி வருகிறது.
அந்த வகையில், ஆட்டோமொபைல் துறைக்கு தேவையான முறையான பயிற்சி பெற்ற பணியாளர்களை உருவாக்கும் நோக்கத்தில், புதிய ஆட்டோமொபைல் பயிற்சி நிறுவனத்தை துவங்க இருப்பதாக மாருதி தெரிவித்துள்ளது.
இந்த புதிய பயிற்சி நிறுவனத்தில் சேர்வதற்கு கல்வி தகுதி எதுவும் தேவையில்லை என்று மாருதி தெரிவித்துள்ளது. படித்த இளைஞர்கள் மற்றும் ஆர்வமுள்ள ஆட்டோமொபைல் மெக்கானிக்குகள் இந்த பயிற்சியில் சேர்ந்து கொள்ளலாம்.
ஆட்டோமொபைல் தொழில்நுட்பம் மற்றும் ஆட்டோமொபைல் துறை சம்பந்தமான கற்றல் வழி பயிற்சிகளை இந்த நிறுவனம் வழங்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
பயிற்சியை வெற்றிகரமாக முடிப்பவர்களுக்கு சான்றிதழும் வழங்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், தனது சர்வீஸ் சென்டர்கள் மற்றும் கார் உற்பத்தி ஆலையில் ஏற்படும் காலியிடங்களுக்கு இந்த நிறுவனத்தில் பயிற்சி பெற்ற பணியாளர்களை பணிக்கு அமர்த்திக்கொள்ள இருப்பதாகவும் மாருதி தெரிவித்துள்ளது.
இதுதவிர, தனது சான்றிதழை பயன்படுத்தி வேறு நிறுவனங்களின் கார் ஷோரூம்கள், சர்வீஸ் சென்டர்கள் மற்றும் கார் ஆலைகளில் பணிக்கு சேர்ந்து கொள்ளும் வகையில் இந்த பயிற்சி நிறுவனத்தை துவங்க இருப்பதாகவும் அந்த நிறுவனம் தெரிவித்துள்ளது. இதனால், ஏராளமானோர் பயன்பெறுவர் என்று கருதப்படுகிறது.
மேலும், ஒட்டுமொத்த ஆட்டோமொபைல் நிறுவனங்களுக்கும் இது பயன்படும் வகையில் இருக்கும் என்றும் மாருதி தெரிவித்துள்ளது.


Click it and Unblock the Notifications








