சென்னையிலிருந்து சன்னி கார் ஏற்றுமதி: நிசான் அறிவிப்பு

ஜப்பானை சேர்ந்த நிசான் நிறுவனம் சென்னை அருகே ஒரகடத்தில் ஆலை அமைத்து கார் உற்பத்தி செய்து வருகிறது. இந்த ஆலை பிரான்சு நாட்டை சேர்ந்த ரினால்ட் நிறுவனத்தின் கூட்டணியில் அமைக்கப்பட்டுள்ளது.
இந்த ஆலையிலிருந்து மைக்ரா காரை பல்வேறு நாடுகளுக்கு நிசான் ஏற்றுமதி செய்து வருகிறது. இதைத்தொடர்ந்து, தற்போது சன்னி காரை ஏற்றுமதி செய்ய இருப்பதாக அந்த நிறுவனம் தெரிவித்துள்ளது.
வரும் மார்ச் மாதம் முதல் சென்னை ஆலையிலிருந்து சன்னி ஏற்றுமதி செய்யப்படும் என்று நிசான் உயரதிகாரி தெரிவித்துள்ளார். முதலில் மத்திய கிழக்கு நாடுகளுக்கு சன்னி கார் ஏற்றுமதி செய்யப்பட இருப்பதாகவும் அவர் கூறினார்.
உள்நாட்டு தேவை மற்றும் ஏற்றுமதி தேவைகளை சமாளிக்கும் விதமாக தனது சென்னை ஆலையின் உற்பத்தி திறனை அடுத்த இரு ஆண்டுகளில் ஆண்டுக்கு 4 லட்சமாக உயர்த்த நிசான்-ரினால்ட் கூட்டு குழுமம் திட்டமிட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.


Click it and Unblock the Notifications








