பிரேக்குகள் தரும் எச்சரிக்கை மொழிகளை நாம் உணர்ந்துக்கொள்வது எப்படி..? 5 டிப்ஸ்..!!
தொழில்நுட்ப ரீதியாக என்னதான் வாகனங்கள் மேம்படுத்தப்பட்டு இருந்தாலும், வாகன ஓட்டிகளுக்கு அவசர காலங்களில் கைக்கொடுப்பது பிரேக்குகள் தான்.

அவற்றின் உறுதித்தன்மையை உணர, அதனுடைய நுட்பமான மொழியை நாம் தெரிந்து வைத்திருப்பது அவசியமாகிறது.
பிரேக்குகளுக்கு மொழியா..? என்று உங்களுக்குள் ஐயம் வரலாம், ஆனால் மேலும் தொடர்ந்து படித்தால் உங்களுக்கே புரியும்.

கீச்சொலி
பிரேக்கின் திறன் தேய்ந்துக்கொண்டே வருகிறது என்பதை அதிலிருந்து வரும் கீச்சொலி மற்றும் கிறீச்சொலிகள் மூலம் நாம் அறியலாம்.
இதை உடனே கவனித்து உங்களது வண்டியை அடுத்தநொடியே மெக்கானிக்கிடம் காட்டுவது சாலச் சிறந்தது.

கொற.. கொற.. சத்தம்
கீச்சொலி ஒரு எச்சரிக்கை தான். மேலும் நீங்கள் அதை கவனிக்கவில்லை என்றால் கொற கொற அல்லது உர்ர்ர்ர் என்று உறுமும் சத்தம் வரும்.
இவ்வாறு உங்களுக்கு பிரேக் பிடிக்கும் போது கேட்டால், பிரேக்கின் ஜீவன் முற்றிலுமாக முடிந்து விட்டது என்று அர்த்தம்.
இதற்கு பிறகும் நீங்கள் வாகனத்தை ஓட்டிக்கொண்டு இருந்தால்,ரோட்டர் பாழாகிவிடும். செலவு மலையளவு ஏறிவிடும்.

அதிர்வும் ஆட்டமும்
பிரேக் பிடிக்கும் சமயத்தில் பெடலில் அதிர்வு அல்லது ஆட்டம் காட்டினால், பிரேக் அமைப்பு பழுதடைந்து வருகிறது என்பது உறுதி.
அதையும் தாண்டி பிரேக் பிடித்து கார் முழுவதுமாககுலுங்கினால் அது மிகவும் ஆபத்தானது. பெரிய ஆபத்து வருவதற்கான எச்சரிக்கையாக இதை பாருங்கள்.
இந்த சூழ்நிலையை உணர்ந்தால், உடனே காரை மெக்கானிக்கிடம் காட்டவும். வேறு மாற்று வழி இதற்கு கிடையாது என்பது தான் உண்மை.

பிரேக் திரவம் கசிவு
இவ்வாறான ஒரு பிரச்சனையை வாகன ஓட்டிகள் பலர் தெரிந்துவைத்திருப்பது இல்லை என்பது மெக்கானிக்களிடம் இருந்து எங்களுக்கு கிடைக்கும் தகவல்.
பிரேக்கிற்கான திரவத்தில் கசிவு ஏற்படுகிறது என்றால், நீங்கள் பெடலை கீழே அழுத்தும் போது, அது மிகவும் எளிதாக முற்றிலும் இறங்கும்.

சில சூழ்நிலைகளில் தன்னிச்சையாக மேல எழாமல், நீங்களே பெடலை தூக்கிவிட வேண்டும். இதற்கு உடனடி சர்வீஸ் அவசியம்.
நெடுஞ்சாலை, வேகமான பயணம் என நீங்கள் காரில் செல்லும் போது, இதுபோன்ற பிரச்சனைக்கு உடனடி தீர்வு காணவேண்டும். இல்லையேல் அது பாதுக்காப்பான பயணமாக இருக்காது.

எச்சரிக்கை விளக்குகள்
மொத்த பிரேக்கிங் அமைப்புகளுக்கும் மற்றும் ஏபிஎஸ் கருவிக்கும் தனித்தனியே வாகனங்களில் விளக்கு ஒளி அமைப்பு இருக்கும்.
இதை அவசியம் ஓட்டுநர்கள் தெரிந்துவைத்திருக்க வேண்டும். அவசர காலங்களில் உங்களது காரை கட்டுப்படுத்த முடியவில்லை என்றால்

அப்போது ஏபிஎஸ் தன்னிச்சையாக இயங்கும், அதை உணர்த்த விளக்கும் உடன் எரியும். பிறகு பிரச்சனை தீர்ந்தவுடன் ஏபிஎஸ் மீண்டும் அதுவாகவே அணைந்துவிடும்.
ஆனால் பிரேக்கிங் சிஸ்டத்திற்காக இயங்கும் விளக்குகள் ஒரு எச்சரிக்கை மணி. கார் அல்லது பைக்கின் மொத்த பிரேக்கிங் சிஸ்டத்தில் பிரச்சனையை உணர்த்த அந்த விளக்குகள எரியும்.

ஒரு வாகன ஓட்டி பாதுக்காப்பான பயணத்தை விரும்புவர், மேல சொல்லப்பட்டுள்ள இந்த ஐந்து வழிமுறைகளை அறிந்து வைத்திருப்பது மிக மிக அவசியம்.

அனைத்தையும் விட முக்கியமானது, இதில் ஏதாவது ஒரு பிரச்சனையை வாகனத்தின் நிறுத்த அமைப்பில் உணர்ந்தால், தொழில் தெரிந்த உரிய மெக்கானிக்கிடம் எடுத்து செல்லவேண்டும்.


Click it and Unblock the Notifications








