இந்திய நெடுஞ்சாலைகளில் உயிர் தப்புவதற்கான 'கோல்டன் ரூல்ஸ்'!!
நெடுஞ்சாலைகளில் பாதுகாப்பான பயணத்திற்கு சில சாலை விதிகளை மனதில் வைப்பது அவசியம். அந்த தங்க விதிகளை இந்த செய்தியில் காணலாம்.
உலகிலேயே சாலை விபத்துக்களால் ஏற்படும் உயிரிழப்புகள் எண்ணிக்கையில் நம் நாடு முதலிடத்தில் இருக்கிறது. நம் நாட்டு நெடுஞ்சாலைகளில் கார் ஓட்டும்போது சில விஷயங்களை மனதில் வைத்தால், பாதுகாப்பான பயணத்தை உறுதி செய்து கொள்ளலாம்.

நெடுஞ்சாலை பயணம் செல்லும்போது உங்களது கார் முழுமையான பரிசோதனைக்கு உட்படுத்துவது அவசியம். பிரேக் கண்டிஷன் மற்றும் டயர்களில் காற்றழுத்தம் போன்ற அடிப்படை விஷயங்களை பரிசோதிப்பது அவசியம். போதிய பராமரிப்பு இல்லாத கார்கள் மற்றும் தேய்மானம் அடைந்த டயர்களுடன் நெடுஞ்சாலையில் பயணிப்பது உயிருக்கு உலை வைக்கும் விஷயமாக இருக்கும்.

நெடுஞ்சாலையில் செல்லும்போது முன்னால் செல்லும் வாகனத்துடன் போதிய இடைவெளி விட்டு செல்வது அவசியம். முன்னால் செல்லும் வாகனத்துடன் 2 வினாடி இடைவெளியில் செல்ல வேண்டும் என்று ஏற்கனவே நாம் வழிகாட்டு தொகுப்பு ஒன்றை வழங்கி இருக்கிறோம். ஆனால், மிகவும் பாதுகாப்பான பயணத்திற்கு 4 வினாடிகள் இடைவெளியில் பின்தொடர்ந்து பயணிப்பது பலன் தரும். முன்னால் செல்லும் வாகனம் திடீரென பிரேக் பிடித்தாலும் அல்லது பிற பிரச்னைகளின்போது பெரிய விபத்துக்களை இந்த இடைவெளி தவிர்க்க உதவும்.

நெடுஞ்சாலையில் செல்லும்போது பின்னால் வரும் வாகனங்க்ளை துல்லியமாக பார்ப்பதற்கு ஏதுவாக ரியர் வியூ மிரர்களை சரிசெய்து கொள்வது அவசியம். பழுது உள்ள ரியர் வியூ மிரர்களை சரிசெய்துவிடுங்கள். அத்துடன், உட்புறத்தில் கொடுக்கப்படும் ரியர் வியூ மிரரில் பின்னால் வரும் வாகனங்களை தெளிவாக பார்க்க ஏதுவாக பின்புற விண்ட்ஷீல்டு கண்ணாடியை மறைக்கும் விதத்தில் பொருட்களை வைக்க வேண்டாம்.

முன்னால் செல்லும் வாகனங்களை வளைவுகளில் முந்துவதை தவிர்க்கவும். அதேபோன்று, கனரக வாகனங்களை பின்தொடர்ந்து முந்தும்போது மிக கவனமாக இருக்கவும். எதிரில் வரும் வாகனங்கள் தெரியாமல் விபத்து ஏற்படுவதற்கு வாய்ப்பு உண்டு. அதேபோன்று, காரின் வேகம், செயல்திறனை மனதில் வைத்து ஓவர்டேக் செய்வதற்கு பழகிக் கொள்ளுங்கள். புதிதாக கார் ஓட்டுபவர்கள் விவேகத்துடன் செயல்படுவது நல்லது.

ஓவர்டேக் செய்யும்போது முன்னால் செல்லும் வாகனம் மற்றும் பின்னால் வரும் வாகனங்களுக்கு இண்டிகேட்டர் மூலமாக சமிக்ஞை தருவது அவசியம். அதுபோன்றே, எதிரில் வரும் வாகனத்திற்கும் ஹெட்லைட்டை ஒளிர விட்டு எச்சரிக்கை செய்வது அவசியம்.

சென்டர் மீடியன் இல்லாத நெடுஞ்சாலைகளில் செல்லும்போது மஞ்சள் கோட்டை தாண்டி சென்று ஓவர்டேக் செய்வது ஆபத்தானது. இடைவெளி விட்டு கோடு போடப்பட்ட சாலைகளில், எதிரில் வாகனம் வரவில்லை என்பதை உறுதி செய்து கொண்டு ஓவர்டேக் செய்யலாம்.

