தேசிய சாலை பாதுகாப்பு மாதம்... வாகன ஓட்டிகள் கடைபிடிக்க வேண்டிய சில அடிப்படை விஷயங்கள்!
தேசிய சாலைப் பாதுகாப்பு மாதம் கடைபிடிக்கப்படும் இந்த நேரத்தில், வரும் 2025ம் ஆண்டுக்குள் சாலை விபத்துக்களை 50 சதவீதம் குறைக்க வேண்டும் என்று மத்திய அமைச்சர் நிதின் கட்காரி விருப்பம் தெரிவித்துள்ளார். இந்த வேளையில், விபத்துக்களை தவிர்ப்பதற்கு ஒவ்வொரு ஓட்டுனர்களும் கடைபிடிக்க வேண்டிய சில அடிப்படை விஷயங்கள் குறித்து இந்த செய்தியில் பார்க்கலாம்.

உலகிலேயே அதிக சாலை விபத்துக்கள் நடைபெறும் நாடுகளில் இந்தியா முதன்மையாக இருந்து வருகிறது. ஆண்டுதோறும் 1.50 லட்சம் பேர் சாலை விபத்துககளில் உயிரிழப்பதாகவும், 4.50 லட்சம் பேர் காயமடைந்து வருவதாகவும் புள்ளி விபரங்கள் தெரிவிக்கின்றன.
சாலை விபத்துக்களை குறைக்க பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வந்தாலும், மோசமான சாலை மற்றும் மனித தவறுகளால் அதிக அளவில் சாலை விபத்துக்கள் தொடர்ந்து நடந்த வண்ணம் உள்ளது.

இந்த நிலையில், நாட்டின் 32வது தேசிய சாலைப் பாதுகாப்பு மாதம் குறித்த மாநாட்டில் பேசிய மத்திய சாலைப் போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைத் துறை அமைச்சர் நிதின் கட்காரி, " வரும் 2025ம் ஆண்டுக்குள் சாலை விபத்துக்களின் எண்ணிக்கையை 50 சதவீதம் குறைக்க திட்டமிட்டு இருக்கிறோம். வரும் 2030ம் ஆண்டுக்குள் சாலை விபத்தில்லா நிலையை உருவாக்கும் முயற்சிகளை எடுத்து வருகிறோம்.

சாலை விபத்துக்களை 50 சதவீதம் குறைப்போம் என்று உறுதி அளித்திருந்தோம். அதன்படி, தமிழகத்தில் சாலை விபத்துக்களின் 53 சதவீதம் குறைந்துள்ளது. இதில் தமிழகம் வெற்றி பெற்றுள்ளதை கண்கூடாக காண்கிறோம். வரும் 2030ம் ஆண்டு வரை காத்திருந்தால் 6 முதல் 7 லட்சம் பேர் சாலை விபத்துக்களில் உயிரிழக்கும் அவலம் ஏற்படும்.

இதனை தவிர்ப்பதற்காக சாலைகளில் விபத்துப் பகுதிகளை கண்டறிந்து, அங்கு விபத்தை தவிர்ப்பதற்கான நடைமுறைகளை மேற்கொண்டு வருகிறோம். இதற்காக ரூ.14,000 கோடி திட்டத்தை செயல்படுத்தி வருகிறோம்," என்று குறிப்பிட்டுள்ளார்.

இந்த நிலையில், அரசு எவ்வளவு முயற்சிகளை செய்தாலும், அதற்கு வாகன ஓட்டிகளும் உறுதுணையாக இருப்பது அவசியம். ஓட்டுனர்கள் சாலை விதிகளை மதிப்பதும், தனி நபர் ஒழுங்கை கடைபிடிப்பதும் சாலை விபத்துக்களை மேலும் குறைப்பதற்கான வாய்ப்பாக இருக்கும்.

