டயர் வெடித்ததால் விபரீதம்: 4 பேரின் உயிரை காவு வாங்கிய பரிதாபம்!!
கோடை காலத்தில் கார்களில் டயர் வெடித்து இதுபோன்ற கோர விபத்துக்கள் நடப்பது தொடர்கதையாகி இருக்கிறது.
ஹைதராபாத் அருகே புதிய ஃபோர்டு ஈக்கோஸ்போர்ட் எஸ்யூவி டயர் வெடித்ததால் கட்டுப்பாட்டை இழந்து எதிரே வந்த டிரக்கில் மோதி பயங்கர விபத்துக்குள்ளானது. இந்த கோர விபத்தில் ஒரே குடும்பத்தை சேர்ந்த 4 பேர் உயிரிழந்தனர்.

தெலங்கானா மாநிலம் நிஜாமாபாத் அருகே இந்த கோர விபத்து நடந்தது. ஹைதராபாத்தில் நடந்த திருமண நிகழ்ச்சியில் கலந்து கொண்ட குடும்பத்தினர் தங்களது புத்தம் புதிய ஃபோர்டு ஈக்கோஸ்போர்ட் காரில் வீடு திரும்பியுள்ளனர்.

நிஜாமாபாத் அருகே நெடுஞ்சாலையில் சென்று கொண்டிருந்த புதிய ஃபோர்டு ஈக்கோஸ்போர்ட் எஸ்யூவியின் முன்பக்க டயர் திடீரென வெடித்தது. இதில், கட்டுப்பாட்டை இழந்த அந்த எஸ்யூவி கார், அந்த நெடுஞ்சாலையின் அடுத்த பக்கம் பாய்ந்துள்ளது.

அப்போது எதிர்திசையில் வந்த டிரக் மீது பயங்கரமாக மோதியது. இதில், அந்த ஈக்கோஸ்போர்ட் எஸ்யூவி முற்றிலும் நசுங்கி உருக்குலைந்தது. இந்த கோர விபத்தில் காரில் பயணித்த கணவன், மனைவி மற்றும் அவர்களது இரண்டு குழந்தைகள் உள்பட ஒரே குடும்பத்தை சேர்ந்த 4 பேர் உயிரிழந்தனர்.

போலீசாரின் விசாரணையில் டயர் வெடித்ததால், கார் கட்டுப்பாட்டை இழந்து விபத்தில் சிக்கியது தெரிய வந்துள்ளது. கோடை காலத்தில் கார்களில் டயர் வெடித்து இதுபோன்ற கோர விபத்துக்கள் நடப்பது தொடர்கதையாகி இருக்கிறது.

அதிக வெப்பத்தால் டயர்கள் உள்ளே உள்ள காற்று விரிவடைந்து, காற்றழுத்தம் அதிகரித்து இதுபோன்ற டயர் வெடிப்புகளுக்கு காரணமாக அமைந்து உயிர்களை காவு வாங்கி வருகிறது. சில முன்னெச்சரிக்கைகளை கையாண்டு இதுபோன்ற விபத்துக்களை தவிர்க்க முயற்சிக்கலாம்.

கோடை காலத்தில் பயணிக்கும்போது அதிகாலை அல்லது மாலை வேளைகளில் பயணத்தை அமைத்துக் கொள்வது நல்லது. நீண்ட தூர பயணம் செய்பவர்கள் 2 மணி நேரத்திற்கு ஒருமுறை கண்டிப்பாக ஓய்வு எடுத்துச் செல்வது அவசியம். 15 நிமிடங்கள் இடைவேளை எடுக்கும்போது எஞ்சின் மற்றும் டயர்களில் ஏற்பட்டிருக்கும் வெப்பம் தணியும்.

கோடை காலத்தில் அதிவேகத்தில் ஓட்டுவதும் டயர் வெடிப்புக்கு காரணமாக அமைந்துள்ளது. அதிக வெப்பம் நிலவும்போது காரை 100 கிமீ வேகத்திற்கு மிகாமல் ஓட்டுவதும் அவசியம். அதிவேகத்தில் செல்லும்போது டயர்களில் உராய்வு அதிகரித்து வெப்பம் வெகுவாக அதிகரிக்கும்.

கோடை காலத்தில் டயர்களில் காற்றழுத்ததை அடிக்கடி பரிசோதிப்பது அவசியம். குறிப்பாக, நீண்ட தூரம் பயணம் செய்வோர் டயர்களில் சரியான காற்றழுத்ததில் இயக்குவது அவசியம்.

விபத்தில் சிக்கிய கார் புத்தம் புதிய மாடல். எனினும், கார் டயர்களில் ஏதேனும் பிரச்னை அல்லது சேதமடைந்திருந்தால் உடனடியாக அதனை மாற்றி விடுங்கள். அதிக தேய்மானம் அடைந்த டயர்களை உடனடியாக மாற்றிவிடுங்கள்

காரில் அதிக பயணிகள் அல்லது பாரம் ஏற்றுவதை தவிர்க்கவும். அதிக பாரம் காரணமாக உராய்வு அதிகரிப்பதுடன், காற்றழத்தமும் மாறுபாடு அதிகம் இருக்கும். இதுவும் டயர் வெடிப்புக்கு காரணமாகிவிடும்.

நைட்ரஜன் வாயுவை டயர்களில் நிரப்புவதன் மூலமாக டயர்களில் இருக்கும் காற்று அதிக வெப்பமாவது தவிர்க்கப்படும். இதனால், டயர் வெடிப்பு பிரச்னைக்கு ஓரளவு தீர்வாக அமையும்.

கார் ஓட்டும்போது டயரிலிருந்து ஏதேனும் சப்தம் அல்லது ஸடீயரிங் வீலில் மாற்றங்கள் தெரிந்தாலும் உடனடியாக காரை ஓரம் கட்டி பரிசோதித்த பின்னரே தொடர்ந்து பயணிக்கவும். அலட்சியப்படுத்த வேண்டாம்.
Source: Team BHP


Click it and Unblock the Notifications








