இந்தியாவில் அப் காரை அறிமுகப்படுத்த வோக்ஸ்வேகன் திட்டம்

ஜெர்மனியை சேர்ந்த வோக்ஸ்வேகன் நிறுவனம் இந்திய மார்க்கெட்டை தனக்கு மிக முக்கியமான மார்க்கெட்டாக கருதுகிறது.
பிரிமியம் ஹேட்ச்பேக் கார் பிரிவில் போலோ கார், மிட்சைஸ் செக்மென்ட்டில் வென்ட்டோ கார், பஸாத் பிரிமியம் செடான் கார்களை விற்பனை செய்து வருகிறது. டெல்லி ஆட்டோ கண்காட்சியில்தான் புதிய டூரக் பிரிமியம் எஸ்யூவியை அறிமுகம் செய்தது.
அந்த நிறுவனத்திற்கு சிறிய கார் மற்றும் எம்பிவி செக்மென்ட்டில் மாடல்கள் இல்லை. இந்த நிலையில், இந்தியாவில் சிறிய கார்களுக்கு அதிக மவுசு இருப்பதால், அந்த செக்மென்ட்டில் தனது அப் காரை நிலைநிறுத்த அந்த நிறுவனம் முடிவு செய்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
அப் ஹேட்ச்பேக் கார் ஐரோப்பிய நாடுகளில் 3 கதவுகள் கொண்ட மாடலில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. ஆனால், இந்தியாவில் 5 டோர் கொண்ட அப் ஹேட்ச்பேக் காரை அறிமுகம் செய்ய அந்த நிறுவனம் திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது.
மேலும், ரூ.3 லட்சம் முதல் ரூ.4 லட்சம் வரையிலான விலையில் அப் ஹேட்ச்பேக் காரை விற்பனைக்கு கொண்டு வரவும் வோக்ஸ்வேகன் திட்டமிட்டுள்ளது. இதன்மூலம், தனது மார்க்கெட் பங்களிப்பை வெகுவாக உயர்த்த முடியும் என்று அந்த நிறுவனம் நம்புகிறது.
மேலும், புதிதாக அறிமுகப்படுத்தும் மாடல்களை தனது எம்க்யூபி பிளாட்பார்மில் வடிவமைத்து விற்பனைக்கு கொண்டு வரவும் அந்த நிறுவனம் திட்டமிட்டிருக்கிறது.
இந்திய மார்க்கெட்டில் மாருதி எர்டிகா, செவர்லே என்ஜாய் மற்றும் நிசான் இவாலியா என்று அடுத்தடுத்து புதிய எம்பிவி மாடல்கள் களமிறங்க உள்ளன. எனவே, அந்த செக்மென்ட்டிலும் தனது கார் மாடல் இருக்க வேண்டும் என்று வோக்ஸ்வேகன் விரும்புகிறது.
புதிய மாடல்கள் அறிமுகப்படுத்துவதற்காக அடுத்த ஆண்டுக்குள் ரூ.2,000 கோடியை இந்தியாவில் முதலீடு செய்ய இருப்பதாக வோக்ஸ்வேகன் சமீபத்தில் அறிவித்தது குறிப்பிடத்தக்கது.


Click it and Unblock the Notifications








