புதிய கார்களில் வழங்கப்படும் 'மூன்றாவது கண்' தொழில்நுட்பம்... இதனால் என்னென்ன பயன்கள்?
கவனக் குறைவு அல்லது ஓட்டுனரின் கண்களுக்கு புலப்படாத விஷயங்களை கண்டறிந்து முன்கூட்டியே எச்சரிக்கும் Advanced Driver Assistance Sytem (ADAS) என்ற அதிநவீன பாதுகாப்பு தொழில்நுட்பம் இந்தியாவில் அறிமுகமாகும் புதிய கார்களில் வழங்கும் நடைமுறை துவங்கி இருக்கிறது. இந்த தொழில்நுட்பம் செயல்படும் விதம், இதனால் என்னென்ன முறையில் பாதுகாப்பு கிடைக்கிறது என்ற விபரங்களை தொடர்ந்து பார்க்கலாம்.

அண்மையில் விற்பனைக்கு வந்த எம்ஜி க்ளோஸ்ட்டர் எஸ்யூவியில் இந்த புதிய பாதுகாப்பு தொழில்நுட்பம் வழங்கப்பட்டது. தற்போது சோதனை ஓட்டத்தில் வைக்கப்பட்டுள்ள புதிய தலைமுறை மஹிந்திரா எக்ஸ்யூவி500 எஸ்யூவியிலும் இந்த ADAS தொழில்நுட்பம் வழங்கப்பட உள்ளதும் தெரிய வந்துள்ளது. ஓட்டுனரின் கவனக்குறைவு அல்லது புலப்படாத பகுதிகளில் வரும் ஆபத்துக்களை முன்கூட்டியே கண்டறிவதற்கு இந்த தொழில்நுட்பம் உதவுகிறது.

ஏடிஏஎஸ் தொழில்நுட்பத்திற்காக கார்களில் பிரத்யேக சென்சார்கள், கேமரா மற்றும் ரேடார் கருவி உள்ளிட்டவை பொருத்தப்படுகின்றன. இவை ஒரு சிறிய கம்ப்யூட்டருடன் இணைக்கப்பட்டு கார் இயக்கத்தை தொடர்ந்து கண்காணிக்கும். கார் செல்லும் பாதையில் இருக்கும் தடைகள், பாதசாரிகள் குறுக்கே வரும் தகவல்களை முன்கூட்டியே தெரிவிக்கும். ஓட்டுனரை தவிர்த்து இது காரின் மூன்றாவது கண் போன்று செயல்படும்.

மேலும், ஓட்டுனருக்கு கண்ணுக்கு புலப்படாத பகுதிகளில் இருந்து வரும் ஆபத்துக்கள் மற்றும் இதர வாகனங்கள் குறித்தும் ஓட்டுனருக்கு எச்சரிக்கை வழங்கும். கேமரா மற்றும் சென்சார்களிலிருந்து கிடைக்கும் தரவுகளின் அடிப்படையில், இதன் கம்ப்யூட்டர் ஓட்டுனருக்கு எச்சரிக்கைகளை வழங்கும்.

இந்த ஏடிஏஎஸ் சிஸ்டம்தான் அடாப்டிவ் க்ரூஸ் கன்ட்ரோல் முறையில் கார் இயங்குவதற்கான பாதுகாப்பையும் உறுதி செய்கிறது. முன்னால், பின்னால் வரும் இதர வாகனங்கள் எவ்வளவு தூரத்தில், எவ்வளவு வேகத்தில் வருகின்றன. அவை ஆபத்தான தூரத்தில் நெருங்கி வரும்போது ஓட்டுனருக்கு உடனடியாக எச்சரிக்கை வழங்குவதுடன், காரின் வேகத்தை கூட்டி குறைக்கும் பணியையும் தானியங்கி முறையில் செய்வதற்கான தரவுகளை அடாப்டிவ் க்ரூஸ் கன்ட்ரோல் சிஸ்டத்திற்கு வழங்குகிறது.

அதேபோன்று, நெடுஞ்சாலைகளில் தடம் மாறும்போது பின்புற கேமரா மூலமாக தடத்திற்கான குறியீடுகளையும், பின்னால் வரும் வாகனங்களையும் உணர்ந்து கொண்டு ஓட்டுனருக்கு எச்சரிக்கை வழங்கும். இதுவும் காரின் பாதுகாப்பை வெகுவாக உறுதி செய்யும்.

