டூ வீலர் ஓட்டும்போது விபத்து ஏற்படுவதற்கான பொதுவான 12 காரணங்கள்!!
டூ வீலரை கற்றக்கொண்டு நம்பிக்கையுடன் ஓட்ட ஆரம்பித்த உடன் 'எல்' போர்டை கழற்றிவிட்டீர்கள். இப்போது டூ வீலரின் லாவகம் தெரிந்துவிட்டபடியால் அதனை செம்மையாக செலுத்த துவங்கியிருப்பீர்கள்.
இனிதான் நீங்கள் கவனமாக இருக்க வேண்டும். டூ வீலரின் லாவகம் தெரிந்தவுடன் சற்று வேகமாக செல்லத் தூண்டும். அதைவிட, கவனக்குறைவுகளும், அலட்சியமும் சிலருக்கு ஏற்பட வாய்ப்புண்டு. அதன் விளைவு விபத்துத்தான். இந்த செய்தித் தொகுப்பில் டூ வீலர் விபத்துக்கள் ஏற்படுவதற்கான 11 காரணங்களை வழங்கியிருக்கிறோம். இந்த விஷயங்களை மனதில் வைத்து செயல்பட்டால் டூ வீலர் விபத்துக்களை தவிர்க்க இயலும். இதோ அந்த 11 காரணங்கள்....

01. குறுக்குசால் ஓட்டக்கூடாது...
போக்குவரத்து விதிகளை மதித்து ஓட்டக்கற்று கொள்வது அவசியம். போக்குவரத்து விதிகளை மீறுவதுதான் விபத்துக்களுக்கான அடிப்படை காரணம். படத்தில் இருப்பது போன்று, போக்குவரத்து விதிகளை மீறி டூ வீலரை திருப்புவது, திடீரென தடம் மாறுவது போன்ற அலட்சியங்களால் கை, கால்களை மட்டுமல்ல, வாழ்க்கையை இழக்கும் சூழலை ஏற்படுத்தும். சிக்னல்களில் சிவப்பு விளக்கு எரியும்போதே அவசரமாக பாய்ந்து செல்வதும் விபத்துக்கான காரணமாக அமைகிறது. இதுபோன்று, போக்குவரத்து விதிகளை மீறுவதே விபத்துக்களுக்கான அடிப்படை காரணமாக கூறலாம்.

02. ஹெட்போன் ஆபத்து
இப்போது பெரும்பாலான இருசக்கர வாகன ஓட்டிகள் காதில் ஹெட்போனை மாட்டிக் கொண்டு மொபைல்போனில் பாட்டுக் கேட்டபடியும், பேசியபடியும் செல்கின்றனர். இதன்மூலம், கவனக்குறைவு ஏற்பட்டு விபத்துக்கு வழிகோலுகிறது. டூ வீலர் ஓட்டும்போது பாட்டுக் கேட்பதையும், போனில் பேசிய படி செல்வதையும் அவசியம் தவிர்க்க வேண்டும்.

03. வளைவுகளில் வேகம்...
வளைவுகளில் அதிவேகமாக திரும்பும்போது பலருக்கு சிலிர்ப்பை தருகிறது. ஆனால், வளைவுகளில் வேகமாக வந்து திரும்பி, வண்டியின் சமநிலையை தவறவிட்டு பலர் கீழே விழந்து அடிபடுகின்றனர். சமயத்தில் சமநிலை தவறி, எதிரில் வரும் வாகனங்களுடன் மோதும் நிலையும் ஏற்படுகிறது. அடிக்கடி நிகழும் இந்த விபத்தை தவிர்ப்பதற்கு ஒரே வழி, வளைவுகளில் மெதுவாக திரும்புவதுதான்.

04. சாய்த்து திருப்புவது...
வண்டியை மிகவும் சாய்த்து திருப்பும்போது ஃபுட்ரெஸ்ட் தரையில் பட்டு கீழே விழும் ஆபத்தும் சில டூ வீலர்களில் உண்டு. தவிர, டயர்கள் தரைப்பிடிப்பை இழந்து கீழே விழுந்து விபத்திற்கு நாமே வழிகோலுவதாக அமையும். பைக் ரேஸ்களை பார்த்து பொங்கிய உத்வேகத்தில், அதை செய்ய முயற்சித்து கை,கால் அடிபட்டு வீட்டில் ரெஸ்ட் எடுக்கும் பலரை சந்திக்க நேரிடுகிறது.

