பள்ளி பேருந்தில் குழந்தைகளை அனுப்பும் பெற்றோர் கடைபிடிக்க வேண்டியவை..!!
பள்ளிக்கு பேருந்தில் செல்லும் குழந்தைகள் பாதுகாப்புடன் பயணிப்பதற்கான எளிய வழிமுறைகள்.
ஆட்டோ, ஷேர் ஆட்டோ, மினி வேன், சைக்கிள் ரிக்ஷா போன்றவற்றை விட பள்ளி குழந்தைகளுக்கு அதிக பாதுகாப்பான பயணத்தை பேருந்துகள் தருகின்றன.

இதனாலேயே குழந்தைகளை பள்ளியில் சேர்க்கும் முன்பு பெற்றோர்கள், அங்கு பேருந்து போக்குவரத்து வசதிகள் உள்ளதா என்பது தற்போது அவர்களிடம் அடிப்படை கேள்வியாக உள்ளது.

பேருந்தில் பள்ளிக்கு வரும் குழந்தைகளை ஓட்டுநரும், ஹெல்பரும் மிகுந்த அக்கறையுடன் பார்த்துக்கொள்வது மிக முக்கியம் தான். அது அவர்களின் கடமையும் கூட

ஆனால் குழந்தைகள் தாங்களாகவே பாதுகாப்பை உணர வேண்டும் என்பது அதை விட முக்கியம். அதற்கான முயற்சில் பெற்றோர்கள் ஈடுபட வேண்டும்.
அதை செய்வது எப்படி என்பதற்கான வழிமுறைகளை தான் இனி நீங்கள் படிக்க உள்ளீர்கள்.

பள்ளி பேருந்து வருவதற்கு முன்
அவசர கதியில் ஓடிப்போய் பேருந்தில் குழந்தையை ஏற்றுவதை செய்யவே கூடாது. அதை குழந்தையின் உளவியலை பாதிக்கக்கூடும்.
பள்ளி பேருந்து வரும் இடத்திற்கு 5 நிமிடத்திற்கு முன்பாகவே குழந்தையை அழைத்து வாருங்கள். இதை முறையாக பின்பற்ற சரியான திட்டமிடல் அவசியம்.

பள்ளி பேருந்து வந்தபின்
சாலையின் ஓரத்தில் குழந்தையை வைத்து நிற்காமல், சாலையில் இருந்து 10 அடி தள்ளி நிற்பது மிக முக்கியம்.
பேருந்து வந்தபிறகு ஓட்டுநர் ஏறலாம் என்று சொன்ன பிறகு குழந்தையை பேருந்தில் ஏற்றுங்கள். முந்திசென்று சீட் போடுவது எல்லாம் வேண்டாத வேலை.

பேருந்தில் ஏறும் போது
பேருந்திற்கு பின்னர் இருந்து ஏறுவதற்கு வாய்ப்பு வந்தாலும் தவிர்த்து விடுங்கள். குழந்தைக்கு எப்போதும் ஓட்டுநர் பார்க்கும் பகுதியில் இருந்து ஏற கற்றுக்கொடுங்கள்.

பேருந்தில் ஏறுவதற்கு முன்னதாக, படிக்கட்டு அருகில் அல்லது பேருந்தை நெருங்கும் வேளையில் வாகனம் ஏதாவது வருகிறதா என்பதையும் கவனிக்க வேண்டும்.

ஜுனியர் பள்ளிக்குழந்தைகளுக்கு வழி விட்ட பின்னர், சீனியர் மாணவ மாணவியர் பேருந்தில் ஏறுவது ஏற்புடைய ஒன்று.

பேருந்தில் உட்கார்ந்த பிறகு
பேருந்து இயக்கத்தில் இருக்கும் போது கையில் இருக்கும் பொருள் கீழே விழுந்தால், அதை குனிந்து எடுக்கும் முன், ஓட்டுநரை அழைக்க குழந்தைக்கு கற்றுக்கொடுங்கள்.
மேலும் ஒட்டுநர் மற்றும் ஹெல்பரின் பெயரை குழந்தைகள் தெரிந்து வைத்திருப்பதும் அவசியம். இது அவர்களின் பாதுகாப்பிற்கு முக்கியம்.

பேருந்து பயணத்தின் போது
ஜன்னல்கள் வழியே வெளிப்புறத்தை பார்க்க குழந்தைகள் அதிக ஆசைப்படுவர். இருந்தாலும் ஜன்னல்களை பிடிப்பதோ, கையை வெளியே நீட்டுவதையோ குழந்தைகள் செய்வதை பார்த்தால், அதை தீவிரமாக கண்டிக்கவும்.

