கார் திருடுபோவதை தவிர்ப்பதற்கான சில எளிய வழிகள்!
கார்கள் திருடு போகும் சம்பவங்கள் இப்போது வெகுவாக அதிகரித்து வருகிறது. இம்மொபைலைசர் உள்ளிட்ட நவீன தொழில்நுட்பங்களுடன் கார்கள் வந்தாலும், அதனையும் தாண்டி இப்போது அனாயசமாக திருடர்கள் எடுத்துச் செல்கின்றனர். இந்த நிலையில், கார் திருடுபோவதை தவிர்க்க, சில எளிய வழிகளை இங்கே பார்க்கலாம்.

பாதுகாப்பான இடம்
மக்கள் நடமாட்டம் அதிகம் இருக்கும் பகுதிகள், வெளியாட்களை எளிதில் கண்டறியும் பகுதிகளில் நிறுத்துவது நல்லது. காரை யாராவது திருட முயன்றால் எளிதில் கண்டறியும் வகையில் இருத்தல் நலம்.

எச்சரிக்கை ஒலி எழுப்பும் சாதனத்தை வாங்கி பொருத்துவதன் மூலமாக வெளியாட்கள் காரை திருட முயற்சித்தால் எளிதாக கண்டறிய முடியும். மேலும், அலாரம் பொருத்தப்பட்ட காரை திருடர்கள் அவ்வளவு சீக்கிரமாக தொட விரும்புவதில்லை.

ஸ்டீயரிங் லாக்
எஞ்சின் இம்மொபைலைசர் உள்ளிட்ட வசதிகள் இருக்கும் காரை கூட திருடர்கள் எடுத்துச் செல்வதை அண்மைய சம்பவங்கள் உணர்த்துகின்றன. இதுபோன்ற சமயங்களில் ஸ்டீயரிங் வீல் லாக் வாங்கி பொருத்துவதன் மூலமாக, எளிதாக எடுத்துச் செல்வதை தவிர்க்க முடியும்.

கார் கராஜ்
வீட்டில் கார் நிறுத்துவதற்கு போதிய இடவசதி இல்லாதவர்கள், வீட்டின் அருகாமையில் கார்களை பாதுகாக்கும் வசதி கொண்ட கராஜ் அல்லது பகுதி இருந்தால் அதில் நிறுத்தலாம். மாதத்திற்கு ரூ.1,500 வரை வசூலிக்கின்றனர்.
பல லட்சம் மதிப்புடைய காரை பாதுகாப்பதற்கு இது நிச்சயம் ஒரு பெரிய தொகையாக கருத முடியாது. மழை, வெயில், பனி உள்ளிட்டவற்றில் இருந்தும் பாதுகாப்பதற்கும் வழி இருக்கும்.

மதிப்புமிக்க பொருட்கள்
காரில் திருடர்கள் கவனத்தை ஈர்க்கும் வகையில், கேமரா, லேப்டாப், கைப்பைகள் உள்ளிட்ட விலை உயர்ந்த பொருட்களை வைப்பதை தவிர்க்கவும். இது திருடர்களின் கவனத்தை ஈர்ப்பதோடு, சமயத்தில் காருடன் சேர்த்து திருடிச் செல்வதற்கும் வழி வகுக்கும்.

ஹேண்ட் பிரேக்
ஹேண்ட் பிரேக் அல்லது பார்க்கிங் பிரேக் கண்டிப்பாக போட்டு நிறுத்தவும். சிலவேளையில், பிற வாகனங்களில் டோ செய்து எடுத்துச் செல்வதற்கான வாய்ப்புகளும் உண்டு.

கியர் லிவர் லாக்
கியர் லிவரை பூட்டுவதற்கான கருவியை வாங்கி பொருத்திக் கொள்வதும் பயன் தரும். இதனால், எளிதாக காரை திருடிக் கொண்டு செல்வதை தவிர்க்க முடியும்.

மறந்துடாதீங்க
சிலவேளையில், காரை பூட்டுவதற்கு மறந்து விடக்கூடும் அல்லது கார் ஜன்னல் கண்ணாடிகளை மூடுவதற்கு மறந்துவிடுவதும் களவு போவதற்கு வழி வகுக்கும். எனவே, காரை நிறுத்தியவுடன், கார் ஜன்னல்கள் மூடி இருக்கிறதா என்பதையும், பூட்டி விட்டீர்களா என்பதையும் உறுதி செய்து கொள்ளளவும்.

கவனம்
கார் சாவியை காரின் இருக்கையில் அல்லது சட்டை பாக்கெட்டுகளில் பிறர் கவனத்தில் படும்படி இல்லாமல் பார்த்துக் கொள்வதும் நல்லது. இதுவும் திருடர்களின் இலக்குக்கு எளிதாகும் விஷயமாக கூறலாம்.

வீட்டிற்குள் இருக்கும் காரையே திருடிவிடுகின்றனர். ஒருவேளை கார் திருடுபோகும் பட்சத்தில், எளிதாக கண்டறிவதற்கு ஜிபிஎஸ் டிராக்கர் சாதனம் வாங்கி பொருத்துவது பலன் தரும். போலீசார் எளிதாக மடக்கி பிடிக்க இந்த சாதனம் உதவும்.


Click it and Unblock the Notifications








