திருடு போன காருக்கு இன்சூரன்ஸ் க்ளைம் பெற காரின் 2 சாவிகளும் கட்டாயம் ஏன் தெரியுமா?
திருடு போன காருக்கு இன்சூரன்ஸ் க்ளைம் பெறும் போது காரின் 2 ஒரிஜினல் சாவிகளையும் இன்சூரன்ஸ் நிறுவனங்கள் கேட்கும் இது ஏன்? இதற்குப் பின்னால் உள்ள காரணம் என்ன? இது கட்டாயமா? இது குறித் விரிவான விபரங்களைக் காணலாம் வாருங்கள்
புதிதாக கார்கள் விற்பனை செய்யப்படும் போது அந்த காருக்கு மொத்தம் 2 சாவிகள் வழங்கப்படும். இது சாதாரணமான ஒரு விஷயம் தான். இது ஒரு புறம் இருக்கட்டும். காருக்கான இன்சூரன்ஸ் போடும் போது ஒருவர் காம்ப்ரிஹென்ஸிவ் இன்சூரன்ஸ் போட்டுக்கொண்டால் அவர் கார் திருடு போனாலும் அதற்காக இன்சூரன்ஸ் க்ளைம் செய்ய முடியும்.

கான்ப்ரீஹென்ஸிவ் இன்சூரன்ஸ்
அரசு 3ம் நபருக்கான இன்சூரன்ஸை தான் கட்டாயமாக்கியுள்ளது. ஆனால் இன்சூர் செய்பவர் நினைத்தால் காம்ப்ரிஹென்ஸிவ் இன்சூரன்ஸை எடுத்துக்கொள்ள முடியும். இப்படியாக கான்ப்ரீஹென்ஸிவ் இன்சூரன்ஸ் எடுத்துக்கொண்டால் காரில் எப்படிப்பட்ட நஷ்டம் ஏற்பட்டாலும் அதை இன்சூரன்ஸ் நிறுவனங்கள் ஈடு செய்யும் கார் விபத்தில் சிக்கியது முதல் காரில் உதிரிப் பாகங்கள் ரிப்பேர் ஆவது வரை எல்லாம் இதில் கவர் ஆகும்.
இதில் கார் திருட்டு போவதும் கவர் ஆகும். ஆம் நம் கார் திருடு போனால் கூட இந்த காம்ப்ரீஹென்ஸிவ் இன்சூரன்ஸில் க்ளைம் செய்து நஷ்டத்தை ஈடு செய்யலாம். பலருக்கும் இந்த தகவல் தெரியும். இது எல்லாம் இன்சூரன்ஸ் எடுக்கும் முன்பு வரை எல்லோருக்கும் சொல்லப்படும். ஆனால் இப்படியாக காம்ப்ரீஹென்ஸிவ் இன்சூரன்ஸில் திருடு போன காருக்கு க்ளைம் பெறுவது பெரும் தலைவலி.