பேருந்து ஓட்டத்தின் போது
மற்ற குழந்தைகளை காயப்படுத்தும் பொருட்களை குழந்தைகள் வைத்திருக்க அனுமதிக்காதீர்கள். மேலும் அவசர கதியில் ஏறினால் குழந்தை ஏறுவதற்கு முன்னர் பேருந்திற்குள் பையை வீசுவதும் பெற்றோர்கள் செய்யக்கூடாது ஒன்று.

குழந்தைகள் இருக்கையை விட்டு எழுவதையோ, அல்லது தண்ணீர் குடிப்பதையோ பார்த்தால் அதை கண்டிக்கவும். மேலும் எந்த நேரத்திலும் குழந்தைகள் ஓட்டுநரின் அருகில் செல்லாமல் இருக்க பார்த்துக்கொள்ள வேண்டும்.

பள்ளிக்கு வந்த பிறகு
குழந்தைகள் பள்ளிக்கு வந்த பின் பேருந்து முழுமையாக நின்றுவிட்டதா என்று பார்த்த பின் தான் இறங்க வேண்டும். இதை பேருந்தில் இருக்கும் ஹெல்பர்கள் குழந்தைக்கு சொல்லி தர வேண்டும்.

பேருந்தில் இருந்து இறங்கும் போது, தரையில் கால் எட்டினால் மட்டுமே ஹேண்டில் பாரை பிடித்து குழந்தையை இறங்கச் சொல்லுங்கள்.இல்லையேல் வேண்டாம் என்று கண்டித்துவிட்டு, குழந்தையை நீங்களே இறக்கி விடுங்கள். படியில் இருந்து குதித்து இறங்குவதையோ, குழந்தைகள் பொருட்களை தூக்கி வீசுவதையோ என்றும் அனுமதிக்காதீர்கள்.

பள்ளி வாகனங்கள் இன்று பல பாதுகாப்பான வழிமுறையோடு செயல்பட்டாலும், குழந்தைகளுக்கு எதை செய்யலாம், எவற்றை எல்லாம் செய்யக்கூடாது என்பதை உணர்த்துவது பெற்றோர்கள் மற்றும் சுற்றத்தார்களின் முக்கிய கடமை.

பள்ளி பேருந்தில் குழந்தைகளை அனுப்பும் பெற்றோர்கள் கடைபிடிக்க வேண்டிய விஷயங்களை பார்த்தோம். இந்த சூழலில், பள்ளி பேருந்துகளில் குழந்தைகளை அனுப்பும் பெற்றோர்களின் வயிற்றில் பால் வார்க்கும் வகையில், தமிழக அரசுக்கு சென்னை உயர் நீதிமன்றம் அதிரடி உத்தரவு ஒன்றை சமீபத்தில் பிறப்பித்தது. இதுகுறித்த விரிவான தகவல்களை தொடர்ந்து பார்க்கலாம்.

இந்தியாவில் இரு சக்கர வாகனங்களில் பயணம் செய்யும் இருவரும் ஹெல்மெட் அணிய வேண்டும் என்பது விதி. சாலை விபத்துக்கள் மற்றும் சாலை விபத்துக்களால் உயிரிழப்பவர்களின் எண்ணிக்கையை குறைக்க வேண்டும் என்பதற்காகவே இந்த விதிமுறை நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளது. ஆனால் பெரும்பாலான இடங்களில் இந்த விதிமுறை பின்பற்றப்படுவது கிடையாது. குறிப்பாக தமிழகத்தில்.

தமிழகத்தில் டூவீலர்களில் பயணம் செய்பவர்கள் ஹெல்மெட் அணியாமல் அலட்சியம் காட்டி வருகின்றனர். ஹெல்மெட் அணிவதன் அவசியம் குறித்த விழிப்புணர்வை தமிழக அரசு வாகன ஓட்டிகளுக்கு தொடர்ந்து ஏற்படுத்தி கொண்டேதான் இருக்கிறது. ஆனால் அரசால் அனைவரையும் ஹெல்மெட் அணிய வைக்க முடியவில்லை.

எனவே டூவீலர்களில் பயணம் செய்யும் இருவரும் கட்டாயம் ஹெல்மெட் அணிய வேண்டும் என்ற விதியை முறையாக அமல்படுத்த அரசுக்கு உத்தரவிட வலியுறுத்தி, சென்னை உயர் நீதிமன்றத்தில் பொது நல வழக்கு தொடரப்பட்டுள்ளது. இது தொடர்பான வழக்கு விசாரணைகளின்போது, தமிழக அரசு மற்றும் காவல் துறையின் செயல்பாடுகளுக்கு நீதிமன்றம் கடுமையான அதிருப்தி தெரிவித்தது.

