கார்களை கஸ்டமைசேஷன் செய்து தரப்போகும் மாருதி

கார் உற்பத்தியில் ஜாம்பவானாக திகழும் மாருதி தனது பரந்து விரிந்த நெட்வொர்க் மற்றும் இனிய சேவையால் வாடிக்கையாளர் மத்தியில் நன்மதி்ப்பை பெற்ற நிறுவனமாக திகழ்கிறது.
மேலும், சாலையில் செல்லும் 5ல் 4 கார்கள் மாருதி நிறுவனத்தின் தயாரிப்பு என்ற பெருமையையும் தக்க வைத்து வருகிறது. இந்த நிலையில், வாடிக்கையாளர்களின் விருப்பத்திற்கேற்ப கார்களை மாற்றித்தரும் சேவையையும் மாருதி விரைவில் துவங்குகிறது.
கடந்த 2007ம் ஆண்டே கார்களை கஸ்டமைசேஷன் செய்து தரும் சேவையை மாருதி துவங்கியது. ஆனால், டாக்சி நிறுவனங்களுக்கு வாங்கப்படும் வெர்சா காருக்கு மட்டும் கஸ்டமைசேஷன் செய்து தரும் சேவையை மாருதி செய்து வந்தது.
இந்த நிலையில், தனது அனைத்து கார் மாடல்களுக்கும் வாடிக்கையாளர்கள் விருப்பத்திற்கு தக்கவாறு கார்களை கஸ்டமைசேஷன் செய்து தரும் சேவையை அந்த நிறுவனம் விரைவில் துவங்குகிறது.
நாடு முழுவதும் முக்கிய நகரங்களில் கட்டப்பட இருக்கும் லாஜிஸ்டிக் ஹப்புகளில் கார் கஸ்டமைசேஷன் சேவையை துவங்க அந்த நிறுவனம் திட்டமிட்டுள்ளது.
பெங்களூரில் இதுபோன்ற லாஜிஸ்டிக் ஹப்பை மாருதி கட்டியுள்ளது. 120 ஏக்கரில் கட்டப்பட்டிருக்கும் இந்த லாஜிஸ்டிக் ஹப்பில் கார் கஸ்டமைசேஷன் விரைவில் துவங்கப்பட உள்ளது. இதைத்தொடர்ந்து, நாக்பூர், சிலிகுரி மற்றும் பன்னார்க் ஆகிய இடங்களில் இதுபோன்ற லாஜிஸ்டிக் ஹப்புகள் கட்டப்பட உள்ளன.
அங்கு கார் கஸ்டமைசேஷன் சேவையை மாருதி துவங்க உள்ளது. மாருதியின் கார் கஸ்டமைசேஷன் வாடிக்கையாளர் மத்தியில் பெரும் வரவேற்பை பெறும் என்று கருதப்படுகிறது.
இதுகுறித்து மாருதியின் புரோடெக்ஷன் எஞ்சினியரிங் பிரிவு செயல் இயக்குனர் தயாள் கூறியதாவது:
"வாடிக்கையாளர் சேவையில் மாருதி முன்னிலை வகிக்கிறது. இதற்கு மேலும் மெருகூட்டும் விதமாக கார் கஸ்டமைசேஷன் சேவையையும் துவங்குகிறோம்.
கார் கஸ்டமைசேஷன் செய்யும் நிறுவனங்கள் பொதுவாக 8 முதல் 10 நாட்கள் எடுத்துக்கொள்கின்றன. ஆனால், நாங்கள் வெறும் 12 மணிநேரம் முதல் 24 மணிநேரத்திற்குள் கார் கஸ்டமைசேஷன் செய்து கொடு்த்து விடுவோம்.
இதற்காக, நவீன தொழில்நுட்ப வசதிகளுடன் கஸ்டமைசேஷன் மையங்களை அமைக்க உள்ளோம். வாடிக்கையாளர்கள் தேவையில்லாமல் காத்துக்கிடக்க வேண்டிய அவசியம் இல்லை," என்றார்.


Click it and Unblock the Notifications








