ஆபத்தை அறியாமல் கார் ஓட்டும்போது அன்றாடம் செய்யும் தவறுகள்!
விளையாட்டுக்கு கூட சில விஷயத்தை செய்து பார்க்கக் கூடாது என்பார்கள். ஆனால், தெரிந்தோ, தெரியாமலோ அதிக ஆபத்தை விளைவிக்கும் சில விஷயங்களை கார் ஓட்டும்போது சிலர் அன்றாடம் செய்கின்றனர்.
அப்படி செய்யும் சில தவறுகள் பேராபத்தில் முடியும் ஆபத்தும் உண்டு. அவ்வாறு அன்றாடம் கார் ஓட்டுனர்கள் செய்யும் சில தவறுகளை இங்கே காணலாம். இந்த தவறுகளை இதுவரை செய்திருந்தாலும், இனி செய்யாமல் இருப்பது உங்கள் கையில்தான் உள்ளது.

01. இன்டிகேட்டர்
வளைவுகளில் திரும்பும்போது இன்டிகேட்டர் போடாமல் சட்டென காரை திருப்புவதை பலர் வழக்கமாக வைத்துள்ளனர். அவ்வாறு திரும்பும்போது பின்னால் வரும் வாகனங்கள் மோதுவதற்கு அதிக வாய்ப்புகள் உள்ளன. சமயத்தில் பெரிய விபத்துக்குக்கூட காரணமாக அமைந்துவிடுவதை கண்டிருக்கலாம். எனவே, வளைவுகளில் திரும்பும்போது சற்று நிதானமாகவும், சமிக்ஞை விளக்கை ஒளிர விட்ட பின்னரே திரும்புவது அவசியம்.

02. ஹை பீம் ஹெட்லைட்
நகர்ப்புறங்களில் சிலர் ஹை- பீம் ஹெட்லைட்டை ஒளிர விட்டபடியே செல்வார்கள். எதிரில் வரும் வாகன ஓட்டிகளுக்கு மிகுந்த சிரமத்தை ஏற்படுத்தும் என்பதை உணர்வதில்லை. அதேபோன்று, ஒருவழி தடம் கொண்ட சாலைகளிலும் ஹை- பீம் விளக்கிலேயே தொடர்ந்து வாகனத்தை செலுத்துகின்றனர். சிலசமயம் எதிரில் வரும் வாகன ஓட்டிகள் கண் கூச்சம் ஏற்பட்டு உங்களது வாகனத்திலேயே மோதும் ஆபத்து உள்ளது.

03. சீட்டில் உட்காரும்போது...
சிலர் வீட்டில் சாய்மான நாற்காலியில் அமர்ந்து இருப்பது போல இருக்கையை பின்னால் தள்ளிவிட்டும், சாய்த்துக் கொண்டும் அமர்ந்து செல்கின்றனர். இதனால், விரைவாக உடல் சோர்வு ஏற்படும். தூக்கம் வந்து தொலையும். அதுமட்டுமில்லை, க்ளட்ச், பிரேக் பெடல்களை அவசரத்தில் கட்டுப்படுத்துவது சிரமமாகிவிடும். இதனையெல்லாம் விட முக்கிய விஷயம், ஏர்பேக் பொருத்தப்பட்ட கார்களில் சரியாக அமரவில்லை என்றால், அதனாலேயே உங்களுக்கு பாதிப்பை ஏற்படுத்தும் அபாயமும் உள்ளது.

04. சிக்னல் ஜம்ப்
சிக்னலில் மஞ்சள் விளக்கை கண்டுகொண்டு அவசரமாக சாலையை கடப்பதற்கு வேகமாக செல்வதும் பெரிய விபத்துக்களுக்கு வழிகோலுகின்றன. மஞ்சள் விளக்கு போட்டவுடனே வேகத்தை குறைத்து வாகனத்தை கண்டிப்பாக நிறுத்திவிடவும். அதேபோன்று, சிக்னல் போடுவதற்கு முன்னரே அவசரமாக கிளப்பி கொண்டு செல்வதையும் தவிர்க்க வேண்டும்.

05. தடம் மாறுதல்
சில வேளைகளில் திரும்ப வேண்டிய இடத்தை பார்த்ததும் அவசரமாக சிலர் காரை தடம் மாற்றுவதற்கு முயல்வர். இதுவும் பெரிய விபத்துக்களுக்கு வழியாக அமையும். சிறிது சுற்றி வரும் நிலை ஏற்பட்டாலும், இந்த விஷயத்திலும் அவசரப்பட வேண்டாம்.

06. ஆமை வேகத்தில்
சிலர் வேகமாக செல்லும் தடத்தில் காரை மிக மெதுவாக உருட்டிக் கொண்டு செல்வர். இதனையும் தவிர்ப்பது அவசியம். போக்குவரத்து நெரிசலுக்கு வழி வகுக்கும் என்பதுடன், வேகமாக வரும் வாகனங்கள் ஒன்றையொன்று முந்தும்போது விபத்துக்களுக்கும் வழிகோலும்.

07. பகல் நேர விளக்குகள்
தற்போது பல கார்களில் பகல்நேர விளக்குகள் கொடுக்கப்படுகின்றன. நெடுஞ்சாலைகளில் செல்லும்போது முன்னால் செல்லும் வாகனங்களுக்கு தெளிவாக தெரிவதற்காக பயன்படுத்தப்படும் இந்த விளக்கு இப்போது பேஷனாகிவிட்டது. சிலர் இந்த விளக்குகளை இரவு நேரத்திலும் பயன்படுத்துகின்றனர்.

08. சடன் பிரேக்
எந்த ஒரு சமிக்ஞையும் இல்லாமல் காரை திடீரென சாலையில் நிறுத்துவது பலரது வழக்காக உள்ளது. அதுபோன்று நிறுத்தும்போது பின்னால் வரும் வாகனங்கள் கட்டுப்பாட்டை இழந்து மோதுவதற்கான வாய்ப்பு உள்ளது. காரை நிறுத்தும்போது நிதானித்து பின்னால் வாகனங்கள் வருவதை கண்டு கொண்டு நிறுத்துவதும், சமிக்ஞை விளக்குகளை பயன்படுத்துவதும் அவசியம்.

09. மொபைல்போனில் பேச்சு
மொபைல்போனில் பேசுவதும், குறுந்தகவலை டைப் செய்துகொண்டே கார் ஓட்டுவதும் கைவந்த கலை எனக்கு என்று பலர் காட்ட முயல்கின்றனர். ஆனால், குடிபோதை டிரைவிங் போன்றே, இதுவும் விபத்துக்கு வழி விபத்துக்கு வழிகோலும் விஷயமாக இருக்கிறது.

10. சைடு மிரர்கள்
சைடு மிரர்கள் மற்றும் காரின் உட்புறத்தில் இருக்கும் ரியர் வியூ மிரரை சரியான திசையில் வைத்துக் கொண்டு செல்வதும் அவசியம். இதன்மூலமாக, பின்னால் வரும் வாகனங்களின் நடமாட்டத்தை எளிதாக கணிக்க முடியும்.


Click it and Unblock the Notifications








