டிரக்,பஸ் உற்பத்திக்காக ரூ.150 கோடியில் ஆலை: ஸ்கேனியா

வால்வோ நிறுவனத்தை போன்றே ஸ்வீடனை சேர்ந்த ஸ்கேனியா நிறுவனம் கனரக டிரக்குகளை தயாரிப்பதில் பிரபலமான நிறுவனமாக திகழ்கிறது. இந்த நிறுவனத்தின் 70 சதவீத பங்குகள் வோக்ஸ்வேகன் வசம் உள்ளது.
கடந்த 2007ம் ஆண்டு முதல் எல் அண்ட் டி நிறுவனத்துடன் இணைந்து இந்தியாவில் டிரக்குகளை தயாரித்து வருகிறது. இந்த நிலையில், இந்தியாவில் தனித்து டிரக் மற்றும் பஸ் உற்பத்தியை துவங்க அந்த நிறுவனம் முடிவு செய்தது. கடந்த ஆண்டு இதுகுறித்த முடிவை அறிவித்தது.
வால்வோ நிறுவனம் பெங்களூரில் ஆலை அமைத்து பஸ் தயாரித்து வரும் நிலையில், தற்போது பெங்களூர் அருகேயுள்ள நரசப்பூர் தொழிற்பேட்டையில், டிரக் மற்றும் இன்டர் சிட்டி பஸ் தயாரிப்புக்காக புதிய அசெம்பிளிங் ஆலையை கட்ட இருப்பதாக ஸ்கேனியா அறிவித்துள்ளது.
அடுத்த ஓர் ஆண்டில் புதிய ஆலைக்காக ரூ.150 கோடியை முதலீடு செய்ய இருப்பதாக அந்த நிறுவனம் இன்று அறிவித்துள்ளது. மேலும், அடுத்த 5 ஆண்டுகளில் 2,000 டிரக் மற்றும் பஸ்களை உற்பத்தி செய்யவும் அந்த நிறுவனம் இலக்கு வைத்துள்ளது.
முதலில் டிரக்குகளை உற்பத்தி செய்யவும், தொடர்ந்து இன்டர் சிட்டி பஸ்களை தயாரிக்கவும் திட்டமிடப்பட்டுள்ளது. ஸ்வீடனிலிருந்து உதிரிபாகங்களாக இறக்குமதி செய்து, பெங்களூர் ஆலையில் டிரக்குகள் மற்றும் பஸ் அசெம்பிளிங் செய்யப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
பெங்களூரில் அமைக்கப்படும் புதிய ஆலை மூலம் 800 பேருக்கு வேலை கிடைக்கும் என்று ஸ்கேனியா தெரிவித்துள்ளது.ஸ்கேனியாவின் இன்டர்சிட்டி பஸ்கள் வால்வோ பஸ் மார்க்கெட்டுக்கு நிச்சயம் சவாலாக அமையும் என்று கருதப்படுகிறது.


Click it and Unblock the Notifications








