மாஞ்சா நூல் வடிவில் வரும் எமன்... எமது வாசகரின் திகில் அனுபவம்!
கோடை காலம் துவங்கியுள்ளதால், வட சென்னை நகரின் பல இடங்களில் பட்டம் விடும் விளையாட்டுகள் களை கட்டத் துவங்கியுள்ளன. மாஞ்சா நூல் பட்டத்திற்கு போலீசார் தடைவிதித்தும், அதனை கட்டுப்படுத்த முடியாத அவல நிலை நிலவுகிறது. அதற்கு சான்றாகத்தான் இந்த செய்தி வெளியிடப்படுகிறது.
எமது வாசகரின் திகில் அனுபவம் இங்கே பிறரை உஷார் படுத்தும் விதத்தில் வெளியிடப்படுகிறது. சென்னையை சேர்ந்த எமது வாசகர் தீரஜ் பாட மேம்பாலம் அருகே நேற்று பிற்பகல் 3.30 மணிக்கு பைக்கில் சென்றுள்ளார். அப்போது, திடீரென கழுத்தில் ஏதோ பட்டதுபோன்று இருந்ததால், உடனடியாக பைக்கின் வேகத்தை குறைத்து நிறுத்தியுள்ளார்.
அதற்குள் கழுத்தில் சுற்றியிருந்த மாஞ்சா நூல் கழுத்தில் லேசாக இறுகி காயத்தை ஏற்படுத்திவிட்டது. எப்போதும் இல்லாமல் நேற்று அவர் கைக்குட்டையால் கழுத்தையும், முகத்தையும் மூடியிருந்துள்ளார். மேலும், மிதமான வேகத்தில் பைக்கில் சென்றிருக்கிறார். அப்போது எங்கிருந்தோ பறந்து வந்த மாஞ்சா நூல் கழுத்தில் இறுக்கி லேசாக காயத்தை ஏற்படுத்தியுள்ளது. அருகிலிருந்த மருத்துவமனையில் முதலுதவி சிகிச்சை எடுத்துக் கொண்டு இதுகுறித்து ராஜமங்கலம் போலீஸ் நிலையத்தில் புகார் கொடுக்க சென்றுள்ளார். ஆனால், அந்த பகுதி தங்கள் சரகத்திற்குற்பட்டது இல்லை போலீசார் கூறியுள்ளனர்.
இருந்தாலும், மாஞ்சா நூல் பட்டம் விடுவதை தடுக்க போலீசாரிடம் தீரஜ் வலியுறுத்தியுள்ளார். ஆனால், எவ்வளவு முயன்றாலும் இதனை கட்டுப்படுத்த முடியவில்லை என்று போலீசார் தெரிவித்தனராம். மேலும், கடந்த வாரம் மாஞ்சா நூல் கழுத்தில் அறுத்து ஒருவர் பலியாகிவிட்டதாகவும் அவர்கள் கூறியிருக்கின்றனர். இந்த தகவல்களை வேதனையுடன் எம்மிடம் தீரஜ் பகிர்ந்து கொண்டார்.

குலத்தொழில்
இதுபோன்ற சம்பவங்களால் சென்னையில் மோட்டார்சைக்கிளில் செல்பவர்களின் உயிருக்கு பெரும் அச்சுறுத்தல் நிலவுகிறது. குறிப்பாக, வடசென்னை பகுதியில் பட்டம் விடும் விளையாட்டு வழக்கம்போல் அதிகரித்துள்ளது. சிந்தாதிரி பேட்டை, சவுகார்பேட்டை, வண்ணாரப் பேட்டை ஆகிய பகுதியில் பட்டம் விடுவதற்கு பயன்படும் மாஞ்சா நூல் தயாரிப்பதையே 50க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் குடிசைத் தொழிலாக கொண்டுள்ளனர்.

விஷக்கயிறு...
போட்டிகளில் பட்டம் விடும் கயிறை அறுபடாமல் இருப்பதற்காக நூலை உறுதியாக்க வேண்டுமென்பதற்காக பல நச்சுப் பொருட்களை கொண்டு பட்டம் விடும் மாஞ்சா நூலை தயாரிக்கப்படுகிறது. அரோட்டா மாவை நன்றாக காய்ச்சி அதில் ட்யூப்லைட், கண்ணாடிகளை பொடியாக்கி அதில் கலக்குகின்றனர். இந்த கலவையுடன் வஜ்ரம், மயில்துத்தம், சப்பாத்திக் கள்ளி ஆகியவற்றின் சாறுகளை கலக்கி நூலின் மது தடவி மாஞ்சா நூல் தயாரிக்கின்றனர். இந்த நச்சுக் கலவையால்தான் மாஞ்சா கயிறு அறுத்தவரின் உடலில் விஷம் பரவி உயிரை காவு வாங்குகிறது.

போலீஸ் தடை
சென்னையில் இந்த விளையாட்டுக்கு தடை விதித்திருந்தாலும் சென்னையில் ஆங்காங்கே தற்போது பட்டம் விடும் போட்டிகள் நடந்து வருகின்றன. மாஞ்சா நூல் விற்பவருக்கும், பட்டம் விடுபவருக்கும் ரூ.500 அபராதம் அல்லது 6 மாத சிறை என்று தண்டனைகள் இருந்தாலும் இந்த விஷயத்தில் போலீசார் மேலும் கடுமையான விதிமுறைகளை நடைமுறைப்படுத்த வேண்டும் என்று சென்னைவாசிகள் கருத்து தெரிவிக்கின்றனர்.

உஷார்
தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கை மேற்கொண்டால் தேவையின்றி ஏற்படும் உயிரிழப்புகள் தவிர்க்கலாம். எது எப்படி இருந்தாலும் மோட்டார்சைக்கிளில் செல்லும்போது மிதமான வேகத்தில் கவனமாக செல்ல வேண்டிய தருணம் இது.


Click it and Unblock the Notifications