மேலும், ரேடார், கேமரா, சென்சார்கள் உதவியுடன் முன்னால் செல்லும் அல்லது எதிரில் வரும் வாகனங்களின் வேகம், நகர்வுகளை கணித்து, மோதல் நிகழ்வதற்கான வாய்ப்புகள் உள்ளது குறித்து ஓட்டுனரை எச்சரிக்கும். மேலும், ஓட்டுனர் கவனிக்க தவறினால் கூட தானியங்கி முறையில் பிரேக் பிடித்து காரை நிறுத்திவிடும் வசதியையும் இந்த ஏடிஏஎஸ் தொழில்நுட்பம் வழ்கும்.

இரவு நேரத்திலும் சாலையை கண்காணித்து செல்வதற்கும், பாதசாரிகள் குறுக்கே வருவது குறித்த எச்சரிக்கையும் ஓட்டுனருக்கு வழங்கும். மேலும், மனிதன், விலங்குகள் உள்ளிட்ட உயிரினங்களை தெர்மல் இமேஜிங் தொழில்நுட்பத்தின் மூலமாக அடையாளம் கண்டு கொண்டு துல்லியமான தரவுகளை ஓட்டுனருக்கு வழங்கும்.

மேலும், சாலையில் உள்ள போக்குவரத்து குறியீடுகளையும் உணர்ந்து கொண்டு வேக வரம்பு, சாலை சந்திப்புகள் குறித்த எச்சரிக்கையும் ஓட்டுனருக்கு வழங்கும். இதனால், சாலை சந்திப்புகளை கவனமாக கடப்பதற்கான வாய்ப்பை வழங்கும். தானியங்கி முறையில் பார்க்கிங் செய்வதற்கான வாய்ப்பையும் இந்த தொழில்நுட்பம் வழங்கும்.

ஏடிஏஎஸ் தொழில்நுட்பம் முழுமையாக இயங்குவதற்கு சிறப்பான கட்டமைப்புடன் கூடிய நெடுஞ்சாலைகள் அவசியமாகிறது. இல்லையெனில், இதன் முழுமையான பலனை பெறுவதில் சில தடங்கல்கள் உள்ளன. மேலும், சாலைகளில் வலுவான 3ஜி அல்லது 4ஜி எல்டிஇ இன்டர்நெட் வசதி ஆகியவை அவசியமாகிறது. மறுபுறத்தில் ஏடிஏஎஸ் தொழில்நுட்பம் கொண்ட கார்களில் கொடுப்பதால், விலையை அதிகமாக நிர்ணயிக்க வேண்டி இருப்பதால், அனைத்து தரப்பு வாடிக்கையாளர்களையும் சென்றடைவதில் சிக்கல்கள் உள்ளன.

எனினும், வரும் 2022ம் ஆண்டு முதல் அனைத்து கார்களிலும் இந்த ஏடிஏஎஸ் பாதுகாப்பு தொழில்நுட்பத்தை கட்டாயமாக்குவதற்கான முயற்சிகளை எடுக்க உள்ளதாக 2018ம் ஆண்டு நடந்த சியாம் அமைப்பின் கூட்டத்தில் மத்திய சாலை மற்றும் நெடுஞ்சாலை போக்குவரத்து துறை அமைச்சர் தெரிவித்திருந்தார்.

வால்வோ, மெர்சிடிஸ் பென்ஸ் நிறுவனங்களின் கார்களில் இந்த பாதுகாப்பு தொழில்நுட்ப வசதி இடம்பெற்றிருக்கிறது. தற்போது எம்ஜி க்ளோஸ்ட்டர் எஸ்யூவியிலும் வழங்கப்படுகிறது. இந்த நிலையில், உலகிலேயே அதிக சாலை விபத்துக்களும், அதனால் அதிக உயிரிழப்புகளும் நடைபெறும் நாடாக இந்தியா உள்ள நிலையில், இந்த பாதுகாப்பு தொழில்நுட்பம் விபத்துக்களை குறைப்பதற்கு அதிக வாய்ப்பை தரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.


Click it and Unblock the Notifications