நெடுஞ்சாலை அல்லது அதிவிரைவு சாலை உள்ளிட்ட பாதுகாப்பு அம்சங்கள் நிறைந்த சாலைகளில் செல்லும்போது கூட சீரான வேகத்தை கடைபிடிக்க பழகிக் கொள்ளுங்கள். இதுபோன்ற சாலைகளில் சர்வசாதாரணமாக 150 கிமீ வேகம் வரை கார்களை ஓட்டுகின்றனர். இதனால், விபத்துக்களும் அதிக அளவில் ஏற்படுகின்றன.

நெடுஞ்சாலைகளில் 80 கிமீ வேகத்தில் செல்லும்போது நிச்சயம் மிகவும் பாதுகாப்பான பயணத்தை பெற முடியும். அத்துடன், அவசர சமயத்தில் காரை நிறுத்துவதற்கு போதிய அவகாசம் கிடைக்கும். மன அழுத்தமும் குறையும். மேலும், அதிவேகத்தில் சென்றால் கூட குறைந்தது 10 முதல் 20 நிமிடங்கள் மட்டுமே சேமிக்க முடியும்.

நெடுஞ்சாலையில் விபத்துக்கள் ஏற்படுவதற்கு ஓய்வு இல்லாமல் தொடர்ந்து செல்வதும் முக்கிய காரணமாக இருக்கிறது. இரண்டு மணி நேரத்திற்கு ஒருமுறை கண்டிப்பாக 15 நிமிடங்கள் ஓய்வு எடுத்து பயணத்தை தொடர்வது விபத்துக்களை தவிர்க்க சிறந்த உபாயமாக இருக்கும்.

நீண்ட தூர பயணம் செய்யும்போது பெரும்பாலும் பகல் நேரத்திலேயே செல்வது விபத்துக்களை குறைக்க சிறந்த வழி. இரவு நேரத்தில் போதிய பார்வை திறன் கிடைக்காது என்பதுடன், கண்கள் சோர்வடைந்து விபத்துக்கள் ஏற்பட வழிவகுக்கும். எவ்வளவு பிரகாசமான ஹெட்லைட் இருந்தாலும் கூட பகல் வேளையில் செல்வதற்கு இணையாக இருக்காது.

நம் நாட்டு சாலைகளின் வலது ஓரத்தில் செல்வதற்கான தடம் அதிவேக வாகனங்கள் மற்றும் ஓவர்டேக் செய்யும் வாகனங்களுக்கானது என்பதை மனதில் வையுங்கள். ஆனால், மெதுவாக ஊர்ந்து செல்லும் பல வாகனங்கள் வலது ஓர தடத்தில் செல்வதை வழக்கமாக வைத்துள்ளன. அவ்வாறு செல்லும்போது இடது தடத்தில் ஓவர்டேக் செய்யும்போது மிக மிக கவனமாக இருக்க வேண்டும்.

இடதுபுறத்தில் ஓவர்டேக் செய்யும்போது வேகத்தை குறைத்து எச்சரிக்கை உணர்வுடன் செல்லுங்கள். சில வேளைகளில் பழுதான வாகனங்கள் இடதுபுற தடத்தில் நிறுத்தி வைக்கப்பட்டு இருக்கும். எனவே, நின்று கொண்டிருக்கும் வாகனம் மீது மோதுவதற்கு அதிக வாய்ப்புள்ளது. எனவே,இடதுபுற தடத்தில் அதிவேகத்தில் செல்வதை அறவே தவிர்க்கவும்.

காரில் பின்னால் அமர்ந்து செல்லும் பலரும் சீட் பெல்ட் அணிவதில்லை. ஆனால், நெடுஞ்சாலையில் செல்லும்போது அனைவரும் சீட் பெல்ட் அணிந்து செல்வது அவசியம். விபத்துக்களின்போது உயிர் பிழைக்க கடைசி வாய்ப்பாக இதனை கூறலாம்.

காரின் ரகத்திற்கு தக்கவாறு டிரைவிங் செய்வது அவசியம். செடான் கார்களைவிட அதிக கிரவுண்ட் கிளியரன்ஸ் கொண்ட எஸ்யூவி அல்லது எம்பிவி ரக கார்களை வளைவுகளில் அதிவேகத்தில் திருப்பும்போது பாடி ரோல் ஏற்பட்டு கவிழ வாய்ப்புண்டு. இந்த விஷயங்களை மனதில் வைத்து ஓட்டும்போது விபத்துக்களை தவிர்க்க முடியும்.


Click it and Unblock the Notifications








