வாகன புகை பரிசோதனை சான்று மற்றும் அதற்கான அபராத விபரங்கள்!
டெல்லியில் வாகனப் புகையால் காற்று மாசுபாடு அபாயகரமான அளவை தாண்டியிருப்பதாக கூறி, 2,000சிசி.,க்கும் அதிக திறன் கொண்ட டீசல் கார்களுக்கு தடை விதிக்கப்பட்டது. டெல்லி மட்டுமின்றி, நாட்டின் அனைத்து பெரு நகரங்களிலும் வாகன பெருக்கத்தால் சுற்றுச்சூழல் அபாயகரமான அளவை தாண்டி கொண்டிருக்கிறது.
இந்த நிலையில், வாகனங்களுக்கு கடுமையான புகை பரிசோதனை மற்றும் அபராதங்களை விதிக்கும் புதிய விதிமுறைகள் அமல்படுத்தப்பட்டு வருகின்றன. இந்த நிலையில், எமிசன் சர்டிபிகேட் என்று குறிப்பிடப்படும் வாகனங்களுக்கான புகை பரிசோதனை விதிமுறைகள், அதன் சான்று குறித்த சில முக்கியத் தகவல்களை இந்த செய்தித் தொகுப்பில் காணலாம்.

பரிசோதனை
பெட்ரோல் நிரப்பும் நிலையங்கள், மெக்கானிக் ஷாப்புகளில் இந்த புகை பரிசோதனை மையங்கள் செயல்பட்டு வருகின்றன. மேலும், இந்த பரிசோனைக்கு ஒரு சில நிமிடங்களே ஆகும் என்பதால், தாமதப்படுத்தாமலும், மறவாமலும் எடுத்துவிடுங்கள்.

அபராதம்...
மோட்டார் வாகனச் சட்டம் 190[2] பிரிவின்படி, புகை பரிசோதனை சான்று இல்லாமல் வரும் வாகனங்களுக்கு ரூ.1,000 அபராதம் விதிக்கப்படும். இரண்டாவது முறையிலிருந்து தொடர்ந்து புகை பரிசோதனை சான்று இல்லாமல் வந்தால், ஒவ்வொரு முறைக்கும் ரூ.2,000 வரை அபராதம் விதிக்கப்படும்.

மிக முக்கியம்
ஆர்சி புக் அல்லது வாகன பதிவு சான்றுக்கான ஸ்மார்ட் கார்டு, இன்ஸ்யூரன்ஸ் போன்றவற்றிற்கு இணையானதும், அவசியமானதும் மாசுக் கட்டுப்பாட்டு சான்று. பிஎஸ்-4 மாசுக் கட்டுப்பாட்டு தரமுடைய புதிய வாகனங்களுக்கு முதல் ஓர் ஆண்டுக்கு தேவையில்லை. அதன்பிறகு, 6 மாதங்களுக்கு ஒருமுறை புதுப்பித்து புதிய சான்று பெறுவது அவசியம்.

எந்தெந்த வாகனங்களுக்கு...
பெட்ரோல், டீசல் வாகனங்களுக்கும் சிஎன்ஜி, எல்பிஜி போன்ற இயற்கை எரிவாயுவில் இயங்கும் வாகனங்களுக்கும் இந்த சான்று அவசியமானது. ஆர்சி புக், இன்ஸ்யூரன்ஸ் இருந்தாலும், இந்த சான்றும் இருக்க வேண்டியது அவசியம்.

மின்சார வாகனங்களுக்கு...
மின்சார வாகனங்களுக்கு இந்த சான்று தேவையில்லை.

பரிசோதனை கட்டணம்
இருசக்கரம் மற்றும் மூன்று சக்கர வாகனங்களுக்கு ரூ.50 வரையிலும், பெட்ரோல் கார்களுக்கு ரூ.80 வரையிலும், டீசல் கார்களுக்கு ரூ.100 வரையிலும் கட்டணமாக வசூலிக்கப்படுகிறது.

கவனிக்க..
ஒருவேளை புகை பரிசோதனை சான்று இருந்தாலும், புகை அதிகமாக வெளியேறினால், அந்த வாகனத்திற்கான புகை பரிசோதனை சான்று ரத்து செய்யப்பட்டு, மறு புகை பரிசோதனை செய்து 7 நாட்களுக்குள் சான்றை சமர்ப்பிக்க உத்தரவிடப்படும். அதில், மாசு அளவு அதிகமாக இருந்தால், மோட்டார் வாகனச் சட்டம் 190[2] பிரிவின்படி, உரிமையாளருக்கு தண்டனை வழங்கப்படும்.

புகார்
அதிக புகையை கக்கிக் கொண்டு சுற்றுச்சூழலுக்கு தீங்கு இழைக்கும் வகையில் இயக்கப்படும் வாகனங்களை சாலையில் பார்த்தால், பொதுமக்களும் அதுகுறித்து புகார் பதிவு செய்யலாம். இதற்கான விசேஷ தொலைபேசி எண்களில் சேவை வழங்கப்படுகிறது.

பராமரிப்பு
வாகனங்கள் அதிக புகையை வெளித்தள்ளுவதற்கு, போதிய பராமரிப்பு இல்லாததும் ஒரு காரணம். எனவே, உங்களது வாகனத்தை சரியான இடைவெளியில் சிறப்பாக பராமரித்து வருவது அவசியம்.


Click it and Unblock the Notifications








