நகல் ஓட்டுனர் உரிமத்தை பெறுவதற்கான வழிமுறைகள்!
அசல் ஓட்டுனர் உரிமம் கையில் வைத்திருப்பது கட்டாயமாக்கப்பட்டுள்ள நிலையில், உரிமத்தை தொலைத்தவர்கள் நகல் ஓட்டுனர் உரிமம் பெறுவதற்கான முறைகளை இங்கே பார்க்கலாம்.
நாளை [செப்.1] முதல் வாகனம் ஓட்டும்போது அசல் உரிமத்தை கையில் வைத்திருப்பது கட்டாயம் என்று தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. வாகனம் ஓட்டும்போது அசல் ஓட்டுனர் உரிமம் கையில் இல்லாவிட்டால், ரூ.500 அபராதம் அல்லது 3 மாத சிறை தண்டனை விதிக்கப்படும் என்றும் அறிவிக்கப்பட்டு இருக்கிறது.

இந்த அதிரடி உத்தரவுகளால் வாகன ஓட்டிகள் பெரும் திண்டாட்டத்திற்கு ஆளாகி இருக்கின்றனர். அசல் ஓட்டுனர் உரிமத்தை தொலைத்துவிட்டவர்கள் தற்போது நகல் ஓட்டுனர் உரிமத்தை வாங்குவதற்கு காவல் நிலையங்களையும், வட்டாரப் போக்குவரத்து அலுவலகங்களுக்கும் முற்றுகையிட துவங்கி இருக்கின்றனர்.

அசல் ஓட்டுனர் உரிமத்தை பெறுவதற்கு அலைய வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளதால், ஓட்டுனர் உரிமத்தை தொலைத்தவர்கள் தற்போது திண்டாடி போயுள்ளனர். தற்போது அரசின் அறிவிப்பால், ஒரே நேரத்தில் நூற்றுக்கணக்கானவர்கள் நகல் ஓட்டுனர் உரிமத்தை பெறுவதற்காக காவல் நிலையங்களையும், வட்டாரப் போக்குவரத்து அலுவலங்களையும் முற்றுகையிட துவங்கி இருக்கின்றனர்.
Recommended Video


அசல் ஓட்டுனர் உரிமத்தை தொலைத்தவர்கள் நகல் ஓட்டுனர் உரிமத்தை பெறுவதில் பல்வேறு நடைமுறைகள் பின்பற்றப்படுகின்றன. அசல் ஓட்டுனர் உரிமம் தொலைந்து போனது குறித்து காவல் நிலையத்தில் புகார் அளிக்க வேண்டும்.

உரிமம் வழங்கிய குறிப்பிட்ட வட்டார போக்குவரத்து அலுவலகத்திற்கு சென்று அசல் உரிமம் வழங்கியபோது சமர்ப்பிக்கப்பட்ட ஆவணங்களை சரிபார்த்துவிட்டு, அதுகுறித்து விபரங்கள் அடங்கிய குறிப்புடன் காவல் நிலையத்தில் கொடுக்க வேண்டும்.

அதன் பின்னர் காவல் நிலையத்தில் இருந்து புகார் தொடர்பாக காவல் ஆணையர் அலுவலகத்திற்கு அனுப்பி அங்கு காவல் துறை அரசிதழில் வெளியிடப்பட்ட பின்னரே, தொலைந்துபோன அசல் உரிமத்தை கண்டுபிடிக்க முடியவில்லை என்பதற்கான சான்றை காவல் நிலையத்தில் வழங்குவர்.

இதைத்தொடர்ந்து, வட்டார போக்குவரத்து அலுவலகத்திற்கு சென்று, நகல் உரிமம் பெறுவதற்கான விண்ணப்பத்துடன் காவல் நிலையத்தில் வழங்கிய சான்றை இணைத்து ரூ.315 கட்டணத்துடன் வட்டாரப் போக்குவரத்து அலுவலகத்தில் விண்ணப்பிக்க வேண்டும்.

இவ்வாறு நகல் உரிமத்தை பெறுவதற்கு 20 நாட்களுக்கு மேல் காத்திருக்க வேண்டி இருக்கும்.இது நேரிடியாக நகல் ஓட்டுனர் உரிமத்தை பெறுவதற்கான வழிமுறை. அலுவலகத்தில் விடுப்பு அதிகம் எடுக்க முடியாத நிலையில் உள்ளவர்களுக்கு தனியார் ஓட்டுனர் பயிற்சி பள்ளி மூலமாகவும் பெறும் வாய்ப்பு இருக்கிறது. இதற்கு செலவு அதிகமாகும்.

தற்போது இந்த வாய்ப்பை பயன்படுத்தி, தனியார் ஓட்டுனர் பயிற்சி மையங்கள் விரைவாக நகல் ஓட்டுனர் உரிமத்தை வாங்கி கொடுப்பதற்கு களத்தில் குதித்துள்ளனர். ஆனால், அதற்காக ரூ.3,000 முதல் ரூ.4500 வரை கட்டணம் வசூலிக்கப்படுகிறது.

காவல் நிலையத்தில் அளித்த புகார் மற்றும் மனு ரசீதுடன் தனியார் ஓட்டுனர் பயிற்சி பள்ளிகளில் தொடர்பு கொண்டால், 10 நாட்களில் நகல் ஓட்டுனர் உரிமம் பெற்றுத் தர முடியும் என்று உறுதி அளிக்கின்றனர். இதில், மற்றொரு நடைமுறை சிக்கலும் இருக்கிறது.

இப்போது சென்னையில் பணிபுரியும் ஒருவர் தனது சொந்த ஊரில் ஓட்டுனர் உரிமம் பெற்றிருந்தால், அங்குதான் சென்று நகல் ஓட்டுனர் உரிமத்திற்கு விண்ணப்பிக்க முடியும். அதேநேரத்தில், சென்னை காவல் நிலையத்தில் புகார் கொடுத்து, அதற்கான சான்றை கையில் எடுத்துச் செல்ல வேண்டும் என்பதையும் நினைவில் கொள்க.

பழைய ஓட்டுனர் உரிமம் தொலைந்து போய்விட்டால், சென்னையிலேயே புதிதாக ஓட்டுனர் உரிமம் பெற்றுத் தருவதாக தனியார் ஓட்டுனர் பயிற்சி பள்ளிகள் தெரிவிக்கின்றன. இருசக்கர வாகனம் மற்றும் இலகு ரக வாகனத்திற்கான ஓட்டுனர் உரிமம் புதிதாக பெறுவதற்கு ரூ.4,700 வரை கட்டணமாக பெறப்படுகிறது.

எது எப்படி இருந்தாலும், இப்போது உடனடியாக அசல் ஓட்டுனர் உரிமம் அல்லது நகல் ஓட்டுனர் உரிமம் பெறுவது கட்டாயமாக இருப்பதால், அதனை உடனடியாக பெறுவதற்கு வாகன ஓட்டிகள் அலைய வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது.


Click it and Unblock the Notifications








