பூந்தமல்லியிலிருந்து பெங்களூர் வரை... அடித்த மழையில் அசராத டிரைவிங்!!
கடந்த வாரம் சென்னை வந்துவிட்டு, காரில் அவசரமாக பெங்களூர் திரும்ப வேண்டிய நிலை. ஆதம்பாக்கத்திலிருந்து பூந்தமல்லி வரை எந்த பிரச்னையும் இல்லை. பூந்தமல்லியை தொட்டவுடனே லேசான மழை துவங்கியது. சில கிலோமீட்டர்கள் தாண்டுவதற்குள் கனமழை. சாலை தெரியாத அளவுக்கு அடித்து பெய்தது.
காஞ்சிபுரத்தை நெருங்குவதற்குள் இரண்டு சாலை விபத்துக்கள். முதலாவது விபத்தால் பெரும் போக்குவரத்து நெரிசல். அதனை கடந்து சில கிலோமீட்டர்கள் தாண்டுவதற்குள் அடுத்த விபத்தை காண நேரிட்டது. கார்களை ஏற்றிச் செல்லும் டிரக்கும், காரும் மோதி விபத்துக்குள்ளாகியிருந்தன.
மோதிய வேகத்தில் கார் சாலையின் எதிர்திசையில் வந்து தலைக்குப்புற கவிழ்ந்து கிடந்தது. அந்த டிரக்கும், சாலை ஓரத்தில் கவிழ்ந்து கிடந்தது. ஒரே திசையில் பயணித்த அந்த இரு வாகனங்களும் எப்படி விபத்தில் சிக்கின என்பதை யூகித்ததில் அதி வேகமும், மழையும் காரணமாக இருந்தது.
இது ஒரு சாலையில் அரை மணி நேர இடைவேளையில் பார்த்த விபத்துக்கள். இதுபோன்று, மழை நேரத்தில் தமிழகத்தில் மட்டும் நடைபெறும் விபத்துக்களை கணக்கிட்டால், கொஞ்சம் நெருடலாகவே உள்ளது. இந்தநிலையில், பருவ மழை தீவிரமடைந்திருக்கும் இவ்வேளையில், சில விஷயங்களை மனதில் நிறுத்தினால் கண்டிப்பாக இதுபோன்ற விபத்துக்களை தவிர்க்க முடியும். அதற்கான சில வழிமுறைகளை ஸ்லைடரில் காணலாம்.

முதல் காரியம்
கனமழை பெய்யும்போது, அனைத்து இண்டிகேட்டர் விளக்குகளையும் ஒளிரவிடுங்கள். காரின் டெயில் லைட்டுகளை ஆன் செய்துவிட்டு, லோ பீம் அல்லது பனி விளக்குகளை போட்டு ஓட்டிச் செல்லவும். ஹை பீம் போட்டால், மழைத் திவளைகளில் ஹெட் லைட் ஒளிபட்டு எதிரில் வரும் வாகன ஓட்டிகளுக்கு கண் கூச்சத்தை தரும். மிக மிக கனமழை என்றால், காரை ஓரம் கட்டிவிடுவது நல்லது.
Picture credit: SEATCordoba via Wiki Commons

அபாயம்
சாலையின் ஓரத்தில் செல்வதை முடிந்தவரை தவிர்த்துவிடுங்கள். எதிரில் வாகனம் வந்தால், வேகத்தை முழுவதுமாக குறைத்து பாதுகாப்பாக அந்த வாகனத்தை கடக்க முயற்சிக்கவும். வேகமாக செல்ல முனையும் பின்னால் வரும் வாகனங்களுக்கும் வழிவிட்டு விடுங்கள். நெடுஞ்சாலைகளில் செல்லும்போது, மூன்று வினாடிகள் இடைவெளியில் முன்னால் செல்லும் வாகனத்தை பின்தொடர வேண்டியது அவசியம். அதுவே, மழை நேரத்தில் 6 வினாடிகள் இடைவெளியில் செல்வது அவசியம்.
Picture credit: Ohhector via Flickr

தவிருங்கள்
நெடுஞ்சாலை என்றில்லை, எந்தவொரு சாலையில் செல்லும்போதும் மழை நேரத்தில் மிதமான வேகத்தை கடைபிடிப்பது நன்று. அத்துடன், முன்னால் செல்லும் வாகனத்துடன் மிக நெருக்கமாக செல்வதை அவசியம் தவிர்க்கவும். அதேபோன்று, பின்னால் வரும் வாகன ஓட்டிகளும் உங்கள் காரின் வேகத்தை கணிப்பது கடினம். எனவே, திடீரென பிரேக் பிடிப்பதை தவிர்க்கவும்.