இன்சூரன்ஸ் கிளைம்
இதற்கு கிளைம் பெற வேண்டும் என்றால் கார் திருடு போனதைப் போலீசில் புகார் அளித்து முதல் தகவல் அறிக்கையைப் பெற வேண்டும். பின்னர் அந்த காரை கண்டுபிடிக்க முடியவில்லை என போலீசார் சொன்ன பிறகு தான் இந்த இன்சூரன்ஸிற்கு பணம் க்ளைம் கிடைக்கும். அது மட்டுமல்ல இந்த கார் வாங்கும் போது எத்தனை சாவி வழங்கப்பட்டதோ அத்தனை சாவிகளையும் இன்சூரன்ஸ் நிறுவனத்திடம் ஒப்படைக்க வேண்டும். ஒரிஜினல் சாவியை மட்டுமே ஒப்படைக்க வேண்டும்.
ஏன் சாவியை ஒப்படைக்க வேண்டும்?
பலருக்குக் குழப்பம் இருக்கும் ஏன் சாவியை ஒப்படைக்க வேண்டும் என. இன்சூரன்ஸ் நிறுவனம் இப்படியாகத் திருட்டுப் போன காருக்கு இழப்பீடு வழங்கும் போது இதில் மோசடிகள் நடந்து விடக் கூடாது எனக் கவனமாக இருக்கும். ஒரு சாவியை மட்டும் ஒப்படைக்கச் சொன்னால் மோசடியாளர்கள் கார் திருடப்படாமலேயே திருட்டுப் போனதாகக் கூறி க்ளைம் பெற முயற்சிப்பார்கள். இத தடுக்க அத்தனை ஒரிஜினல் சாவிகளையும் ஒப்படைக்க வேண்டும் என இன்சூரன்ஸ் நிறுவனம் கோருகிறது.
இப்பொழுது ஒரு சிக்கல் நமக்குத் தோன்றலாம். நாம் சாவியை மறந்து காரில் வைத்துவிட்டு வந்துவிட்டோம். அப்பொழுது கார் திருடு போனால் என்ன செய்வது எனத் தோன்றும், இப்படியான சூழ்நிலையில் இன்சூரன்ஸ் நிறுவனம் அதற்கான க்ளைம் வழங்காது. ஆம் காரின் சாவியை மறந்து காரிலேயே விட்டு செல்வது ஒரு பொறுப்பில்லாத தன்மை இந்த அசால்ட் நடவடிக்கையால் கார் திருடு போயிருந்தால் அதற்கு இன்சூரன்ஸ் நிறுவனங்கள் பொறுப்பாகாது.
நிராகரிக்க வாய்ப்பு!
இதனால் இரண்டு சாவியைக் கேட்பது மூலம் காரின் உரிமையாளர் பொறுப்புடன் இருந்ததை இன்சூரன்ஸ் நிறுவனங்கள் உறுதி செய்யும். இதன் மூலம் இன்சூரன்ஸ் தொகை முழுமையாகக் கிடைக்கும். அப்படி இரண்டு சாவியையும் கொடுக்க வில்லை என்றால் அந்த க்ளைமை இன்சூரன்ஸ் நிறுவனங்கள் நிராகரிக்கவும் வாய்ப்புகள் உள்ளன. பல சந்தர்ப்பங்களில் இப்படியாக க்ளைம்கள் ரிஜெக்ட் செய்யப்பட்டுள்ளன.
ஆனால் இன்சூரன்ஸ் நிறுவனங்களை ஒழுங்குபடுத்தும் அமைப்பான ஐஆர்டிஏஐ இப்படியாக கார் உரிமையாளர்கள் கட்டாயமாகத் தனது சாவியை ஒப்படைக்க வேண்டும் என இன்சூரன்ஸ் நிறுவனங்கள் கட்டாயப்படுத்தக்கூடாது எனக் கூறியுள்ளது. ஆனால் நடைமுறையில் இது கட்டாயமாகக் கேட்கப்படுகிறது என்பதே உண்மை!
ஆனால் ஒரு வழி இருக்குது!
ஆனால் இது இன்சூரன்ஸ் நிறுவனங்களைப் பொறுத்தது தான். ஒரு வேளை கார் திருடு போவதற்கு முன்பே உங்கள் காரின் ஒரு சாவி திருடு போயிருந்தால் அதைக் கூறி உங்கள் இன்சூரன்ஸ் நிறுவனத்தை நம்ப வைத்தால் உங்களுக்கு இன்சூரன்ஸ் க்ளைம் கிடைத்துவிடும். இது எல்லாம் நீங்கள் இன்சூரன்ஸ் நிறுவனத்திடம் வைத்திருக்கும் உறவு விஷயங்களைப் பொறுத்தே அமையும். இனி உங்கள் காரின் ஒரிஜினல் சாவி தொலையாமல் பார்த்துக்கொள்ளுங்கள்.
ஒருவேளை காருக்கு 2 சாவிகள் இருந்தால் இரண்டையும் பத்திரமாக வைத்திருங்கள். கவனக்குறைவால் சாவியை காரிலேயே வைத்து விட்டு வராதீர்கள். கார் திருட்டு நடந்த பல சம்பவங்களில் சாவியை மறந்து காரிலேயே விட்டு வந்தது தான் முக்கியமான காரணமாக இருக்கிறது. இப்படியாக உங்கள் கார் திருடு போயிருந்தால் உங்கள் காருக்கு இன்சூரன்ஸ் கிடைப்பதும் கஷ்டம் என்பதை மனதில் வைத்துக்கொள்ளுங்கள்.


Click it and Unblock the Notifications