வாகன ஓட்டிகள் கடைபிடிக்க வேண்டிய சில அடிப்படை விஷயங்களை தொடர்ந்து பார்க்கலாம். இது பலருக்கும் தெரிந்த விஷயமாக இருந்தாலும், நினைவூட்டலாக இது இருக்கும் என்பதால் இந்த செய்தியில் வழங்கி இருக்கிறோம்.

சாலையில் உள்ள சிக்னல்கள் மற்றும் சாலையில் உள்ள வேக வரம்பை முறையாக கடைபிடிப்பது அவசியம். மொபைல்போனில் பேசிக்கொண்டே ஓட்டுவது, பிற பயணிகளுடன் பேசிக்கொண்டு கவனக்குறைவாக வாகனத்தை செலுத்துவதை தவிர்ப்பதும் நல்லது.

மது அருந்தி வாகனம் ஓட்டுவது மிகப்பெரிய பிரச்னையாக உருவெடுத்துள்ளது. எனவே, மது அருந்திவிட்டு வாகனம் ஓட்டுவதை தவிர்த்தால், உங்களுக்கு மட்டுமின்றி, உங்களை நம்பி வாகனத்தில் வரும் பிற பயணிகள் மற்றும் அந்த சாலையில் வரும் பிற வாகன ஓட்டிகளுக்கும் நலம் பயக்கும்.

எங்கு சென்றாலும் சற்று முன்கூட்டியே கிளம்புவது, தேவையற்ற பதட்டத்தையும், வேகமாக வாகனத்தை செலுத்துவதையும் தவிர்க்க உதவும். மேலும், உரிய நேரத்தில் இண்டிகேட்டர்களை பயன்படுத்தி, வளைவுகளில் திரும்புவதும் அவசியமாகும்.

இருசக்கர வாகன ஓட்டிகள் ஹெல்மெட் அணிவதும், அதேபோன்று காரில் செல்வோர் இருக்கை பட்டையை அணிந்து செல்வதும் விபத்து ஏற்பட்டாலும் காயம் மற்றும் உயிரிழப்புகளை தவிர்க்க உதவும். இரண்டும் மிகவும் அடிப்படையான பாதுகாப்பு விஷயமாக கவனத்தில் கொள்ளுங்கள். அலட்சியம் வேண்டாம்.

காரில் நீண்ட தூர பயணங்களின்போது அயர்ந்து போனால், தொடர்ந்து ஓட்டுவது ஆபத்தை விளைவிக்கும். எனவே, சரியான இடைவெளிகளில் அவ்வப்போது சிறிது இடைவேளை எடுத்துக் கொண்டு பயணிப்பது அவசியம். உடல்நலக்குறைவுடன் வாகனம் ஓட்டுவதும் ஆபத்தானது. அவசர விஷயங்களை தவிர்த்து, இரவு நேர பயணங்களை தவிர்ப்பதும் சாலை விபத்துக்களை தவிர்க்க உதவும் உபாயமாக இருக்கும்.

இதுதவிர்த்து, வாகனங்கள் பயணத்திற்கு தகுதியானதாக இருக்கிறதா, டயரில் காற்றழுத்தம், ஹெட்லைட்டுகள் மற்றும் இன்டிகேட்டர்கள் சரியாக வேலை செய்கிறதா உள்ளிட்டவற்றையும் தினசரி பார்ப்பதும் அவசியம். உரிய நேரத்தில் வாகனத்திற்கு பராமரிப்புப் பணிகள் செய்வதும் அவசியம்.

பிற வாகன ஓட்டிகளுடன் போட்டி போட்டு செல்லும் மனப்பான்மையை அறவே கைவிட வேண்டும். அதேபோன்று, சாலையில் விட்டுக் கொடுத்து செல்வதும் மன அழுத்தத்தை குறைத்து நிம்மதியான பயணத்தை வழங்கும். ஒரு சில வினாடிகள் விவேகமாக செயல்பட்டால், அது வாழ்க்கையை தொடர்ந்து வசந்த காலமாக கொண்டு செல்லும். ஒவ்வொரு பயணத்தையும் சந்தோஷமாக மாற்றும்.


Click it and Unblock the Notifications








