எவ்வளவு பாதுகாப்பான காராக இருந்தாலும், ஓட்டுறது விதத்தில்தான் சூட்சுமம் இருக்கு!
புதிய கார் வாங்கும் இந்தியர்கள் பலரும் காரின் பாதுகாப்பு அம்சங்களுக்கும், அதன் கட்டுமானத் தரத்திற்கும் அதிக முக்கியத்துவம் கொடுக்கத் துவங்கி இருப்பது வரவேற்க வேண்டிய விஷயம். காரின் பாதுகாப்பு தொழில்நுட்ப வசதிகள், மோதல் சோதனைகளில் பெறும் தர மதிப்பீடு உள்ளிட்டவற்றை பார்த்து பார்த்து புதிய காரை தேர்வு செய்ய முக்கியத்துவம் கொடுக்கின்றனர்.

ஆனால், இங்கே ஒரு விஷயத்தை பலரும் மறந்துவிடுவதால், பெரும் இழப்புகளை சந்திக்க வேண்டி இருக்கிறது. ஆம். எவ்வளவு பாதுகாப்பான காரை பார்த்து பார்த்து வாங்கினாலும், அதனை ஓட்டும் விதத்தில்தான் பாதுகாப்பு இருக்கிறது.

குறிப்பாக, வேகத்தை கடைபிடிப்பதில்தான், கார் ஓட்டும் கலையின் சூட்சுமம் அடங்கி இருக்கிறது. எந்த இடத்தில் அல்லது சாலை நிலவரத்திற்கு தக்கவாறு வேகத்தை கடைபிடிப்பதுதான் கார் ஓட்டுவதற்கான அடிப்படை சூட்சுமம். அடுத்து கார் ஓட்டும்போது முழு கவனத்தையும் சாலையில் வைப்பது அவசியம்.

ஆனால், பலரும் தங்களிடம் அதி உயர் பாதுகாப்பு தொழில்நுட்பங்கள் கொண்ட கார் இருப்பதாக நினைத்துக் கொண்டு அதி வேகத்தில் செல்வதால் பல்வேறு மோசமான விளைவுகளை சந்திக்கின்றனர்.

சீட் பெல்ட் போடுவது, காரின் பாதுகாப்பு தொழில்நுட்பங்கள், கட்டுமானத் தரம் அனைத்தும் இரண்டாம் நிலை பாதுகாப்பு அம்சங்கள் நிச்சயம் கைகொடுக்கும். ஆனால், ஓட்டுனர் சரியான வேகத்தில் செலுத்தும்போதுதான் முழுமையான பலனை தரும்.

எவ்வளவு பாதுகாப்பு அம்சங்கள் கொண்ட காராக இருந்தாலும் 100 கிமீ வேகத்தை தாண்டி ஓட்டும்போது அதன் பாதுகாப்பு அம்சங்கள் ஓரளவுக்கே கைகொடுக்கும். ஆனால், நிச்சயம் அது விபத்தை தவிர்ப்பதற்கான காரணியாகவோ அல்லது இழப்புகளை குறிப்பிடத்தக்க அளவில் தவிர்ப்பதற்கோ உதவும் என்று நம்ப இயலாது.

சில கார்களில் பாதுகாப்பு அம்சங்கள் குறைவாகவோ இருந்தாலும், நிதான வேகத்தில் செல்வதும், சாலையில் போக்குவரத்து மற்றும் ஆபத்துகளை உணர்ந்து கொண்டு ஓட்டுவதால் விபத்துக்களை தவிர்க்கவோ அல்லது இழப்புகளை குறைத்துக் கொள்வதற்கோ வழி வகுக்கிறது.

எதிரில் வரும் வாகன ஓட்டிகள் செய்யும் தவறுகள் மற்றும் இதர காரணிகளால் விபத்துக்கள் ஏற்படுவதை தவிர்க்க இயலாது என்பது தெரிந்ததே. ஆனால், நாம் செய்யும் தவறுகளால் ஏற்படும் விபத்துக்களை குறைத்துக் கொள்வது அவசியம்.வேகத்தில் விவேகத்தை கடைபிடித்தால் அது நிச்சயம் ஒவ்வொரு பயணத்தையும் பாதுகாப்பானதாக மாற்றும்.

நீண்ட தூர பயணங்களின்போதுகூட அதிகபட்சமாக 30 நிமிடங்கள் முதல் ஒரு மணி நேரம் மட்டுமே உங்களால் சேமிக்க முடியும். ஆனால், நீங்கள் வேகமாக செல்லும்போது ஏற்படும் விபத்து வாழ்க்கையையே புரட்டிப்போட்டு விடும். உங்களது பாதுகாப்பு மட்டுமின்றி, உங்களை நம்பி உடன் பயணிப்போரின் பாதுகாப்பையும் மனதில் வைத்து வேகத்தில் நிதானத்தை கடைபிடிப்பது மட்டுமே ஒரே தீர்வாக அமையும்.

குறிப்பாக, நெடுஞ்சாலைகளில் செல்லும்போது 80 கிமீ வேகத்தில் செல்வது ஓரளவு பாதுகாப்பாக அமையும். அதனை தாண்டி செல்லும்போது மைலேஜ் வெகுவாக குறைவதுடன், எஞ்சின் மற்றும் காரின் உதிரிபாகங்களின் ஆயுளும் சீக்கிரமாகவே குறைந்து போகும்.


Click it and Unblock the Notifications