கவனம்...
நெடுஞ்சாலைகளில் வேகமாக உங்கள் காரை ஓவர்டேக் செய்யும் கார் அல்லது வாகனங்களின் டயர்களிலிருந்து சாலையில் படர்ந்திருக்கும் தண்ணீரால் ஸ்பிரே செய்தது போன்று தண்ணீர் துளிகள் பனிமூட்டம் போல காற்றில் பரவும். இதனால், உங்களால் சாலையை தெளிவாக பார்க்க இயலாமல் போகும். அந்த சமயங்களில் காரின் வேகத்தை முழுவதுமாக குறைத்து, அந்த வாகனம் குறிப்பிட்ட தூரம் சென்றவுடன் மீண்டும் நிதான வேகத்தை கடைபிடியுங்கள். அதேபோன்று, பாதுகாப்பான இடத்தில் மட்டுமே முந்துவதற்கும் முயற்சிக்கவும்.
Picture credit: Pleeker via Flickr

தடம் முக்கியம்
நெடுஞ்சாலைகளில் செல்லும்போது மூன்று தடம் கொண்ட நெடுஞ்சாலைகளில் நடுவில் உள்ள தடத்தை பயன்படுத்துங்கள். வலது தடத்தில் சில இடங்களில் தண்ணீர் தேங்கியிருக்கும். தேங்கியிருக்கும் தண்ணீரை கடக்கும்போது, காரின் வேகத்தில் திடீர் தடை ஏற்படும். இதனால், பின்னால் வரும் வாகனங்கள் உங்களது வாகனத்தின் மீது மோதிவிடும் ஆபத்து ஏற்படும். அதேபோன்று, இடது ஓர தடத்தை முழுவதுமாக நம்பி செல்ல முடியாது. குறுகலான பாலங்கள் மற்றும் திடீரென அந்த சாலை இரு வழித்தடமாக மாறும்போது மழை நேரத்தில் கணித்து காரை திருப்புவதற்குள் விபத்து ஏற்பட வாய்ப்புண்டு.
Picture credit: Cobalt123 via Flickr

வளைவுகளில்....
சாதாரண சாலைகளாக இருந்தாலும், நெடுஞ்சாலைகளாக இருந்தாலும் மழை நேரங்களில் வளைவுகளில் செல்லும்போது அதிக கவனம் தேவையாக இருக்கும். எதிரில் வரும் வாகனம் அதிக வேகத்தில் வந்து கட்டுப்பாட்டை இழப்பதற்கும் வாய்ப்புள்ளது. அத்துடன், வளைவுகளில் வழுக்கிச் சென்று கட்டுப்பாட்டை இழக்கவும், பிரேக் பிடித்தால் கூட அது பலனளிக்காமல் போவதற்கும் வாய்ப்புகள் அதிகம். எனவே, வளைவுகளில் கவனம். மேலும், முன்கூட்டியே பிரேக்கை பிடித்து காரை நிதான வேகத்தில் செலுத்தவும்.
Picture credit: Shereen84 via Flickr

எண்ணெய் படலம்
வாகனங்களிலிருந்து கசிந்து சாலையில் கிடக்கும் பெட்ரோல், டீசல் அல்லது ஆயில் போன்றவை தண்ணீர் தெறிக்கும்போது அதனுடன் சேர்ந்து வந்து விண்ட்ஷீல்டில் படர்ந்துவிடும். இதனால், சாலையை தெளிவாக பார்க்க இயலாது. இதனை உடனடியாகவும் துடைக்க இயலாது என்பதால் கவனமாக செல்லுங்கள்.

மாற்று வழி
தண்ணீர் தேங்கிய சாலைகளை தவிர்ப்பது நலம். சில கிமீ தூரம் சுற்றிவந்தாலும் பரவாயில்லை. மாற்றுவழியில் செல்வதே சாலச்சிறந்தது. மேலும்,நன்கு அறிந்த சாலைகளின் வழியாக செல்லுங்கள். தண்ணீர் தேங்கிய சாலைகள் வழியாக செல்லும்போது ஆஃப் கிளட்ச்சில் வைத்து ஆக்சிலேட்டரை மெதுவாக கொடுத்து செல்லுங்கள். இது எக்சாஸ்ட் குழாயில் தண்ணீர் புகுந்துவிடுவதை தவிர்க்கும்.