05. மோசமான சாலைகள்...
மழை நேரம், கற்கள் நிரம்பிய சாலைகள், மணல் நிரம்பிய சாலைகள், சேறு அல்லது எண்ணெய் கொட்டிய சாலைகள், பனிக்கட்டிகள் படர்ந்த சாலைகளில் செல்லும்போது மிக மெதுவாக செல்ல வேண்டும். ஏனெனில், டயர்களின் தரைப்பிடிப்பு போதிய இல்லாமல் வண்டியின் சமநிலை இல்லாமல் விபத்தில் சிக்கும். ஒரே வழி குறைவான வேகம்.

06. அதிவேகம்...
கார்களை விட டூ வீலர்களை அதிவேகத்தில் செல்லும்போது த்ரில்லாக இருக்கும். அதிவேகத்தில் செல்லும்போது வண்டியின் சமநிலையை கட்டுப்படுத்துவது கடினம். வேகமாக செல்லும் பலருக்கு வண்டியை எவ்வாறு கட்டுப்படுத்துவது என்ற பதட்டத்தில் கீழே விழுந்து படுகாயமடைவது வாடிக்கையாகிவிட்டது. சாலையின் வேக வரம்பை மதித்து டூ வீலர் ஓட்டுவது அவசியம்.

07. நீர்ச்சத்து குறைபாடு
கோடைகாலம் துவங்கிவிட்ட நிலையில், பலருக்கு உடலிலிருந்து அதிக வியர்வை வெளியேறி நீர்ச்சத்து குறைபாடு ஏற்படும். இதன்காரணமாக தலைசுற்றல் மற்றும் உடல்நலக்குறைவு ஏற்பட்டு வண்டியை கவனமாக செலுத்த முடியாத நிலை ஏற்படும். எனவே, கோடை வெயிலில் டூ வீலரை கிளப்புவதற்கு முன் முடிந்தவரை தண்ணீர் குடித்து விட்டு செல்லுங்கள். கையிலும் இருப்பது அவசியம்.

08. சாலையில் சாகசம்
அடிக்கடி ஊடகங்களில் வெளியாகும் ஒரு வழக்கமான செய்தி. ஆனால், பல இளைஞர்கள் தங்களது குடும்ங்களை பரிதவிக்க விட்டு செல்வதற்கு காரணமாக அமைவது இது. ஆம்! பொது போக்குவரத்து சாலைகளில் வீலிங் செய்வது, ரேஸ் விடுவது போன்றவை அவர்களுக்கு மட்டுமல்ல, அந்த சாலையில் செல்லும் பலரின் வாழ்க்கையை ஒரே நொடியில் கேள்விக்குறியாக்கிவிடுகின்றனர்.

09. நாய்கள் ஜாக்கிரதை
நாய் மீது விட்டு விழுந்தவர் கதை ஏராளம். தட்டத்தில் நாய்கள் குறுக்கே ஓடி வந்து விபத்தை ஏற்படுத்தி சம்பவங்கள் அடிக்கடி நிகழ்கின்றன. எனவே, நாய்கள் எதிரில் தென்பட்டால் உடனடியாக வேகத்தை குறைத்து, அந்த இடத்தை கடந்துவிடுங்கள்.

10. ஓவர்லோடு...
சிலர் குழந்தைகளை முன்னால் அமர வைத்துக் கொண்டு செல்லும்போது போதிய பார்வை திறன் கிடைக்காமல் கீழே விழுந்து விடுகின்றனர். இதேபோன்று, இரண்டு பேர் செல்லக்கூடிய வண்டியில் நான்கைந்து பேர் ஏற்றிக்கொண்டு பறப்பதும் விபத்தை வெற்றிலை பாக்கு வைத்து அழைப்பதற்கான சமமானதே.

11. மது அருந்தாதீர்
மது போதையில் டூ வீலரை ஓட்டும்போது எமனின் பாசக்கயிறில் எப்போது வேண்டுமானாலும் விழச் செய்து விடும். எனவே, மது அருந்துவிட்டு டூ வீலர் ஓட்டுவதை கண்டிப்பாக தவிர்த்துவிடுங்கள்.

12. பராமரிப்பு
வண்டியின் கன்டிஷன் சரியில்லாமல் இருப்பதும் விபத்து ஏற்படுவதற்கான காரணங்கள். டயர்களில் காற்றழுத்தம், பிரேக்குகள், இன்டிகேட்டர் மற்றும் ஹெட்லைட் விளக்குகளை அவ்வப்போது சோதனை செய்து பழுது இருப்பின் சரிசெய்து விடுங்கள்.


Click it and Unblock the Notifications