கட்டாய ஹெல்மெட் விதியை தீவிரமாக அமல்படுத்த தமிழக அரசு மற்றும் காவல் துறை தவறி விட்டது என நீதிபதிகள் கூறினர். எனவே தமிழகத்தில் இனி கட்டாய ஹெல்மெட் விதியை மிக கடுமையாக அமல்படுத்த வேண்டும் எனவும் உத்தரவிட்டனர். நீதிமன்றத்தின் உத்தரவை தொடர்ந்து, ஹெல்மெட் அணியாமல் இரு சக்கர வாகனங்களில் பயணிப்பவர்களுக்கு எதிராக போலீசார் கடும் நடவடிக்கை எடுத்து வருகின்றனர்.

சென்னை உயர் நீதிமன்றத்தின் இந்த உத்தரவு வரவேற்க கூடியதுதான். இருந்தபோதும் சில வாகன ஓட்டிகள் இதற்கு எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். கட்டாய ஹெல்மெட் விதி தொடர்பான உத்தரவுக்கு கலவையான விமர்சனங்கள் வந்து கொண்டிருக்கும் சூழலில், மற்றொரு அதிரடியான உத்தரவை சென்னை ஐகோர்ட் பிறப்பித்துள்ளது.

தமிழகத்தில் இயங்கும் அனைத்து பள்ளி பேருந்துகளிலும் சிசிடிவி கேமராக்கள் மற்றும் ஜிபிஎஸ் கருவிகள் பொருத்துவதை கட்டாயமாக்க வேண்டும், இது தொடர்பான உத்தரவை சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு பிறப்பிக்க வேண்டும் என்பதை வலியுறுத்தி வழக்கறிஞர் கோபி கிருஷ்ணன் என்பவர் சென்னை உயர் நீதிமன்றத்தில் பொது நல வழக்கு தாக்கல் செய்தார்.

இந்த மனு மீதான விசாரணை சமீபத்தில் நடைபெற்றது. அப்போது மாணவ, மாணவிகளின் பாதுகாப்பை உறுதி செய்வதற்காக, பேருந்துகளில் சிசிடிவி கேமரா மற்றும் ஜிபிஎஸ் பொருத்துவதை கட்டாயமாக்கி அதற்கான அறிவுறுத்தல்களை, அனைத்து பள்ளிகளுக்கும் வழங்க வேண்டும் என தமிழக அரசுக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது.

சிபிஎஸ்இ மற்றும் ஐசிஎஸ்இ உள்பட அனைத்து பள்ளிகளுக்கும் இது தொடர்பான அறிவுறுத்தல்களை வழங்க வேண்டும் என தமிழ்நாடு போக்குவரத்து கமிஷனருக்கும் சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது. நீதிபதிகள் மணி குமார் மற்றும் சுப்ரமணியம் பிரசாத் ஆகியோர் அடங்கிய பெஞ்ச் இந்த அதிரடி உத்தரவுகளை பிறப்பித்தது.

முன்னதாக இந்த மனு விசாரணைக்கு வந்தபோது, அரசு தரப்பு வக்கீல் அறிக்கை ஒன்றை தாக்கல் செய்தார். இதில், பேருந்துகளில் சிசிடிவி கேமரா மற்றும் ஜிபிஎஸ் கருவிகள் பொருத்துவதை கட்டாயமாக்கி அதற்கான அறிவுறுத்தல்களை அனைத்து பள்ளிகளுக்கும் வழங்க வேண்டும் என முதன்மை பள்ளி கல்வி செயலாளர் மற்றும் போக்குவரத்து கமிஷனர் ஆகியோரிடம் பள்ளி கல்வி இயக்குனர் கேட்டு கொண்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டிருந்தது.

அத்துடன் சிசிடிவி கேமராக்கள் மற்றும் ஜிபிஎஸ் ஆகியவை அனைத்து நேரங்களிலும் நல்ல முறையில் இயங்குவதை உறுதி செய்ய வேண்டும் எனவும் பள்ளி நிர்வாகங்களிடம் கேட்டு கொள்ளப்பட்டுள்ளதாகவும் அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டிருந்தது. இதுதவிர பள்ளி வளாகத்தில் கட்டுப்பாட்டு அறை மூலமாக பஸ்களின் இயக்கம் நெருக்கமாக கண்காணிப்பட வேண்டும் என உத்தரவிடப்பட்டுள்ளதாகவும் கூறப்பட்டிருந்தது.

இந்த அறிக்கையை நீதிபதிகள் ஏற்றுக்கொண்டனர். இந்த உத்தரவுகள் பள்ளி மாணவ, மாணவிகளின் பாதுகாப்பை இன்னும் உறுதி செய்யும். எனவே பெற்றோர்கள் மத்தியில் இந்த உத்தரவுகளுக்கு வரவேற்பு கிடைத்துள்ளது.


Click it and Unblock the Notifications








