பனி மூட்டம் அதிகமிருக்கும்போது கார் ஓட்டும்போது உஷார்!
பனிக் காலம் துவங்கியிருக்கும் தற்சமயத்தில் அதிகாலை நேரங்களில் ஏற்படும் கடும் பனிமூட்டங்களால் போக்குவரத்து பாதிப்பு ஏற்படுவது வாடிக்கையான விஷயம். மேலும், இதுபோன்ற சமயங்களில் அதிக விபத்துக்கள் நடப்பது குறித்தும், வாகனங்கள் ஒன்றன்பின் ஒன்று மோதி விபத்துக்குள்ளாவதும் தொடர்கதையாகி உள்ளது.
சாதாரண சமயங்களில் கார் ஓட்டுவதை விட பனி மூட்டம் இருக்கும்போது கார் ஓட்டும்போது கூடுதல் கவனத்துடன் செல்வது அவசியம். பனிமூட்டத்தின்போது கார் ஓட்டும்போது மனதில் கொள்ள வேண்டிய விஷயங்களை இந்த செய்தியில் காணலாம்.

பனி மூட்டம் அதிகம் இருக்கும்போது பயணத்தை தவிர்க்கவும். பயணத்தின்போது அதிக பனிப்பொழிவு இருந்தால் பாதுகாப்பான இடத்தில் காரை ஓரங்கட்டி நிறுத்துங்கள். எக்காரணம் கொண்டும் சாலை ஓரத்தில் அல்லது அபாயகரமான இடத்தில் நிறுத்துவதை தவிர்க்கவும். பனி மூட்டம் குறைந்தவுடன் பயணத்தை தொடரலாம் அல்லது துவங்கலாம்.

அவசரமாக செல்ல வேண்டியிருந்தால் காரில் ஹெட் லைட்டில் லோ பீம் போட்டு செல்லவும். ஆனால், பனி மூட்டத்தின்போது சாலையில் உள்ள பள்ளம், மேடுகள், வேகத்தடைகள் தெளிவாக தெரியாது. எனவே, தரை தெளிவாக தெரிவதற்கு பனி விளக்குகளையும் பயன்படுத்தவும்.

ஹெட்லைட்டில் ஹை பீம் போட்டு செல்வது நமக்கே ஆபத்தாக முடியும். ஏனெனில், அடர்த்தியான பனிமூட்டத்தில் ஹெட்லைட் ஒளி எதிரொலிக்கும். எனவே, நமக்கே கண்கூச்சத்தை ஏற்படுத்தும் என்பதுடன், எதிரில் வரும் வாகன ஓட்டிகளுக்கும் இடைஞ்சலை தரும்.

பனி மூட்டம் இருக்கும்போது மிதமான வேகத்தை கடைபிடிப்பது அடுத்தபடி. அதாவது, சாதாரண வேகத்தை விட 50 சதவீதம் குறைவான வேகத்தில் பயணிப்பது அவசியம். அருகில் செல்லும் வாகனங்கள் கூட தெரியாமல் போகலாம். அப்போது பிரேக் பிடித்தாலும் காரை கட்டுப்படுத்துவது கடினம்.

பனி மூட்டம் இருக்கும்போது காரில் ஹீட்டரை பயன்படுத்துங்கள். குளிருக்கு இதமாக இருப்பதுடன், காரின் முன்பக்க விண்ட்ஷீல்டில் இருக்கும் வெண் புகையை நீக்குவதற்கும் பயன்படும். சாலையை தெளிவாக பார்க்க உதவும்.

சாலையில் செல்லும்போது தடத்தில் இருக்கும் கோடுகளை பின்பற்றி ஓட்டவும். சாலை ஓரத்தில் செல்வதை தவிர்க்கவும். சில வேளைகளில் சாலை ஓரத்தில் உள்ள தடம் திடீரென குறுகலான சாலையாக மாறும்போதும் அல்லது குறுகிய பாலத்தை கடக்கும்போதும் ஆபத்தில் முடியும்.

அதிக பனி மூட்டம் இருக்கும்போது இன்டிகேட்டர் விளக்குகளையும் ஒளிர விட்டுச் செல்லுங்கள். இது பிற வாகனங்களுக்கு தெளிவாக தெரிவதற்கான உபாயமாக இருக்கும். தேவையில்லாதபோது பனிவிளக்குகள், அனைத்து இன்டிகேட்டர்களும் ஒளிர விடுவதுடன், ஹெட்லைட்டுகளை ஆஃப் செய்துவிடுங்கள். குறைவான பனி மூட்டம் இருக்கும்போது அது பிற வாகன ஓட்டிகளின் கண்களுக்கு எரிச்சலை தரும்.

முன்னால் செல்லும் வாகனங்களுடன் போதிய இடைவெளி விட்டு செல்லவும். செல்போனில் பேசுவது, பிறருடன் பேச்சு கொடுத்துக் கொண்டே செல்வது போன்றவற்றையும் தவிர்த்து முழு கவனத்தையும் சாலையில் செலுத்தவும்.

மியூசிக் சிஸ்டத்தை ஆஃப் செய்து வைப்பதும் நல்லது. சாலையில் கூடுதல் கவனத்தை செலுத்த முடிவதோடு, பிற வாகனங்கள் கடந்து செல்ல வருவதை அறிந்து முன்னெச்சரிக்கையாகவும், பாதுகாப்பாகவும் செல்ல வழி வகுக்கும்.

பழக்கமில்லாத புதிய சாலைகளில் செல்லும்போதும் மிக கவனமாக செல்லவும். எங்கு வளைவு இருக்கிறது, எங்கு சாலை குறுகலாக இருக்கிறது என்று தெரியாமல் விபத்தில் சிக்கிவிடும் ஆபத்து உண்டு.

குடிபோதையில் வாகனம் ஓட்டுவதை தவிர்க்கவும். உடல் சோர்வு இருக்கும்போதும் பனி மூட்டத்தில் அறவே ஓட்டுவதை தவிர்க்கவும்.


Click it and Unblock the Notifications