கவனக்குறைவு
மொபைல்போனை சைலென்ட் மோடில் வைத்துவிடுவதால், உங்களுக்கு ஏற்படும் திடீர் கவனக்குறைவுகளை தவிர்க்க முடியும். காரின் வைப்பரை தொடர்ந்து இயக்குவதும், எஞ்சினை சற்று ஆசுவாசப்படுத்தவும் இரண்டு மணி நேரத்திற்கு ஒருமுறை காரை நிறுத்திவிடுங்கள். அப்போது, மொபைல்போனில் வந்திருக்கும் போன் அழைப்புகளை எடுத்து பேசலாம். உங்களுக்கும் களைப்பு நீங்குவதற்கான வாய்ப்பாக அமையும்.
Picture credit: Juliarowe via Flickr

ஏசி செயல்பாடு முக்கியம்
கோடை காலம் மட்டுமின்றி, மழைநேரங்களில் ஏசி.,யின் பங்கு மிக முக்கியமானதாக இருக்கும். வெளியில் இருக்கும் வெப்பநிலைக்கும், கார் கேபினுக்குள் இருக்கும் வெப்ப நிலைக்கும் ஏற்படும் வித்தியாசத்தால், காரின் விண்ட்ஷீல்டில் மிஸ்ட் எனப்படும் வெண்புகை படரும். இதனை தவிர்ப்பதற்கு, ஏசியை டீஃப்ராஸ்ட் மோடில் வைக்கவும். ஏசி வசதி இல்லாத கார்களில், உட்புறத்தில் ஷாம்பூவை பஞ்சில் வைத்து விண்ட்ஷீல்டின் உட்புறத்தில் தடவிவிட்டால், மிஸ்ட் ஏற்படுவதை தவிர்க்க முடியும். இல்லையெனில், உருளைக் கிழங்கை பாதியாக அறுத்து, கண்ணாடியின் உட்புறத்தில் தேய்த்துவிடுங்கள்.

இது வேண்டாமே...
கார் வைத்திருப்பவர்களில் சிலர் இல்லை, பலர் சாலையில் செல்லும் பாதசாரிகள், இருசக்கர வாகன ஓட்டிகளை பற்றி கவலை கொள்ளாமல், தண்ணீர் தேங்கிய சாலைகளில் வேகமாக ஓட்டுவதை பழக்கமா வைத்திருக்கின்றனர். அதனை முற்றிலுமாக தவிர்ப்பது நலம்.
Picture credit: Andym8y via Flickr

முக்கியம்
இங்கே குறிப்பிட்டிருக்கும் பெரும்பாலான விஷயங்கள் உங்களுக்கு தெரிந்திருக்கும். ஆனால், தெரிந்தும் சிலருக்கு கார் ஓட்டும்போது வழக்கத்திற்கும், நினைவிலும் வராது. ஆனால், இதுபோன்று தெரிந்த விஷயத்தை மற்றொரு முறை படிக்கும்போது, உங்கள் நினைவில் நிற்கும் என்பதற்காகவே வழங்கியிருக்கிறேன். விபத்துக்களை தவிர்க்க வேண்டும் என்பதற்காகவே இந்த விஷயங்களை மீண்டும் உங்களுக்கு வழங்கியிருக்கிறோம்.
Picture credit: Rejik via Flickr

இதுவும் அவசியம்
மழையும், காற்றும் சேரும்போது காரை ஓரம் கட்டிவிடுவது அவசியம். மரங்கள், கம்பங்கள் மற்றும் போஸ்டர் தட்டிகள் விழுவதற்கான ஆபத்துகள் அதிகம். எனவே, காரில் பிஸ்கட் பாக்கெட்டுகள் மற்றும் போதுமான தண்ணீர் பாட்டில்களுடன் பயணிப்பது அவசியம். இதுபோன்ற சமயங்களில் எப்போது வேண்டுமானாலும், பயணம் தடைபடலாம்.

நீங்களும் சொல்லலாம்
வாசகர்களும் தங்களது அனுபவத்திலும், அல்லது பிறர் கூற கேட்ட வழிகாட்டு முறைகளும் இங்கே கருத்துப் பெட்டியில் பகிர்ந்து கொள்ளலாம். இது பிறருக்கு பயனுள்ளதாக அமையும்.
Picture credit: Nadircruise via Flickr

01. புதிய காரை டெலிவிரி எடுக்கும்போது...
02. டீசல் பற்றிய சிறப்புத் தகவல்கள்...
03. டூ வீலரில் விபத்து ஏற்படுவதற்கான காரணிகள்

டிப்ஸ் செய்திகள் பக்கம்...


Click it and Unblock the Notifications








